அள்ளிக் கொடுத்த பா.ரஞ்சித்..விஷாலுக்கு பெரிய மனசு! சிம்பு செய்த உதவி.. கண்ணீரில் மோகன்ராஜ் குடும்பம்
சென்னை: இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் தயாராகி வரும் 'வேட்டுவம்' படப்பிடிப்பில் சண்டைக் காட்சியின் போது ஏற்பட்ட விபத்தில் ஸ்டண்ட் மாஸ்டரான மோகன்ராஜ் மரணம் அடைந்தார். இது தொடர்பாக பா.ரஞ்சித் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் மோகன்ராஜ் குடும்பத்துக்கு இயக்குனர் ரஞ்சித் 20 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார்.
அட்டகத்தி, மெட்ராஸ், சார்பட்டா பரம்பரை ஆகிய படங்களை இயக்கிய ரஞ்சித் தற்போது வேட்டுவம் படத்தை தயாரித்து வருகிறார். அவரது நீலம் ப்ரொடக்ஷன்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது. இதில் ஆர்யா, தினேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்த நிலையில் படத்தின் ஷூட்டிங் நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் அருகே விழுந்தமாவடி என்ற கிராமத்தில் நடைபெற்றது. அப்போது கார் சண்டை காட்சி ஒன்று படம் பிடிக்கப்பட்ட நிலையில் திடீரென அந்த கார் விபத்தில் சிக்கியது.

அந்த ஸ்டண்டை செய்த சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தற்போது அவர் விபத்துக்குள்ளான காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக இயக்குனர் பா ரஞ்சித், பிரபாகரன், ராஜ் கமல், வினோத் உள்ளிட்ட நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
படப்பிடிப்பு தளத்தில் அலட்சியமாக செயல்பட்டதாக ரஞ்சித் உள்ளிட்டோர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ள, நிலையில் ரஞ்சித் அலட்சியமாக செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டை மறுக்கும் திரையுலகினர் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில் உயிரிழந்த மோகன்ராஜின் குடும்பத்திற்கு உதவ வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்திருக்கிறது.
இந்த நிலையில் நடிகர் சிம்பு மோகன் ராஜின் குடும்பத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவி அளித்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் நடிகர் சூர்யா ஸ்டண்ட் கலைஞர்களுக்கு 10 வருடங்களாக இன்சூரன்ஸ் கட்டி வருவதும் தற்போது தெரிய வந்திருக்கிறது. கலைஞர்கள் பலரும் அடுத்தடுத்து மோகன்ராஜ் குடும்பத்திற்கு உதவி செய்து வரும் நிலையில் இதனை கேள்விப்பட்ட இயக்குனர் பா.ரஞ்சித் மோகன்ராஜின் குடும்பத்திற்கு 20 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது ஒரு புறம் இருக்க நடிகர் விஷால் மோகன்ராஜ் குழந்தைகளின் கல்விச் செலவு முழுவதையும் ஏற்றுக்கொள்வதாக அறிவித்திருக்கிறார். இதற்கிடையே இன்சூரன்ஸ் செய்து இருந்த போதிலும் மோகன்ராஜ் குடும்பத்தினருக்கு காப்பீடு கிடைப்பதில் சிக்கல் எழுந்திருக்கிறது. இதை அடுத்து தமிழக அரசு தலையிட்டு மோகன்ராஜின் குடும்பத்திற்கு உரிய இழப்பீட்டுத் தொகை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications