எனது பேச்சை டேப் செய்யட்டும்... தெரிந்து தான் டெலிபோனில் பேசினேன்... ஸ்டாலின் பரபரப்பு பேச்சு
சென்னை: தனது பேச்சை டேப் செய்து அரசு கேட்கட்டும் என்பதற்காக தான் போராட்டம் குறித்து டெலிபோனில் தாம் பேசியதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை ராயபுரத்தில் நடைபெற்ற கிராம/வார்டு சபை கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனைக் கூறினார்.
அவர் ஆற்றிய உரையின் முழு விவரம் பின்வருமாறு;
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் பொள்ளாச்சியில் நடந்த சம்பவம் உங்களுக்குத் தெரியும். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது நாடு முழுவதும் அதைப் பேசிக் கொண்டிருந்தார்கள். பொள்ளாச்சியில் 250 இளம்பெண்களைக் கடத்திக் சென்று, ஒரு பங்களாவில் அடைத்து வைத்து, அவர்களைக் கட்டாயப்படுத்தி, பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்கள்.
அத்தோடு விடாமல், அதனை வீடியோ எடுத்து - நீ மீண்டும் வரவில்லை என்றால் இதை இணையதளங்களில் வெளியிட்டு விடுவோம், சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவோம் - என்று மிரட்டி, அச்சுறுத்தி இருக்கிறார்கள். அவை சில இணையதளங்களில் வந்ததை எல்லாம் நீங்கள் பார்த்திருப்பீர்கள். "அண்ணா என்னை விட்டு விடுங்கள்" என்று கெஞ்சுவதை எல்லாம் நீங்கள் கேட்டிருப்பீர்கள்.
இந்த விஷயம் வெளியே வந்துவிட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னாலேயே வெளியே வந்துவிட்டது. ஆனால் இப்பொழுது 4 நாட்களுக்கு முன்னால் சி.பி.ஐ. 3 பேரைக் கைது செய்திருக்கிறது. கைது செய்யப்பட்டவர் யார் என்றால், அ.தி.மு.க.வைச் சேர்ந்த மாணவரணிச் செயலாளராக பொறுப்பில் இருப்பவர்.
போராட்டம் நடந்தால், அ.தி.மு.க. அரசின் வண்டவாளம் தண்டவாளம் ஏறிவிடும் அல்லவா? அதற்காகத் திட்டமிட்டு இதைத் தடுக்க முயற்சித்தார்கள்.
அப்பொழுது கனிமொழி அவர்கள் தொலைபேசியில் என்னைத் தொடர்பு கொண்டார்கள். இதேபோல, எங்களைத் தடுத்து நிறுத்துகிறார்கள் என்ன செய்வது என்று கேட்டார்கள். தடுத்து நிறுத்தினால் அந்தத் தடையை மீறிச் செல்லுங்கள், கவலைப்படாதீர்கள் என்று நான் கூறினேன்.
அந்தத் தடையை மீறிச் சென்று விட்டார்கள். அப்பொழுதும் விடவில்லை. அதற்குப் பிறகு நான் காவல்துறை அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு, நம்முடைய அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஆகியோரை அழைத்து, டி.ஜி.பி.யிடம் பேசச் சொன்னேன்.
"அனுமதி வழங்கவில்லை என்றால், நாளை தமிழ்நாடு முழுவதும் இருக்கும் மகளிரைத் திரட்டி எல்லா இடங்களில் ஆர்ப்பாட்டம் நடக்கும் என்று அறிவித்தேன். அதுவும் நானே அந்தப் போராட்டத்திற்குச் செல்வேன்" என்று கூறினேன்.
இந்த விஷயத்தை நான் டெலிபோனில் பேசினேன். ஏனென்றால் அப்போதுதான் இந்த விஷயம் 'டேப்' ஆகி, இந்தச் செய்தி உடனடியாக ஆளுங்கட்சிக்கு செல்லும் என்பது தெரியும். அவ்வாறே சென்றது. உடனே அதற்கு அனுமதித்து, போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. எதற்காக இதை சொல்கிறேன் என்றால், இவ்வளவு அநியாமான, சர்வாதிகார ஆட்சி இன்று தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது.
சசிகலா விடுதலைக்கு பிறகு... சரணடைந்து விடுவார் முதல்வர்... உதயநிதி ஸ்டாலின் பேச்சு..!
நான் இன்று அரசியலில் இவ்வாறு ஈடுபடுகிறேன் என்றால் என்னுடைய மனைவி எனக்கு பக்கபலமாக இருக்க வேண்டும், எனக்கு ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டும். அதேபோல இங்கு இருக்கக்கூடிய எல்லா ஆண்களின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் நிச்சயமாக இருக்கிறார். அதனால் தான் பெண்களுக்கு முக்கியத்துவம் தரக்கூடிய கட்சியாக தி.மு.க. இருக்கிறது. ஆட்சியில் இருந்தாலும், இல்லை என்றாலும் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கட்சி தி.மு.க.
இந்த இராயபுரத்தில் இருக்கும் எம்.எல்.ஏ. யார் என்று உங்களுக்கு தெரியும். எப்போதும் அவரை "முந்திரிக் கொட்டை, முந்திரிக் கொட்டை" என்று சொல்வார்கள். எதற்கு அவ்வாறு சொல்கிறார்கள் என்றால் வேறு யாராவது பதில் சொல்ல வேண்டும் என்று சொன்னால் அந்த அமைச்சர் பதில் சொல்வதற்கு முன்னால் இவர் முந்திக் கொண்டு சொல்லிவிடுவார். அதனால் அவரை அவ்வாறு சொல்வார்கள். யாரைக்கேட்டாலும் அவசரப்பட்டு முந்திக் கொண்டு வந்து பதில் சொல்லும் இவர், தனது தொகுதிப் பணிகளைச் செய்வதிலும் அந்த அவசரத்தைக் காட்ட வேண்டும் அல்லவா?
மீனவர்கள் கடலுக்கு சென்று, உயிரைப் பணயம் வைத்து, இந்தத் தொழில் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் பாதுகாப்பிற்காக வாக்கி டாக்கி வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். அதில் பல முறைகேடுகள் நடந்து இருக்கிறது. கிட்டத்தட்ட 30 கோடி ரூபாய் முறைகேடு செய்திருக்கிறார் மீன்வளத்துறை அமைச்சராக இருக்கும் ஜெயக்குமார் அவர்கள்.
சமூக வலைதளங்களில் கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தினால்... நடவடிக்கை பாயும்... காங்கிரஸ் எச்சரிக்கை..!
இங்கு ஒரு மேம்பாலத்தை கூட கட்டுவதற்கான யோக்கியதை அமைச்சருக்கு இல்லை. ஒரு வருடத்தில் போக்குவரத்து பிரச்சினைக்கு நான் தீர்வு காண்பேன் என்று தேர்தல் நேரத்தில் அவர் சொன்னார். ஆனால் இதுவரை தீர்வு காணப்படவில்லை. போக்குவரத்து நெரிசல் குறைக்கப்படவில்லை. மீன் வளம் உள்ள தொகுதி இது. இந்தத் தொகுதியைப் பொறுத்தவரைக்கும் மீனவர் சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் தான் அதிகமாக இருக்கிறார்கள். இந்த மீன் வணிகத்தை வளப்படுத்துவதற்காக என்ன செய்திருக்கிறார் என்ற கேள்விதான் எனக்கு கேட்க தோன்றுகிறது?
ஜெயக்குமார், இந்தத் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக மட்டுமல்லாமல், மீன்வளத்துறை அமைச்சராகவும் இருந்து கொண்டு மக்களைப் பற்றி கவலைப்படாமல், மீனவ சமூகத்தை பற்றி கொஞ்சம் கூட சிந்தித்துப் பார்க்காமல், தன்னுடைய வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்வதற்காகவும், தன்னுடைய அரசியல் வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்வதற்கான முயற்சியிலும் ஈடுபட்டிருக்கிறாரே தவிர மக்களைப் பற்றி கிஞ்சித்தும் கவலைப்படவில்லை.
இவ்வாறு ஸ்டாலின் உரையாற்றினார்.