'பாடும் நிலா' எஸ்.பி.பி நினைவிடத்தில் பொதுமக்களுக்கு அனுமதி மறுப்பு.. எஸ்.பி.பி சரண் விளக்கம்!
சென்னை: நமது நாட்டின் மிகச்சிறந்த பின்னணிப் பாடகரும், தமிழக மக்களின் இதயங்களில் நீங்கா இடம் பிடித்தவருமான 'பாடும் நிலா' எஸ்.பி.பாலசுப்பிரமணியனின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
Recommended Video
2005-ம் ஆண்டு பிறந்த 2k கிட்ஸ் என்றாலும் சரி, 1960-ல் பிறந்த 60 கிட்ஸ் என்றாலும் சரி, எஸ்.பி.பி.யின் பாடல்களை, குரலை ரசிக்காதவர்கள், ஏன் அடிமையாகாதவர்கள் யாரும் இருக்க முடியாது.

முதலாம் ஆண்டு நினைவு தினம்
16 மொழிகளில் நாற்பதாயிரத்துக்கு மேற்பட்ட பாடல்களை பாடி சாதனை படைத்த 'சிம்ம குரலோன்' எஸ்.பி.பி கடந்த ஆண்டு இதே நாளில் உடல்நலக்குறைவு காரணமாக நம்மை விட்டு பிரிந்து சென்று விட்டார். எஸ்.பி.பி.யின் உடல் திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம் பகுதியில் உள்ள அவரது பண்ணை தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. இன்று முதலாம் ஆண்டு என்பதால் அவரது நினைவிடம் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

அனுமதி இல்லை
அதுவும் எஸ்.பி.பி தீவிர சிவன் பக்தர் என்பதால் அவருடை நினைவிடத்தில் சிவலிங்கம் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அவரது நினைவை போற்றும் வகையில் அப்பகுதியில் இசை அஞ்சலி செலுத்த அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் ஆந்திராவின் பல பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கையில் மலர் வளையத்துடன் எஸ்.பி.பி நினைவிடத்துக்கு வருகை புரிந்தனர். தற்போது கொரோனா காலம் என்பதால் பொதுமக்கள், ஊடகங்கள் உள்ளே செல்ல அனுமதி அளிக்கப்படவில்லை,

எஸ்.பி.பி சரண் பேட்டி
இதனால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இது தொடர்பாக எஸ்.பி.பி.யின் மகனும், பாடகருமான எஸ்.பி.பி சரண் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கொரோனா காலம் என்பதால் அப்பா நினைவிடத்திற்கு காவல்துறையினர் அனுமதி தரவில்லை. இதனால் பொதுமக்கள், ஊடகங்களிடம் நான் முதலில் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

மணி மண்டபம்
ஒரு ஆண்டு அப்பா இல்லாமல் மிகவும் வருத்தமாக இருக்கிறது. அப்பா விட்டுச்சென்ற பணிகளை நான் தொடர்ந்து செய்து வருகிறேன். அப்பாவுக்கு மணி மண்டபம் கட்ட நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். ,அங்கு அருங்காட்சியகம், திரை அரங்கம் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. இது தொடர்பாக தமிழக அரசிடம் உதவி கேட்க இருக்கிறோம். இவ்வாறு எஸ்.பி.பி சரண் கூறினார்.












Click it and Unblock the Notifications