பெரம்பலூரில் கே.என்.நேரு பேசுவார்! முதலமைச்சர் ஸ்டாலின் நிகழ்ச்சி ரத்து! திமுக திடீர் அறிவிப்பு!
சென்னை: நவம்பர் 4ஆம் தேதி பெரம்பலூரில் நடைபெறும் இந்தி எதிர்ப்பு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசுவார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இப்போது அதில் மாற்றம் செய்யப்பட்டு அமைச்சர் கே.என்.நேரு பேசுவார் என திமுக தலைமைக்கழகம் அறிவித்துள்ளது.
இதன் மூலம் முதலமைச்சர் ஸ்டாலினின் பெரம்பலூர் நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவது உறுதியாகியுள்ளது.
ஏற்கனவே ஒரு முறை பெரம்பலூர் மாவட்ட அரசு நிகழ்ச்சிகளில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொள்வதாக இருந்து ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்தி எதிர்ப்பு
இந்தி தொடர்பாக நாடாளுமன்ற அலுவல் மொழி நிலைக்குழு அளித்த பரிந்துரையை கண்டித்து இந்தியாவிலேயே முதல் கண்டன அறிக்கையை வெளியிட்டவர் முதலமைச்சர் ஸ்டாலின். அதோடு திமுக இளைஞர் அணியை மாநிலம் முழுவதும் கடந்த மாதம் 15ஆம் தேதி கண்டன ஆர்பாட்டமும் நடத்த வைத்தார் ஸ்டாலின். இதேபோல் கடந்த 18ஆம் தேதி தமிழக சட்டமன்றத்தில் இந்தி எதிர்ப்பு தீர்மானம் ஒன்றும் கொண்டு வரப்பட்டது. இப்படியாக இந்தி திணிப்புக்கு எதிராக பல்வேறு வழிகளில் திமுக தனது எதிர்ப்பை பதிவு செய்தது.

விளக்கப் பொதுக்கூட்டம்
தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட இந்தி எதிர்ப்பு தீர்மானத்தை தமிழக மக்களிடையை விளக்கிடும் வகையிலும் - அலுவல் மொழி தொடர்பான நாடாளுமன்ற குழு அறிக்கையை ஏற்க கூடாது என மத்திய அரசை வலியுறுத்தியும், அனைத்து மாவட்டங்களிலும் வருகிற 4ஆம் தேதி "இந்தித் திணிப்பு எதிர்ப்புத் தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம்'' நடைபெறும் என திமுக தலைமை அறிவித்திருந்தது. அந்த வகையில் பெரம்பலூரில் நடைபெறும் இந்தி எதிர்ப்பு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் உரை நிகழ்த்துவார் என அறிவிக்கப்பட்டிருந்தது.

திடீர் மாற்றம்
இந்நிலையில் அதில் திடீர் மாற்றமாக பெரம்பலூரில் மட்டும் நவம்பர் 5ஆம் தேதி இந்தி எதிர்ப்பு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெறும் என்றும் அதில் அமைச்சர் கே.என்.நேரு கலந்துகொண்டு பேசுவார் எனவும் நேற்றிரவு புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் மூலம் பெரம்பலூர் மாவட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துகொள்ளவிருந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது. இதனிடையே ஏற்கனவே ஒரு முறை பெரம்பலூர் மாவட்ட அரசு நிகழ்ச்சிகளில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொள்வதாக இருந்து ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மருத்துவர்கள் அறிவுறுத்தல்
முதுகு வலிக்கு சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் ஸ்டாலினிடம், சிறிது நாட்கள் வெளியூர் பயணங்களை முடிந்தவரை தவிர்க்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதால் அவரது நிகழ்ச்சி நிரல்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications