சட்டசபையிலேயே ஸ்டாலின் நேரடி குற்றச்சாட்டு.. சைலண்ட் மோடில் விஜய்.. மவுனமாக இருக்கும் தவெக!
சென்னை: செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரத்திற்கு பின் ஒரேயொரு இரங்கல் பதிவையும், 3 நாட்களுக்கு பின் ஒரு வீடியோவையும் விஜய் வெளியிட்டுள்ளார். இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் கரூர் வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. அதன்பின் நீதி வெல்லும் என்று மட்டும் பதிவிட்டார்.
கரூர் வழக்கு விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டாலும், அதுதொடர்பான விவாதம் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. சட்டசபையிலும் கரூர் விவகாரம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். அதில் ஸ்டாலின் பேசுகையில், கரூரில் தவெக பிரச்சாரத்திற்கு வழக்கத்தை விட அதிக போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது.

மதியம் 12 மணிக்கு தவெக தலைவர் கரூர் வருவார் என்று அறிவிப்பு வெளியானதால் மக்கள் கூடினர். 7 மணி நேரம் தாமதமாக வந்ததால் தான் மக்கள் அதிகளவில் கூடுவதற்கு காரணமாகிவிட்டது. போதிய குடிநீர், உணவு போன்ற எந்த வசதிகளையும் ஏற்பாட்டாளர்கள் செய்யவில்லை. காலை முதல் காத்திருந்த மக்களுக்கு உணவு, தண்ணீர் கூட ஏற்பாடு செய்யவில்லை என்று தெரிவித்தார்.
ஸ்டாலின் சட்டசபையில் வைத்தே விஜய் தாமதமாக வந்ததெ அதிக கூட்டம் கூடுவதற்கு காரணம் என்று பேசியது விவாதமாகியது. விஜய் பெயரை சொல்லாமல் தவெக தலைவர் என்று மட்டும் பேசியது கவனிக்கப்பட்டது. முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் வைத்து விஜய் மீது நேரடியாக குற்றச்சாட்டி சுமார் 40 மணி நேரம் ஆகிவிட்டது.
ஆனால் இதுவரை தவெக தலைவர் விஜய் தரப்பில் இருந்தோ, தவெக நிர்வாகிகள் தரப்பில் இருந்தோ எந்த பதிலும் அளிக்கப்படவில்லை. வழக்கமாக தமிழக அரசின் தீர்மானங்கள், சட்டசபை நிகழ்வுகள் தொடர்பாக தவெக தலைவர் விஜய் உடனடியாக அறிக்கை வெளியிடுவார். கடந்த காலங்களில் திமுக மீது கடுமையான விமர்சனங்களையும் முன் வைத்துள்ளார்.
ஆனால் விஜய் இப்போதும் அமைதி காப்பது தவெகவினர் மத்தியில் சோகத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. இன்னொரு பக்கம் தவெக விரைவில் அதிமுக தலைமையிலான கூட்டணியை ஏற்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி வருகின்றன. ஒரு பக்கம் முதல்வர் நேரடியாக அட்டாக் செய்துள்ள நிலையில், மறுபக்கம் தவெகவை கூட்டணியை நோக்கி அதிமுக நகர்த்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
ஆனாலும் 18 நாட்களாக விஜய் மவுனமாக இருந்து வருகிறார். கரூர் விவகாரம் தொடர்பாக வதந்திகளை பரப்பியவர்கள் போலீசார் கைது செய்த போது, ஸ்டாலின் சார்.. பழி வாங்க வேண்டுமென்ற எண்ணம் இருந்தால் என்னை என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள்.. அவர்கள் மீது கை வைக்காதீர்கள் என்று விஜய் கூறி இருந்தார். தற்போது விஜய் மீது நேரடியாக குற்றச்சாட்டு முன் வைத்த போதும், அவர் அமைதி காத்து வருவது பேசுபொருளாகி இருக்கிறது.












Click it and Unblock the Notifications