நீட் விலக்கு மசோதா.. மாநில அரசுக்கு அதிகாரம்.. மத்திய அரசுக்கு மா.சுப்பிரமணியன் பதில்!
சென்னை: நீட் தேர்வுக்கு எதிராக மசோதா நிறைவேற்ற மாநில அரசுக்கு அதிகாரமுள்ளது என்று மத்திய அரசுக்கு பதில் அனுப்பப்பட உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் பலகாலமாக நீடித்து வருகிறது. இதனைத்தொடர்ந்து நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதி ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. இந்த மசோதா ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு ஆளுநர் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் முக ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார்.

மத்திய அரசு கேள்வி
இந்த மசோதா குறித்து மத்திய அரசு அண்மையில் விளக்கமளித்துள்ளது. அதில் தமிழக அரசின் நீட் விலக்கு மசோதா, உள்துறை அமைச்சகத்திற்கு மே 2ம் தேதி வந்து சேர்ந்தது. குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காகவும் மாநில ஆளுநர்கள் அனுப்புகிற சட்ட வரைவுகள் சம்பந்தப்பட்ட அமைச்சகங்களுக்கு கருத்து கேட்பிற்காக அனுப்பப்பட்டு மேல் நடவடிக்கை எடுக்கப்படுவது நடைமுறை. அதுபோன்று மத்திய அமைச்சகங்கள் கருத்து கேட்பு நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.

கேள்விகள் என்ன
இதுகுறித்து விளக்கமளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், மத்திய அரசு தரப்பில் தமிழக அரசுக்கு அனுப்பியுள்ள குறிப்பில், இந்த மசோதாவை நிறைவேற்ற சட்டமன்றத்திற்கு அதிகாரம் உள்ளதா? இது மத்திய அரசு வரம்புக்குள் வருகிறதா? தேசிய மருத்துவ ஆணைய சட்டம் உள்ளிட்ட சட்டங்களுக்கு இது முரண்பட்டு அமைந்துள்ளதா? தேசிய தகுதி நுழைவுத் தேர்வு உள்ளிட்ட வரலாற்று சீர் திருத்தங்கள் உறுதி செய்யும் வகையில் உள்ள நீட் தேர்வுக்கு இந்த மசோதா பாதிப்பை ஏற்படுத்துமா? தேசிய கல்வி கொள்கைக்கு முரணானதா? உள்ளிட்ட கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மா.சுப்பிரமணியன் பேட்டி
இந்தநிலையில் மத்திய அமைச்சகங்களின் கேள்விகளுக்கு உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் மூலம் பதில் தயாரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மா.சுப்பிரமணியன், மத்திய அரசு எழுப்பியுள்ள 6 கேள்விகளுக்கும் பதில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பதில்கள் வைத்து நாளை மீண்டும் ஆலோசிக்கப்படும். அதன் பிறகு மத்திய அரசுக்கு அனுப்பப்படும்.

தமிழக அரசு நம்பிக்கை
இதில் நீட் தேர்வுக்கு எதிராக மசோதா நிறைவேற்ற மாநில அரசுக்கு அதிகாரமுள்ளது என்று பதில் எழுதப்பட்டுள்ளது. அதேபோல் மத்திய அரசு எழுப்பியுள்ள 6 கேள்விகளுக்கும் சட்ட வல்லுநர்களின் ஆலோசனையுடன் உரிய பதில் தயாரிக்கப்பட்டுள்ளது. அது இன்னும் ஓரிரு நாட்களில் மத்திய அரசுக்கு அனுப்பப்படும். சரியான பதில்கள் கூறியுள்ளதால் நீட் விலக்கு கிடைக்கும் என்று நம்புகிறோம் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications