தென் தமிழகத்தில் இன்றும் நாளையும் இடியுடன் மழை- வானிலை ஆய்வு மையம்
சென்னை: தமிழக தமிழக மாவட்டங்களில் இன்றும் நாளையும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திண்டுக்கல்லில் இன்று மாலை காற்றுடன் மழை பெய்தது.
சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கேரளா மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு அரபிக்கடல் பகுதியில் 2.1 கிலோமீட்டர் உயரத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
18.04.2021 முதல் 19.04.2021 வரை: மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், மற்றும் தென் தமிழக (கன்னியாகுமரி, திருநெல்வேலி ,தென்காசி மற்றும் தூத்துக்குடி) மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
மேலும் 20.04.2021 முதல் 22.04.2021 வரை: மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். இவ்வாறு சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.