கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே 2 அணைகள் கட்டும் முடிவில் ஆந்திரா! ஜெகன் மோகன் ரெட்டிக்கு ஸ்டாலின் கடிதம்!
சென்னை: கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே புதிய அணை கட்டும் திட்டத்தை கைவிட வேண்டும் என ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருக்கிறார்.
தமிழக அரசை கலந்து ஆலோசிக்காமல் புதிய அணை தொடர்பாக எந்த திட்டத்தையும் ஆந்திர அரசு செயல்படுத்தக் கூடாது என ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் எழுதிய கடிதத்தின் விவரம் வருமாறு;
கொசஸ்தலை ஆறு
சித்தூர் மாவட்டத்தில் உள்ள முக்களகண்டிகை மற்றும் கதரப்பள்ளி கிராமங்களுக்கு அருகில் கொசஸ்தலையாற்றின் குறுக்கே இரண்டு நீர்த்தேக்கங்கள் கட்ட ஆந்திர அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நடவடிக்கை சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் குடிநீருக்கும், பாசனத்துக்கும் குறைந்த அளவிளான ஆற்றின் ஓடையை நம்பி வாழும் மக்களிடையே பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
குடிநீர் ஆதாரம்
கொசஸ்தலையாறு ஆற்றுப்படுகை மற்றும் கொசஸ்தலையாறு ஆகிய இரண்டும் இரு மாநிலங்களுக்கு இடையே உள்ளவை என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். ஆற்றுப் படுகையின் மொத்தப் பரப்பளவு 3727 சதுர கி.மீ. இதில் 877 சதுர கி.மீ. ஆந்திரப் பிரதேசத்தில் உள்ளது மற்றும் 2850
சதுர கி.மீ. தமிழ்நாட்டில் உள்ளது. கொசஸ்தலையாற்றின் குறுக்கே பூண்டி நீர்த்தேக்கம் கட்டப்பட்டுள்ளது, இது சென்னை மாநகரப் பகுதியின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது.
வாழ்வாதாரம் பாதிக்கும்
ஆற்றின் குறுக்கே இதுபோன்ற புதிய நீர்த்தேக்கங்கள் கட்டப்பட்டால், அதன் துணை ஆறுகள் அல்லது துணை நதிகள் பூண்டி நீர்த்தேக்கத்திற்கு வரும் நீர்வரத்தை பாதிக்கும். இதனால் சென்னை நகரின் குடிநீர் விநியோகம் கடுமையாக பாதிக்கப்படுவதுடன், மேல்பகுதியில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்படும். மேலும், இது அந்த பகுதியில் உள்ள பாசனத்தையும் பாதித்து, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும்.
நீங்கள் அறிவுறுத்துங்கள்
மாநிலங்களுக்கு இடையேயான நதியாக இருப்பதால், கீழ் கரையோர மாநிலத்தின் அனுமதியின்றி, கொசஸ்தலையாற்றின் குறுக்கே மேல் கரையோர மாநிலம் எந்த புதிய கட்டமைப்பையும் திட்டமிடவோ, ஒப்புதல் அளிக்கவோ, கட்டவோ முடியாது. எனவே, இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது ஏமாற்றமளிக்கிறது. எனவே, மேற்குறிப்பிட்ட திட்டங்களை செயல்படுத்த வேண்டாம் என்றும், ஆந்திராவில் உள்ள கொசஸ்தலையாறு ஆற்றுப்படுகை பகுதியில் எந்த புதிய திட்டங்களையும் மேற்கொள்ள வேண்டாம் என்றும், உங்கள் அரசாங்கத்தில் உள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.
3 ட்விஸ்டுகள்.. 4 பூதங்கள்.. அதிமுக வழக்கில் ஓபிஎஸ் தோற்றால் என்ன நடக்கும் தெரியுமா? பரபர பின்னணி