சென்னை திருவொற்றியூரில் தேங்கி கிடந்த மழைநீரில் மின் கசிவு.. டியூசன் சென்று வந்த பள்ளி மாணவன் பலி
சென்னை: சென்னை திருவொற்றியூரில் தேங்கிக் கிடந்த மழைநீரில் மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவன் உயிரிழந்துள்ளான். திருவொற்றியூரில் நேற்று கனமழை காரணமாக தேங்கியிருந்த மழைநீரில் புதைவட மின் கம்பியில் இருந்து மின்சாரம் கசிந்துள்ளது. இதில் டியூசன் சென்றுவிட்டு அந்த வழியாக வந்த சிறுவன் மீது மின்சாரம் பாய்ந்ததில் அவன் உயிரிழந்துள்ளான்.
மின்சார வாரியத்தின் அலட்சியம் காரணமாகவே இந்த சம்பவம் நடந்ததாகவும், ஏற்கனவே இதே இடத்தில் 2 மாணவர்கள் உயிரிழந்தாகவும் கூறி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் லேசான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சென்னை திருவொற்றியூர் பீர் பயில்வான் பகுதியில் வசித்து வருபவர் நவாப். பள்ளி மாணவனான இவர் நேற்று இரவு டியூசன் சென்றிருக்கிறார். பின்பு வீட்டுக்கு நடந்து வந்துகொண்டிருந்தார். அப்போது அங்கு சாலையில் நேற்று மழையின் காரணமாக தண்ணீர் தேங்கி கிடந்துள்ளது. இதில் பூமிக்கு அடியில் பதிக்கப்பட்டிருந்த மின் கம்பியில் இருந்து அந்த மழைநீரில் மின்சாரம் பாய்ந்துள்ளது.
இந்த நிலையில் அதில் மிதித்த மாணவன் மின்சாரம் பாய்ந்து சுருண்டு விழுந்தான். சத்தம் கேட்டு வந்த அப்பகுதி மக்கள் அவனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் அவர் உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது மின் வாரியத்தின் அலட்சியத்தின் காரணமாகவே உயிரிழந்ததாக கூறி அப்பகுதி மக்கள் போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர். இதனால் அப்பகுதியில் லேசான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications