பிணங்களை பார்த்து கதறி அழுதவர் தோல்வி.. ஓடிப்போனவர் வெற்றி.. விஜய் குறித்து திமுகவினர் விமர்சனம்
சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் தவெக-வுக்குச் சாதகமாக வந்துள்ளது. தனிப்பெரும் கட்சியா 107 இடங்களில் தவெக வெற்றி பெறுவது உறுதியாகி உள்ளது. இந்நிலையில் ஆளுங்கட்சியான திமுக தரப்பிலிருந்து கடந்த கால கசப்பான சம்பவங்களை முன்வைத்து விமர்சனங்கள் வந்துள்ளன. குறிப்பாக, கடந்த ஆண்டு கரூரில் நடைபெற்ற தவெக பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான விபத்து மற்றும் உயிரிழப்புகளைச் சுட்டிக்காட்டி சமூக வலைதளங்களில் விவாதத்தை கிளப்பி உள்ளது. பிணங்களை பார்த்து கதறி அழுதவர் தோல்வி.. ஓடிப்போனவர் வெற்றி பெற்றுள்ளதாக விஜய்யை விமர்சித்துள்ளார் திமுக ஆதரவாளர் ஒருவர்.
திமுக ஆதரவாளர்கள் மற்றும் சில நிர்வாகிகள், கரூரில் விபத்து நடந்தபோது அங்கு பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்காமல் சென்றவர் இன்று வெற்றியை நோக்கி செல்கிறார். ஆனால் அன்று மக்களின் கண்ணீரைத் துடைக்க நின்றவர்கள் பின்னடைவைச் சந்திக்கிறார்கள்" என்ற தொனியில் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர். "மக்களின் உயிருக்கு மதிப்பளித்தவர்களுக்கே வெற்றி கிடைக்க வேண்டும்" என்பது திமுகவினரின் வாதமாக இருக்கிறது.

இந்தக் குற்றச்சாட்டுகளைத் தமிழக வெற்றிக் கழகத்தினர் முற்றிலுமாக மறுத்துள்ளனர். இது குறித்து தவெக தரப்பினரோ, "கரூர் சம்பவம் என்பது ஒரு திட்டமிட்ட சதி. எங்களது வளர்ச்சியைப் பிடிக்காதவர்கள் செய்த குழப்பத்தால் அந்தத் துயரம் நிகழ்ந்தது. விபத்து நடந்த நேரத்தில் அங்கேயே தங்கியிருந்தால், ரசிகர்களும் பொதுமக்களும் இன்னும் அதிகமாகக் கூடி சூழல் மேலும் மோசமடையும் என்பதாலேயே, பாதுகாப்பு அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரில் தலைவர் விஜய் அங்கிருந்து வெளியேறினார்.
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நேரில் செல்லாவிட்டாலும், அவர்களின் வாழ்வாதாரத்திற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் கட்சித் தலைமை இன்று வரை செய்து வருகிறது. தோல்வியைத் தாங்க முடியாதவர்கள், மக்களின் தீர்ப்பைச் சிறுமைப்படுத்த பழைய சம்பவங்களைத் தவறாகச் சித்தரிப்பதாக கூறியிருக்கிறார்கள்.
முன்னதாக கடந்த செப்டம்பரில் நடந்த கரூர் சம்பவத்தின் போது, விஜய் சம்பவம் நடந்த அன்று அங்கேயே தங்கி பாதிக்கப்பட்டவர்களை மற்றும் இறந்தவர்களின் குடும்பத்தினரை போய் சந்தித்து ஆறுதல் கூறாமல் அப்படியே சென்றுவிட்டார். இது அப்போது கடுமையான விமர்சனத்தை ஏற்படுத்தியது. அப்போது ஊடகத்தினர் விஜய்யை சுற்றி வளைத்து பலர் இறந்துள்ளனர். இதற்கு பதில் சொல்லுங்கள் என்று கேட்டனர். அப்போது விஜய் பத்திரிக்கையாளர்களை சந்திக்காமல் கடந்து சென்றார்.
அதேநேரம் அடுத்த இரண்டு நாள் கழித்து முதல்வர் ஸ்டாலினை விமர்சித்து விஜய் வீடியோ வெளியிட்டார். அதில் நடந்தது சதி என்று கூறினார். அதேநேரம் பாதிக்கப்பட்ட மக்களை விஜய் நேரில் போய் சந்திக்கவில்லை. அவர்களை மகாபலிபுரத்திற்கு பேருந்தில் அழைத்து வந்து சந்தித்து ஆறுதல் கூறியதுடன் நிதியுதவி வழங்கினார். இதனை திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் அப்போது கடுமையாக விமர்சித்தன. ஆனால் எந்த விமர்சனங்களும் விஜய்யை பாதித்தாக தெரியவில்லை.. ஏனெனில் விஜய்யின் தவெக தனிப்பெரும் கட்சியாக 107 இடங்களில் வெற்றி பெறும் நிலையில் உள்ளது. தனி மெஜாரிட்டி இல்லை என்றாலும், விஜய் நினைத்தால் கூட்டணி அமைத்து ஆட்சியமைக்க முடியும் என்கிற நிலை உருவாகி உள்ளது.














Click it and Unblock the Notifications