சென்னை மக்களுக்கு குட்நியூஸ்.. பூங்கா நகர் ஸ்டேஷனில் இன்று முதல் ரயில் நிற்கும்.. நோட் பண்ணுங்க
சென்னை: சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையே 14 மாதங்களுக்கு பிறகு ரயில் சேவை தொடங்கி உள்ளது. ஆனாலும் இந்த ரயில் சென்னை பார்க் டவுன் ரயில் நிலையத்தில் நிற்காது என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது அங்கு நின்று செல்லும் என்று ரயில்வே சார்பில் முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை இணைக்கும் வகையில் புறநகர் சேவையாக மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில்கள் மூலம் பொதுமக்கள் பயனடைந்து வருகின்றனர்.

சென்னை போக்குவரத்து நெரிசலில் இருந்து தப்பித்து ரயில்கள் மூலம் பொதுமக்கள் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு சென்று வருகின்றனர். இதனால் தினமும் இந்த மின்சார ரயில்களில் லட்சக்கணக்கில் பயணிகள் பயணித்து வருகின்றனர்.
இதற்கிடையே தான் சென்னை கடற்கரை - எழும்பூர் ரயில் முனையம் இடையே 4வது வழித்தட பணி கடந்த ஆண்டு தொடங்கியது.
மொத்தம் 4.3 கி.மீ தொலைவுக்கு 4வது வழித்தடம் அமைக்கும் பணி நடந்தது. இந்த பணியின் காரணமாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் 27 ம் தேதி முதல் சென்னை கடற்கரை - வேளச்சேரி, , வேளச்சேரி - சென்னை கடற்கரை இடையே ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் பயணிகள் சிரமத்தை எதிர்கொண்டனர்.
தற்போது பணி முடிவடைந்த நிலையில் கடந்த மாதம் 29 ம் தேதி முதல் மீண்டும் சென்னை கடற்கரை - வேளச்சேரி, வேளச்சேரி - சென்னை கடற்கரை இடையே ரயில் சேவை தொடங்கியது. இருப்பினும் இந்த ரயில்கள் சென்னை பார்க் டவுன் (பூங்கா நகர்) ரயில் நிலையத்தில் நின்று செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. அங்கு பிளாட்பாரம் தொடர்பான பணிகள் நிறைவு பெறாததால் அங்கு ரயில்கள் தற்காலிகமாக நிற்காது என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தான் தற்போது பிளாட்பார்ம் பணிகள் முழுவதுமாக முடிவடைந்துள்ளது. இதனால் இருமார்க்கமாக சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையே இயங்கும் ரயில் இன்று முதல் பார்க் டவுன் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என்று ரயில்வே சார்பில் அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் இன்று முதல் பயணிகள் பார்க் டவுன் ரயில் நிலையத்தில் ஏறி இறங்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications