Exclusive: என்னையறியாமல் கண்ணீர் வந்தது... ஏளனத்துக்கு மருந்தாக கிடைத்த பதவி -லியோனி மனைவி அமுதா
சென்னை: தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகத் தலைவராக திண்டுக்கல் லியோனி இன்று முறைப்படி பதவியேற்றுக் கொண்டார்.
அவ்வாறு அவர் பதவியேற்கும் போது உடனிருந்த அவரது மனைவி அமுதா ஆனந்தக்கண்ணீர் வடித்து தனது நெகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
இந்நிலையில் இது தொடர்பாக திண்டுக்கல் லியோனி மனைவி அமுதாவை ஒன் இந்தியா தமிழ் தொடர்பு கொண்டு பேசிய போது அவர் கூறிய விவரம் பின்வருமாறு;

ஏன் அழுதேன்?
''எங்க சார் தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவராக இன்று காலை பதவியேற்கும் போது என்னையறியாமல் நான் அழுதுவிட்டேன். அழுகை வந்ததற்கான காரணத்தை வார்த்தைகளால் விவரிக்க இயலவில்லை. இத்தனை ஆண்டுகால அவரது உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரமாக கருதுகிறேன். 33 ஆண்டுகாலம் அறிவியல் ஆசிரியராக இருந்த இவருக்கு, இந்த பதவியை ஏன் கொடுத்தீர்கள் என கடந்த ஒரு வாரமாக சிலர் விமர்சித்ததை நினைத்து மனைவியாக மிகுந்த வருத்தப்பட்டேன்.''

பொதுவாழ்க்கை
''பொதுவாழ்க்கையில் இது போன்ற விமர்சனங்கள் இருப்பது சகஜம் என எங்க சார் எடுத்துக்கூறினார். பணத்தையோ, பதவியையோ எதிர்பார்த்து அவர் திமுகவில் இணையவில்லை. கலைஞர் மீதும் அவர் தமிழ் மீதும் எங்க சார் உயிரே வைத்திருக்கிறார். எங்கள் உறவினர்கள், நண்பர்களில் பலர் எதுக்குமா இவருக்கு இந்த வேண்டாத வேலை, அரசியல், கட்சின்னு சுத்துவதை விட்டுபுட்டு பட்டிமன்றத்தை மட்டும் கவனிக்க வேண்டியதுதானே என என்னிடமே கேட்டிருக்கிறார்கள்.''

ஏளனம்
''கட்சி கட்சின்னு இவரு ஓடுறாரே, என்ன செய்யப்போது கட்சின்னு எத்தனையோ பேர் சொந்தபந்த இல்ல நிகழ்ச்சிகளில் பார்க்கும் போது என்னிடம் கேட்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட ஏளனங்களுக்கெல்லாம் மருந்தாக இந்த பதவியை கொடுத்து அங்கீகரித்திருக்கிறார் முதலமைச்சர். முதலமைச்சருக்கும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கும் என்றும் நன்றிக்கடன் பட்டுள்ளோம்.''

பட்டிமன்றம்
''உண்மையான உழைப்புக்கு இன்று இல்லாவிட்டாலும் என்றாவது ஒருநாள் பலன் கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. இன்று அந்த நம்பிக்கை உண்மையாகியுள்ளது. தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவராக இருப்பதால், பட்டிமன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்பது குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. முதலமைச்சரிடமும், அமைச்சரிடமும் இது குறித்து பேசி அவர்களது வழிகாட்டுதலுடன் எங்க சார் செயல்படுவார்.''












Click it and Unblock the Notifications