பெரியார் சிலையை அகற்றினால் டெல்லியில் பாஜக ஆட்சி தூக்கி எறியப்படும்: திமுக ஆர்.எஸ்.பாரதி அட்டாக்
சென்னை: ஶ்ரீரங்கம் கோவில் முன்பாக உள்ள தந்தை பெரியார் சிலையை அகற்றினால் மத்தியில் உள்ள பாஜக ஆட்சி தூக்கி எறியப்படும் என திமுக மூத்த தலைவர் ஆர்.எஸ். பாரதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஶ்ரீரங்கம் அரங்கநாத பெருமாள் கோவில் முன்பாக கடவுள் மறுப்பு வாசகங்களுடன் தந்தை பெரியார் சிலை அமைக்கப்பட்டுள்ளது. ஶ்ரீரங்கம் நகராட்சி சார்பாக, திராவிடர் கழகத்துக்கு நிலம் கொடுக்கப்பட்டு இந்த சிலை அமைக்கப்பட்டது.

ஶ்ரீரங்கத்தில் நேற்று தமது பாதயாத்திரையின் போது பேசிய தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, கோவில் முன்பாக கடவுள் மறுப்பு வாசகங்களுடன் சிலை வைக்கப்பட்டுள்ளது. இதனை 1967-ல் திமுகதான் வைத்தது. தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி அமைந்த உடன் முதல் நொடியிலேயே இந்த கடவுள் மறுப்பு வாசகமும் சிலையும் அகற்றப்படும். இந்த இடத்தில் ஆழ்வார்கள், நாயன்மார்கள் சிலை வைக்கப்படும்; திருவள்ளுவர் சிலை வைக்கப்படும் என்றார்.
அண்ணாமலையின் இந்த பேச்சுக்கு பல்வேறு தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, தமிழ்நாட்டில் பாஜக ஒருபோதும் ஆட்சிக்கு வரவே வராது என பதிலடி கொடுத்திருந்தார். திமுக மூத்த தலைவர் ஆர்.எஸ். பாரதி, தம்ழிநாட்டில் பெரியார் சிலை அகற்றப்பட்டால் மத்தியில் பாஜக ஆட்சியும் அகற்றப்படும் என்றார்.
திராவிடர் இயக்க எழுத்தாளர் வே.மதிமாறன், இப்பதான் நிம்மதியா இருக்கு. இனி எப்பவுமே பெரியார் சிலை அகற்றப்படாது என உறுதியளித்த அண்ணாமலைக்கு நன்றி. அதேபோல் அறநிலையத்துறையும் எப்போதுமே அசைக்கக் கூட முடியாது எனவும் உத்திரவாதம் தந்திருக்கிறார். மகிழ்ச்சி என கிண்டலடித்துள்ளார். ஏற்கனவே விசிக துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசும் அண்ணாமலையின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

மேலும் சமூக வலைதளங்களிலும் அண்ணாமலையின் கருத்துக்கு கண்டனம் தெரிவிக்கப்படுகிறது. இதேபோல பாஜகவின் கனல் கண்ணன், ஶ்ரீரங்கம் தந்தை பெரியார் சிலையை தகர்ப்பேன் என பேசியது பெரும் பிரச்சனையானது. பின்னர் போலீசார் வழக்கு பதிவு செய்ய புதுச்சேரியில் கனல் கண்ணன் பதுங்கிய நிலையில் கைது செய்யப்பட்டதையும் சமூக வலைதளங்களில் பலரும் சுட்டிக்காட்டி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications