கருப்பு முகமூடி! கையில் பயங்கர ஆயுதம்! இலங்கையில் மீண்டும் வலம்வரும் "ரைடர்ஸ்".. பின்னணியில் ராணுவம்
சென்னை: இலங்கையில் ராணுவ வீரர்கள் மாஸ்க் அணிந்து பைக்கில் வலம்வருவது அப்போது மக்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. ஒரு காலத்தில் தமிழர்களை கடுமையாக எதிர்த்த இந்த ராணுவ வீரர்களின் படை தற்போது சமீப கால போராட்டத்தால் சிங்கள மக்களையும் எதிர்க்க தொடங்கி உள்ளது.
இலங்கையில் கடுமையான பொருளாதார சரிவு நிலவி வருகிறது. அங்கு இதனால் பொது மக்கள் வீதியில் இறங்கி போராடி வருகிறார்கள். அதிலும் கடந்த ஒரு மாதமாக போராட்டம் உச்சம் அடைந்துள்ளது.
அங்கு மக்கள் போராட்டத்தை தொடர்ந்து அமைச்சரவை மொத்தமாக ராஜினாமா செய்துள்ளது. ஆனால் இன்னும் போராட்டம் நிற்கவில்லை. அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே இருவரும் ராஜினாமா செய்யும் வரை போராட்டம் நிற்காது என்று கூறி மக்கள் போராட்டம் செய்து வருகின்றனர்.

ராணுவம் வழக்கு
அங்கு போராடும் மக்கள் மீது ராணுவம் தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் ஆங்காங்கே நடந்து வருகின்றன. முக்கியமாக மக்கள் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது தீவிரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. முன்னர் தமிழர்களை ஒடுக்க இந்த தீவிரவாத தடுப்பு சட்டம் பயன்படுத்தப்பட்டது. தற்போது அந்நாட்டை சேர்ந்த சிங்கள மக்கள் மீதும் இந்த தீவிரவாத தடுப்பு சட்டம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

யார் இவர்கள்?
இந்த நிலையில்தான் கடந்த சில நாட்களாக இலங்கை ராணுவத்தின் ரைடர் பிரிவினர் மீண்டும் சாலைகளில் தென்பட தொடங்கி உள்ளனர். நவீன பைக்குகளில் முகத்தை மாஸ்க் மூலம் மூடி , கையில் துப்பாக்கிகளுடன் வலம் வரும் ராணுவ பிரிவினர் ஆவர். இவர்கள் வலிமை படத்தில் வரும் வில்லன்கள் போன்ற தோற்றத்தில் இருப்பார்கள். ஆனால் இவர்களும் ராணுவத்தின் ஒரு பிரிவினர்தான்.

உள்ளே புகுந்து வந்தனர்
இலங்கையில் உள்நாட்டு யுத்தம் நடந்த போது இவர்கள் பல கிராமங்களில் அதிகம் தென்பட்டனர். தமிக் மக்கள் மீது கடுமையான தாக்குதல்களை நடத்தியதாக இவர்கள் மீது புகார்களும் உள்ளன. தற்போது இலங்கையில் போராட்டம் நடத்தப்பட்டு வரும் நிலையில் இலங்கையில் இந்த ராணுவ பிரிவினர் மீண்டும் தென்பட தொடங்கி உள்ளனர். சமீபத்தில் அதிபர் மாளிகையில் இருந்து இவர்கள் பைக்கில் வந்தது குறிப்பிடத்தக்கது.

போலீசார் வாக்குவாதம்
அப்போது அதிபர் மாளிகைக்கு வெளியே மக்கள் போராட்டம் செய்து வந்தனர். இந்த நிலையில் அங்கு பைக்கில் மாஸ்க் அணிந்து, நம்பர் பிளேட் இல்லாமல், கையில் ஆயுதங்களோடு வந்த இவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்தனர். இவர்களிடம் மக்களும் மோதலுக்கு சென்றதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் வீடியோவாகவும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதன்பின் இலங்கை ராணுவத்தின் தளபதி ஷவேந்திர சில்வா அந்நாட்டு போலீசை விமர்சனம் செய்தார்.

ராணுவம் கேள்வி
அவர்கள் ராணுவத்தின் ரைடர் பிரிவை சேர்ந்தவர்கள். அவர்கள் ராணுவ தலைமையகத்தின் உத்தரவின் பெயரில் செயல்படுகிறார்கள். அவர்களை தடுக்க போலீசுக்கு உரிமை இல்லை. போலீஸ் அவர்களிடம் விசாரணை செய்தது சட்டப்படி தவறு. இதனால் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராணுவ தளபதி சில்வா உத்தரவிட்டுள்ளார். மீண்டும் இலங்கையில் ராணுவத்தின் ரைடர் பிரிவு பல இடங்களில் தென்படுவது அங்கு நிலவும் அசாதாரண சூழ்நிலையை உணர்த்தி உள்ளது.












Click it and Unblock the Notifications