மதுரை, திருச்சி மக்களே நோட் பண்ணிக்கோங்க.. நாளை சென்னைக்கு சிறப்பு ரயில் இயக்கம்
சென்னை: தீபாவளி பண்டிகைக்காக சென்னையில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் வெளியூர்களுக்கு சென்றுள்ளனர். நாளை இந்த விடுமுறை நிறைவடைய உள்ளது. இதனால் சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் மீண்டும் சென்னை வரவுள்ளனர். இந்நிலையில் திருச்சி மற்றும் மதுரையில் இருந்து நாளை சிறப்பு முன்பதிவில்லா ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தீபாவளி பண்டிகை நேற்று முன்தினம், அக்டோபர் 31 ஆம் தேதி கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு தமிழ்நாட்டில் 4 நாட்கள் தொடர் விடுமுறை நிலவி வருகிறது. கல்வி நிறுவனங்கள் 30 ஆம் தேதி மதியம் முதலே விடுமுறையில் உள்ளன. தொடர் விடுமுறை காரணமாக லட்சகணக்கான மக்கள் வெளியூர் பயணம் செய்துள்ளனர். சென்னையில் இருந்து லட்சக்கணக்கான மக்கள்தென் மாவட்டங்கள் உள்ளிட்ட தங்களின் ஊர்களுக்கு பேருந்து மற்றும் ரயில்களில் பயணித்தனர்.

பேருந்து, ரயில், விமானம் என்று அனைத்து போக்குவரத்திலும் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. மக்களின் வசதிக்காக சிறப்பு பேருந்து மற்றும் ரயில்கள் இயக்கப்பட்டன. வழக்கம்போல ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக மக்கள் புகார் கூறினர். கூட்டம் அதிகமாக இருந்ததாலும், சரியான திட்டமிடல் இல்லாததும் மக்களுக்கு இன்னல்களை ஏற்படுத்தியது.
தொடர் விடுமுறை நாளை ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைகிறது. திங்கள் கிழமை முதல் இயல்பு வாழ்க்கை திரும்புகிறது. இதன் காரணமாக நாளை மீண்டும் மக்கள் தங்கள் பணி, கல்விக்காக பயணிக்க வேண்டிய கட்டயாத்தில் உள்ளனர். அதிகளவு மக்கள் பணிப்பார்கள் என்பதால் ரயில் மற்றும் பேருந்து போக்குவரத்துக்கு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சுமார் 10 லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் சென்னையில் இருந்து வெளியூர் சென்றுள்ளனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இந்நிலையில், தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர்களுக்குச் சென்றவர்கள் சென்னை திரும்ப வசதியாக, நாளை கோவை, மதுரை மற்றும் திருச்சி ரயில் நிலையங்களில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஏற்கனவே நாளை நவம்பர் 3 ஆம் தேதி, கோவை போத்தனூர் ரயில் நிலையத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு சிறப்பு முன்பதிவல்லா ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்தது. 06160 என்ற எண் கொண்ட ரயில் போத்தனூர் ரயில் நிலையத்தில் இருந்து நாளை காலை 7.45 மணிக்கு புறப்பட்டு, மாலை 4.50 மணியளவில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் சென்றடைய உள்ளது.
இதேபோல மதுரை மற்றும் திருச்சி ரயில் நிலையங்களில் இருந்தும் நாளை சென்னை தாம்பரம் ரயில் நிலையத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மதுரை ரயில்நிலையத்தில் இருந்து சென்னை தாம்பரம் ரயில் நிலையத்துக்கு நாளை மாலை 7.15 மணியளவில் சிறப்பு ரயில் புறப்பட உள்ளது.
மேலும் திருச்சி ரயில் நிலையத்தில் இருந்து நாளை இரவு 10.50 மணிக்கு சிறப்பு முன்பதிவில்லா ரயில் சென்னை தாம்பரம் ரயில் நிலையத்துக்கு புறப்பட உள்ளது. மக்கள் இந்த சேவையை பயன்படுத்தி சிரமம் இல்லாமல் பயணிக்கவும் என்றும் தெற்கு ரயில்வே கேட்டுக் கொண்டுள்ளது.












Click it and Unblock the Notifications