Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

துரைமுருகன் மீது கடும் கோபத்தில் ஸ்டாலின்.. இலாகா பறிப்புக்கு பின்னணி என்ன? சீனியர்களுக்கு மெசேஜ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல்வர் ஸ்டாலின், மூத்த அமைச்சர் துரைமுருகன் மீது அப்செட்டில் இருப்பதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கனிம வளத் துறையில் வரும் அடுக்கடுக்கான புகார்களின் விளைவாகவே இன்றைய அமைச்சரவை இலாகா மாற்றம் எனத் தகவல்கள் பரபரக்கின்றன.

அண்மையில் கடந்த ஏப்ரல் 27-ஆம் தேதி தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டது. அமைச்சர்கள் பொன்முடி, செந்தில் பாலாஜி ஆகியோர் அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். மனோ தங்கராஜ் மீண்டும் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டார். இந்த நிலையில், திமுக அரசு பொறுப்பேற்று 4 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், தமிழக அமைச்சரவையில் இன்று (மே 8) இலாகா மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Stalin Unhappy with Duraimurugan Mineral Sector Complaints Prompt Portfolio Change

துரைமுருகன் இலாகா மாற்றம்

நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனிடம் இருந்த கனிமங்கள், சுரங்கம் மற்றும் இயற்கைவளத்துறை அமைச்சர் ரகுபதிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அமைச்சர் ரகுபதியிடம் இருந்த சட்டத்துறை துரைமுருகனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. சீனியர் அமைச்சர்களின் இலாகாக்கள் திடீரென்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திமுக பொதுச் செயலாளராக இருந்து வரும் துரைமுருகன், முதல்வர் ஸ்டாலினின் அபிமானம் கொண்டவர் என்பது அனைவரும் அறிந்ததே. கடந்த சில ஆண்டுகளாகவே துரைமுருகன் கவனித்து வரும் துறைகள் தொடர்பாக பல்வேறு புகார்கள் வந்தபோதும் முதல்வர் ஸ்டாலின் துரைமுருகன் வசம் இருக்கும் இலாகாக்களில் கை வைக்கவே இல்லை.

இலாகா பறிப்பு

இந்நிலையில் திடீரென மிக மூத்த அமைச்சரான துரைமுருகனின் இலாகாவே பறிக்கப்பட்டிருப்பது திமுக வட்டாரங்களில் மட்டுமின்றி தமிழக அரசியல் களத்திலுமே விவாதத்தைக் கிளப்பி விட்டுள்ளது. 1971 ஆம் ஆண்டு முதல் எம்.எல்.ஏவாக இருந்து வருகிறார் துரைமுருகன். தற்போது 10வது முறையாக சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார் துரைமுருகன். இந்நிலையில் அவரது இலாகா பறிப்பு விவாதம் ஆகியுள்ளது.

தமிழகத்தில் கனிம வள கொள்ளை தொடர்பான பிரச்சனை என்பது இன்று பல ஆண்டு காலமாக இருந்து வருகிறது. கன்னியாகுமரி, தென்காசி, கோவை வழியாக கேரள மாநிலத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான லாரிகளில் கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டு செல்வதாக குற்றம்சாட்டப்படுகிறது. இது தொடர்பாக அவ்வப்போது எதிர்க்கட்சிகள் போராட்டங்களையும் நடத்தி வருகின்றன.

பின்னணி என்ன?

கடந்த மாதம் நடந்த சட்டசபை கூட்டத் தொடரில் கூட எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் இந்த பிரச்சனையை எழுப்பினார். அதற்கு பதில் அளித்த அமைச்சர் துரைமுருகன்,"ஏதோ நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகுதான் லாரிகள் சென்று கொண்டிருப்பது போல உறுப்பினர் பேசுகிறார். நீங்கள் ஆட்சியில் இருக்கும்போதும் இப்படி தான் நடந்தது" என்று பதிலளித்தார். அதாவது, அதிமுக எம்.எல்.ஏ உதயகுமாரின் குற்றச்சாட்டை அமைச்சர் துரைமுருகன் மறுக்காமல், அதிமுக ஆட்சியிலும் இதுதான் நடந்தது என்றே தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே, தமிழகத்தில் எம்.சாண்ட், பி.சாண்ட், ஜல்லி, ஆற்று மணல் விலை அதிகமாக இருப்பதாக புகார்கள் எழுந்தது. ஆங்காங்கே போராட்டங்களும் நடைபெற்றன. இதையடுத்து, தமிழக முதல்வர் ஸ்டாலின் உடனடியாக ஆலோசனை நடத்தி தீர்வு காண உத்தரவிட்டார். அதன்படி அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நடந்த ஆலோசனையில் எம்.சாண்ட், மணல் விலையை ரூ.1000 அளவுக்கு குறைப்பதாக தீர்மானிக்கப்பட்டது. ஆனாலும் இந்த விலை குறைவு இன்னும் மார்க்கெட்டில் எதிரொலிக்கவில்லை.

முதல்வர் ஸ்டாலினுக்கு பறந்த ரிப்போர்ட்

இதற்கிடையே, கனிமவள பிரச்சனையில் அமலாக்கத் துறையும் தற்போது தலையிட்டு வருகிறது. குவாரிகளில் ரெய்டுகளிலும் ஈடுபட்டு வருகிறது. ஆனால், கனிமவளத் துறையில் சில முறைகேடுகளை துரைமுருகன் தடுக்க முயற்சிக்கவில்லை என தலைமைக்கு தொடர்ந்து ரிப்போர்ட்டுகள் சென்றுள்ளன.

தேர்தல் நேரத்தில் இதுபோன்ற நடவடிக்கைகள் அரசுக்கு கெட்டப்பெயரை ஏற்படுத்திவிடும் என்று முதல்வர் ஸ்டாலின் கருதியுள்ளார். அதனைத் தொடர்ந்தே, அமைச்சர் துரைமுருகனிடம் முக்கிய துறையாக இருந்த கனிமவளத் துறை திரும்பப் பெறப்பட்டு, அதற்கு பதிலாக சட்டத் துறை வழங்கப்பட்டுள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது.

கட்சியினருக்கு ஸ்டாலின் மெசேஜ்

இந்த நடவடிக்கையின் மூலம் கட்சியினருக்கு முக்கியமான மெசேஜ் ஒன்றையும் கூறி இருக்கிறார் முதல்வர் ஸ்டாலின் என்கிறார்கள் அறிவாலய வட்டாரத்தினர். கட்சியே முக்கியம், கட்சிகு அவப்பெயர் என்றால் யார் மீதும் நடவடிக்கை எடுப்பேன் என்ற மெசேஜை சீனியர்களுக்கு தெரிவித்திருக்கிறார் ஸ்டாலின் என்கிறார்கள்.

அமைச்சரவை இலாகா மாற்றம் அறிவிப்பு வந்த சிறிது நேரத்தில் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார் அமைச்சர் துரைமுருகன். சளி பிரச்சனை காரணமாக அமைச்சர் துரைமுருகன் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பரிசோதனைக்கு பிறகு இன்று துரைமுருகன் வீடு திரும்புவார் என தெரிகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+