ஸ்டெர்லைட் ஆலை... அன்று என்னை கிழித்து குதறினீர்களே... இனி ஷட் அப் பண்ணுங்க - குஷ்பு ட்வீட்
ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கலாம் என்று நான் சொன்ன போது திமுகவினர் அன்று என்னை கிழித்து குதறினார்கள் என்று குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சென்னை: ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கலாம் என்று நான் சொன்ன போது அன்று திமுகவினர் என்னை கிழித்து குதறினார்கள் எனக்கு எதிராக குதித்தனர் என்று குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இன்று அதே திமுகவைச் சேர்ந்த கனிமொழி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகியோர் ஆலையை திறக்க சம்மதம் சொல்லியிருக்கிறார்கள் எல்லோரும் சிறந்ததை செய்யுங்கள் வாயை மூடிக்கொண்டு அவரவர் வேலையைப் பாருங்கள் என்று குஷ்பு பதிவிட்டுள்ளார்.
நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களும் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி மூச்சு விட முடியாமல் பரிதவித்துக் கொண்டுள்ளன. தினசரி கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மூன்றரை லட்சத்தை கடந்துள்ள நிலையில் சராசரியாக ஒரு நாளைக்கு 3000 பேர் மரணத்தை தழுவுகின்றனர்.
கொரோனாவினால் பாதிக்கப்படுவோரின் ரத்தத்தில் ஆக்சிஜனின் அளவு குறைந்து வருவதால் மருத்துவ ஆக்ஸிஜன் தேவை அதிகரித்தது. இதனிடையே திடீரென பல மாநிலங்களிலும் பரவலாக ஆக்ஸிஜனுக்கு தட்டுப்பாடு அதிகரித்துள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையின் ஆக்சிஜன் உற்பத்தி.. சென்னை உயர்நீதிமன்றம் கண்காணிக்க தினகரன் வலியுறுத்தல்
மத்திய அரசு
போர்க்கால அடிப்படையில் மருத்துவ ஆக்சிஜனை நிறுவனங்கள் உற்பத்தி செய்து வருகின்றன். எந்தெந்த நிறுவனங்களால் முடியுமோ அந்த நிறுவனங்களும் ஆக்ஸிஜன் உற்பத்தியில் ஈடுபட வேண்டுமென மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
வேதாந்தா மனு
இந்நிலையில் தூத்துக்குடியில் மூடப்பட்டு கிடக்கும் ஸ்ரெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்து வழங்க அனுமதிக்குமாறு உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் இடைக்கால மனு ஒன்றை தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரணையின் போது ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதி வழங்கலாம் என மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். இருப்பினும் ஸ்டெர்லைட் ஆலையை திறந்தால் மீண்டும் சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு பதில்
இந்த காரணத்தை ஏற்க உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர். மக்களின் உயிர் ஆபத்தில் இருக்கும் போது ஏன் ஆலையை திறக்க கூடாது என்று கேள்வி எழுப்பி உள்ளனர். ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு உரிய பதிலை தமிழக அரசு அளிக்க வேண்டுமென்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
ஆலையை திறக்க குஷ்பு ஆதரவு
இதனிடையே ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என வலியுறுத்தி பாஜகவின் ஆயிரம் விளக்கு வேட்பாளரான குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு பதிவிட்டிருந்தார். அதில் நமக்கு ஆக்ஸிஜன் தேவை உள்ளது. உயிர்களை காப்பாற்றுவதற்காக ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படும் என்றால் அது நடக்கட்டுமே என்று குறிப்பிட்டிருந்தார்.
ட்விட்டரில் பதிவு
இந்த பெருந்தொற்று காலத்தில் உயிர்களை காப்பதே நம் முக்கிய நோக்கமாகும். ஸ்டெர்லைட் ஆலை திறப்புக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்கக் கூடாது என முதல்வர் பழனிசாமியை நான் கேட்டுக்கொள்கிறேன் என்றும் தனது பதிவில் குறிப்பிட்டிருந்தார். குஷ்புவின் பதிவிற்கு பலரும் கண்டனம் தெரிவித்து பதில் பதிவிட்டனர்.
ஆலையை திறக்க அரசு ஒப்புதல்
இந்த நிலையில் இன்று முதல்வர் தலைமையில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனைவரும் சம்மதம் தெரிவித்தனர். இதனையடுத்து நான்கு மாதங்கள் மட்டும் ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதித்துள்ளது. தற்காலிகமாக மின்சார இணைப்பை கொடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
திமுக கூட்டணி கட்சியினர் அனைவருமே ஆலையை திறக்க சம்மதம் தெரிவித்துள்ளனர். இதே போல மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்காவிட்டாலும் ஆக்சிஜன் உற்பத்திக்காக ஆலையை திறக்கலாம் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
என்னை கடித்து குதறினார்கள்
ஆக்சிஜன் உற்பத்திக்காக ஆலையைத் திறக்கலாம் என்று நான் சொன்ன போது அன்று என்னை கிழித்து குதறினார்கள். இன்று அதே திமுகவைச் சேர்ந்த கனிமொழி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகியோர் ஆலையை திறக்க சம்மதம் சொல்லியிருக்கிறார்கள். சிறந்ததை செய்யுங்கள் இப்போது எல்லோரும் வாயை மூடிக்கொண்டு அவரவர் வேலையை மட்டும் பாருங்கள் என்று பதிவிட்டுள்ளார் குஷ்பு.
பாதுகாப்பாக இருங்கள்
குஷ்பு தனது மற்றொரு பதிவில் நெருக்கடி ஏற்படும் போதெல்லாம் நான் தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறேன். என் மனது சொல்வதைக் கேட்டு பேசுவேன். ஆகவே, என்னைப் பின்தொடர்பவர்கள் ட்ரோல் செய்ய, சிறந்த ஒன்றைக் கண்டுபிடியுங்கள். உங்கள் தலைவரைப் பின்பற்றுவதை விட, தேவைப்படுபவர்களுக்கு உதவுங்கள், கவனமாக இருங்கள் மற்றும் பாதுகாப்பாக இருங்கள் என்று பதிவிட்டுள்ளார் குஷ்பு.