4வது ரயில் பாதை.. எழும்பூரில் மேஜராக நடந்த மாற்றம்.. தெற்கு ரயில்வே சொன்ன நல்ல செய்தி
சென்னை: சென்னை எழும்பூர் பணிமனையில் முக்கியமான பராமரிப்பு பணிகள் காரணமாக புறநகர் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது. இதனால் மக்கள் வார இறுதி நாட்களில் கடும் அவதிப்படும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில் எழும்பூர் பணிமனையில் பணிகள் நிறைவடைந்துள்ளதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
தாம்பரம், செங்கல்பட்டு, சென்னை கடற்கரை வழித்தடம் தான் மிகவும் முக்கியமான மின்சார ரயில் வழித்தடம் ஆகும்.இந்த வழித்தடத்தில் ரயில்கள் ரத்தானால், மொத்த சென்னையும் ஸ்தம்பிக்கும் அளவிற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படும். ஏராளமான மக்கள் பேருந்துகளில் செல்ல வேண்டிய நிலை ஏற்படும். ஆனால் எத்தனை பேருந்துகளை இயக்கினாலும் அந்த நெரிசலை கட்டுப்படுத்த முடியாது. ஏனெனில் லட்சக்கணக்கான மக்கள் செல்கிறார்கள். மின்சார ரயில்கள் சில மணி நேரம் ரத்தானால், சாலைகளில் வாகன நெரிசலும் கடுமையாகிவிடும். அந்த அளவிற்கு மிகவும் முக்கியமான வழித்தடமாக தாம்பரம், செங்கல்பட்டு, சென்னை கடற்கரை வழித்தடம் இருக்கிறது.

இந்நிலையில் பாதுகாப்பான ரயில் சேவைகள் தருவதற்கு பாதுகாப்பு பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டியது அவசியம் ஆகும். அந்தவகையில், நேற்று முன்தினம் சென்னை எழும்பூர் பணிமனையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மிகப்பெரிய அளவில் எழும்பூர் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டதால் ரயில் சேவைகளையே ரத்து செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. மக்கள் பெரிதும் அவதி அடைந்தனர். இந்நிலையில் வெற்றிகரமாக பணிகளை முடித்துள்ளது ரயில்வே.
இதனிடையே தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: "சென்னை கடற்கரை-எழும்பூர் இடையே புதிய கால்வாய் அமைக்க வேண்டும் என மாநில அரசு கோரிக்கை வைக்கப்பட்டதின் அடிப்படையில் தற்போது பணி முடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னை எழும்பூர் ரெயில் நிலையப் பகுதியில் மழைநீர் தேங்குவது தடுக்கப்படும். இந்த பணிக்காக நேற்று முன்தினம் கடற்கரை-எழும்பூர் இடையே ரயில் சேவை ரத்துசெய்யப்பட்டது.
அதே நேரத்தில் கடற்கரை-எழும்பூர் இடையே மேலும் சில பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக 4-வது ரயில் பாதை அமைப்பதற்காக பூங்கா ரெயில் நிலையத்தில் இரு நடைமேம்பாலமும், கோட்டை ரயில் நிலையத்தில் ஒரு நடைமேம்பாலமும் அகற்றப்பட்டுள்ளது. மேலும், சிக்னல், தொலைத்தொடர்பு சார்ந்த பணிகள், ரெயில் மின்சார கம்பி பராமரிப்பு, தண்டவாளம் பராமரிப்பு உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன. குறிப்பாக எழும்பூர் பணிமனையில் முக்கியமான பராமரிப்பு பணிகள் அனைத்தும் நிறைவடைந்தது.
இந்த வேலைகள் பகல் நேரத்தில் மட்டும் மேற்கொள்ள முடியும் என்பதால் நேற்று முன்தினம் புறநகர் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது. இந்த பணிகளுக்காக 400-க்கும் மேற்பட்ட ரெயில்வே ஊழியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அனைத்து பணிகளும் குறிப்பிட்ட காலத்துக்குள் வெற்றிகரமாக முடிக்கப்பட்டன. இதன் மூலம் சீரான ரெயில் இயக்கம் மற்றும் பயணிகளின் பாதுகாப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதனிடையே 4வது ரயில் பாதை பணிகள் அக்டோபரில் முடியும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.












Click it and Unblock the Notifications