குவைத் தீ விபத்து: 7 தமிழர் உட்பட 45 இந்தியர் உடல்களுடன் கொச்சி வந்தது சிறப்பு விமானம்!
சென்னை: குவைத் தீ விபத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உட்பட 45 இந்தியர்களின் உடல்களுடன் இந்திய அரசின் சிறப்பு விமானம் கேரளாவின் கொச்சி விமான நிலையம் வந்தடைந்தது.
குவைத் நாட்டின் மன்கஃப் பகுதியில் 6 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 6 மாடி கட்டிடம் முழுவதும் கொழுந்துவிட்டு எரிந்தது தீ. இந்த விபத்து நடந்த போது மொத்தம் 150-க்கும் அதிகமானோர் அக்கட்டிடத்தில் உறங்கிக் கொண்டிருந்தனர். இதில் மொத்தம் 45 இந்தியர்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் பலியாகினர். 50-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவர்களில் கேரளாவைச் சேர்ந்த 23 பேரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 பேரும் உயிரிழந்தனர். எஞ்சிய 15 பேரும் ஆந்திரா, பீகார் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.
குவைத் தீ விபத்தில் பலியான 7 தமிழர்கள் விவரம்:
வீராசாமி மாரியப்பன் (தூத்துக்குடி)
சின்னதுரை கிருஷ்ணமூர்த்தி (கடலூர்)
சிவசங்கர் கோவிந்தன் (சென்னை ராயபுரம்)
முகமது ஷெரீப் (திண்டிவனம்)
கருப்பணன் ராமு (ராமநாதபுரம்)
ராஜூ எபநேசன் (திருச்சி)
ரிச்சர்ட் ராய் (பேராவூரணி)
குவைத் தீ விபத்தில் உயிரிழந்த 45 இந்தியர்களின் உடல்களை நாட்டுக்கு கொண்டு வர சிறப்பு விமானம் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. குவைத்துக்கு மத்திய இணை அமைச்சர் கேவி சிங் சென்று இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தார். அத்துடன் தீ விபத்தில் படுகாயமடைந்த இந்தியர்களையும் மத்திய அமைச்சர் கேவி சிங் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

இந்த நிலையில் 7 தமிழர்கள் உட்பட 45 இந்தியர்களின் உடல்களுடன் குவைத்தில் இருந்து இந்திய விமானப் படையின் சிறப்பு விமானம் இன்று அதிகாலை 3.30 மணிக்கு கொச்சி நோக்கிப் புறப்பட்டது. கொச்சியில் இருந்து தமிழ்நாடு, ஆந்திரா, பீகார் உள்ளிட்ட மாநிலங்களுக்கு அம்மாநில அரசு அதிகாரிகளின் ஒருங்கிணைப்பில் உயிரிழந்தோர் உடல்கள் கொண்டு செல்லப்பட்டு சொந்த ஊர்களில் நல்லடக்கம் செய்யப்படும். இந்த விமானம் இன்று காலை 10.30 மணிக்கு கொச்சி வந்தடைந்தது.
கொச்சி விமான நிலையத்தில் கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, மாநிலத்தவரின் உடல்கள் அந்தந்த மாநில அரசுகளிடம் ஒப்படைக்கப்படும். 7 தமிழர் உடல்களை தமிழ்நாடு அமைச்சர் செஞ்சி மஸ்தான் பெற்றுக் கொள்கிறார். இதற்காக செஞ்சி மஸ்தான் கொச்சி விமான நிலையத்தில் காத்திருக்கிறார்.
கொச்சியில் உடல்களை ஒப்படைத்த பின்னர் டெல்லி செல்கிறது சிறப்பு விமானம். அங்கு பஞ்சாப், ஹரியானா, பீகார், உ.பி, ஒடிஷா மாநிலத்தவர் உடல்கள் ஒப்படைக்கப்படும்.
முன்னதாக குவைத்தில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து நேற்று முன் தினம் டெல்லி இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்திற்கு தமது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்த பிரதமர், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்தார். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
#WATCH | Ernakulam: Special IAF aircraft carrying the mortal remains of 45 Indian victims in the fire incident in Kuwait reaches Cochin International Airport.
— ANI (@ANI) June 14, 2024
(Source: CIAL) pic.twitter.com/d42RBDAVNz
மத்திய அரசு இயன்ற அனைத்து உதவிகளையும் வழங்க வேண்டும் என்று பிரதமர் அறிவுறுத்தினார். வெளியுறவுத்துறை இணையமைச்சர் உடனடியாக குவைத் சென்று நிவாரண நடவடிக்கைகளை மேற்பார்வையிடவும், இறந்தவர்களின் உடல்களை விரைவாக திருப்பி அனுப்பவும் உதவ வேண்டும் என்று அவர் உத்தரவிட்டார். உயிரிழந்த இந்தியர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சம் கருணைத் தொகையாக வழங்கப்படும் என்றும் பிரதமர் மோடி அறிவித்திருந்தார்.
இந்தக் கூட்டத்தில் வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர், வெளியுறவுத் துறை இணையமைச்சர் திரு கீர்த்திவர்தன் சிங், பிரதமரின் முதன்மைச் செயலாளர் திரு பிரமோத் குமார் மிஸ்ரா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் திரு அஜித் தோவல், வெளியுறவுத் துறை செயலாளர் திரு வினய் க்வாத்ரா மற்றும் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications