மெரீனாவில் பலத்த காற்று... ஆபத்தை உணராமல் பண்டிகை நாளைப் போல படையெடுத்த மக்கள்
காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடப்பதால் மெரீனா கடற்கரையில் பலத்த காற்று வீசி வருகிறது. ஆபத்தை உணராமல் ஏராளமானோர் பண்டிகை நாட்களைப் போல குவிந்து வருகின்றனர்.
சென்னை: நாங்க எல்லாம் சுனாமியிலேயே ஸ்விமிங் பண்ணவங்க... இது மெரீனாவிற்கு வந்துள்ள பலரது கருத்தாக உள்ளது. கடற்கரையில் மழைநீர் வெள்ளம் போல தேங்கியிருந்தாலும் ஏராளமானோர் ஆபத்தை உணராமல் தண்ணீரில் குதித்து விளையாடி வருகின்றனர். பலத்த காற்று வீசினாலும் ஜாலியாக இருப்பதாக கடற்கரைக்கு வந்துள்ளவர்களின் கருத்தாக உள்ளது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் சென்னையில் 15 மணிநேரமாக விடாமல் மழை கொட்டி வருகிறது. ஆவடி, அண்ணாநகர் முதல் தென்பகுதியான வேளச்சேரி வரையும் வெள்ளத்தில் மிதக்கிறது. சென்னையின் புறநகர் பகுதிகள் மழைநீரில் மூழ்கிவிட்டன.
மக்களின் இயல்பு வாழ்க்கையை முற்றிலும் முடக்கிப்போட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களை வாங்க கூட வெளியே வர முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். கடைகள் மூடப்பட்டுள்ளன. காய்கறிகளின் விலை உச்சத்தை எட்டியுள்ளது.

தட்டி தூக்கும் காற்று
காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடப்பதால் சென்னையிலும் புறநகர்ப்பகுதிகளிலும் பலத்த காற்று வீசுகிறது. மரங்கள் அனைத்தும் பேயாட்டம் போட்டு வருகின்றன. பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன.

சத்தத்துடன் காற்று
மெரீனா கடற்கரையில் பலத்த சத்தத்துடன் காற்று வீசி வருகிறது. மணலோடு காற்றும் வீசி வருவதால் வாகனங்களில் செல்வோர் பாதிக்கப்பட்டுள்ளனர். காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ள நிலையில் இன்றைய தினம் ஆயிரக்கணக்கான மக்கள் கடற்கரை பகுதியில் குவிந்துள்ளனர்.

காற்றை அனுபவிக்க குவிந்த கூட்டம்
பொதுவாக தை மாதம் காணும்பொங்கல் நாளிலும் விடுமுறை நாளிலும்தான் ஏராளமானோர் மெரீனா கடற்கரைக்கு வருவது வழக்கம். இன்றைய தினம் காவல்துறையினர், அதிகாரிகளின் எச்சரிக்கையையும் புறக்கணித்து விட்டு கடற்கரையில் குவிந்துள்ளனர். காற்று வீசுவது பார்ப்பதற்கு நன்றாக இருப்பதாக பலரும் கூறியுள்ளனர்.

ஜாலி விளையாட்டு
கடலில் குளிப்பது போலவே தேங்கி நிற்கும் நீரில், சிறுவர்கள் குதித்து விளையாடிவருகின்றனர் காவல்துறையினர் எச்சரித்தும் பொதுமக்கள் தொடர்ந்து வருகை தருவதால் அப்பகுதி பண்டிகை நாட்களை போலவே உள்ளது. மெரீனாவிற்கு வந்து காற்றை அனுபவிப்பது ஜாலியாக இருப்பதாகவும் மழையால் வீட்டிற்குள் அடைந்து கிடந்த தங்களுக்கு இது உற்சாகத்தைத் தருவதாகவும் தெரிவித்துள்ளார். சுனாமி வந்த போது ஸ்விம்மிங் செய்தவங்க சென்னைக்காரங்க என்றும் கூறிக்கொண்டிருக்கின்றனர் கடற்கரையில் குவிந்தவர்கள்.












Click it and Unblock the Notifications