வந்தாச்சு தீபாவளி… புறப்பட்டாச்சு சிறப்பு பேருந்துகள்.. நவ. 13ம் தேதி வரை பேருந்துகள் இயக்கம்..!
சென்னை: தீபாவளிக்கு சொந்த ஊர்களுக்கு செல்ல அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் இன்று முதல் 15 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த சிறப்பு பேருந்துகள் 13-ஆம் தேதி வரை இயக்கப்படும்.
Recommended Video
தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் சனிக்கிழமை கொண்டாடப்படுகிறது. இதற்காக பணி நிமித்தமாகவோ கல்விக்காகவோ பல இடங்களில் தங்கியுள்ளவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று தீபாவளிப் பண்டிகையை கொண்டாடுவர்.
இதற்காக தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். அந்த வகையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் சொந்த ஊருக்கு செல்ல தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் இன்று முதல் 3 நாட்களுக்கு 15 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

பரிசோதனை
பயணிகளின் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்ட பிறகு பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். தமிழகம் முழுவதும் முக்கிய வழித்தடங்களில் 11 ஆம் தேதி (இன்று) முதல் 13-ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

சென்னை
இந்த 3 நாட்களும் சென்னையில் இருந்து 9,510 பேருந்துகள் மற்ற பகுதிகளிலிருந்து 5,247 பேருந்துகள் என மொத்தம் 14,757 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அனைத்து பேருந்து நிலையங்களிலும் கொரோனா பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுகாதாரத் துறை உள்ளிட்டோர் கிருமிநாசினி தெளிப்பது, தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சமூக இடைவெளி
முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியுடன் செல்வது உள்ளிட்டவை பின்பற்றுவது குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேனர்கள், போஸ்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பணியில் மாநகராட்சி, உள்ளாட்சித் துறை ஆகியவை இணைந்துள்ளன.

கோயம்பேடு
சென்னையில் கூட்ட நெரிசலைக் குறைக்கும் விதமாக கோயம்பேடு, பூந்தமல்லி, மாதவரம், கே கே நகர், தாம்பரம் ஆகிய 5 பேருந்து நிலையங்களில் இருந்து பேருந்துகளை பிரித்து இயக்குவதற்கும் நீண்ட தூரம் செல்லும் விரைவு பேருந்துகள் சென்னை புறநகர் பகுதியான வண்டலூர் கிளாம்பாக்கத்தில் நின்று செல்லவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications