புதுக்கோட்டையில் தமிழ்நாட்டின் 3வது அரசு பல் மருத்துவக் கல்லூரி! திறந்து வைத்த முதலமைச்சர்!
சென்னை: புதுக்கோட்டையில் தமிழ்நாட்டின் 3வது அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை முதலமைச்சர் ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இருந்தவாறு காணொலி மூலம் திறந்து வைத்தார்.
தமிழ்நாட்டு மக்களுக்கு உயர்தர மருத்துவ வசதிகள் கிடைத்திட, புதிய அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களை கட்டுதல், மருத்துவமனைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், மருத்துவக் கருவிகளை நிறுவுதல், அனைவருக்கும் நலவாழ்வு என்கிற உயரிய நோக்கினை செயல்படுத்தும் வகையில் "மக்களைத் தேடி மருத்துவம்" சாலை விபத்துக்களில் உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் "இன்னுயிர் காப்போம்-நம்மைக் காக்கும்-48", நலவாழ்வு நடைப்பயிற்சி 8 கி.மீ. சுகாதார நடைபாதை திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை சுகாதாரத்துறை துறை வாயிலாக தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.

70 ஆண்டுகளுக்கு பிறகு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாக, புதுக்கோட்டையில் 67 கோடியே 83 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள தமிழ்நாட்டின் மூன்றாவது அரசு பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
இக்கல்லூரியில் 2023-2024 ஆண்டிலிருந்து ஆண்டுதோறும் 50 மாணவர்கள் சேர்க்கைக்காக அனுமதி பெறப்பட்டுள்ளது. இந்த அரசு பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை 10.14 ஏக்கர் பரப்பளவில் மருத்துவமனை மற்றும் நிர்வாகக் கட்டடம், மாணவ மாணவியர் விடுதிக் கட்டடம், ஆசிரியர் மற்றும் முதல்வர் தங்கும் விடுதி போன்ற வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.
கூடுதலாக, பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமணைக்கு 5 கோடியே 10 இலட்சம் ரூபாய் மதிப்பிலான தேவையான அதிநவீன உபகரணங்கள் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, இக்கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு தேவையான ஆசிரியர், நிர்வாகம், மற்றும் கல்விசாரா பணிகளுக்கு 148 பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டுள்ளது.
இப்புதிய புதுக்கோட்டை அரசு பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமணை இந்தியாவிலேயே மிகச் சிறந்த கட்டமைப்புகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், தமிழகத்தின் மத்திய பகுதியில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு தரமான பல் மருத்துவச் சிகிச்சை பெறுவதற்கு வழிவகை ஏற்படும்.












Click it and Unblock the Notifications