அதிக வருவாய் வரும் சார்பதிவாளர் அலுவலகங்களில் பணிபுரிபவர்களுக்கு 'செக்.. ஐஜி அனுப்பிய கடிதம்
சென்னை : அதிக வருவாய் வரும் சார்பதிவாளர் அலுவலகங்களில் பணிபுரிபவர்களுக்கு 'செக்' வைக்கும் வகையில் இடமாற்றம் செய்வதில் புதிய நடைமுறை கொண்டுவரப்படுகிறது. இடமாற்றம் செய்யும் விவகாரம் தொடர்பாக தமிழக அரசின் பத்திர பதிவுத்துறை ஐஜி சிவன் அருள், பதிவுத்துறை செயலாளர் ஜோதி நிர்மலாசாமிக்கு கடிதம் எழுதி உள்ளார்.
தமிழகத்தில் எல்லா சார்பதிவாளர் அலுவலகங்களும் ஒரே அளவு வருவாய் உடையவை அல்ல. ரியல் எஸ்டேட் வளர்ச்சி அதிகம் உள்ள பகுதிகளை கொண்ட சார்பதிவாளர் அலுவலகங்கள், ரியல் எஸ்டேட் வளர்ச்சி அதிகம் இல்லாத சார்பதிவாளர் அலுவலகங்கள், ஓரளவு வளர்ச்சி உள்ள பகுதி உள்ள அலுவலகங்கள் என மூன்று வகையாக உள்ளன.
சென்னை, கோவை, திருச்சி, மதுரை, சேலம், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, வேலூர், திருப்பூர், ஈரோடு, ஓசூர் உள்ளிட்ட பகுதிகள் அதிக வருவாய் வரும் சார்பதிவாளர் அலுவலகங்கள் ஆகும். இன்னும் பல்வேறு பகுதிகள் தமிழ்நாட்டில் அதிக வருவாய் தரும் சார்பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன.

பதிவுத்துறை
இந்நிலையில் அதிக வருவாய் வரும் பணியிடத்தில் இருப்பவர்களுக்கு 'செக்' வைக்கும் வகையில், சார்பதிவாளர்களை பணியிட மாற்றம் செய்யும், புதிய நடைமுறையை கொண்டுவர பதிவுத்துறை ஐஜி அனுமதி கோரி, துறையின் செயலாளருக்கு கடிதம் எழுதி இருக்கிறார்

பணியிடமாற்றக்கொள்கை
தமிழக அரசின் பத்திர பதிவுத்துறை ஐஜி சிவன் அருள், பதிவுத்துறை செயலாளர் ஜோதி நிர்மலாசாமிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: "சார்பதிவாளர் அலுவலகங்களை கூர்நோக்கு அடிப்படையில், 'அ', 'ஆ' மற்றும் 'இ' வகை அலுவலகங்களாக வகைப்படுத்துதல், பணியிடமாற்றக் கொள்கை உருவாக்குதல், நடைமுறைப்படுத்துதல், நெறிமுறைகள் வகுத்தல் தொடர்பாக முன்மொழிவு அனுப்பப்பட்டது.

சராசரி வருவாய்
முன்மொழிவில் கூர்நோக்கு அடிப்படையில் சார்பதிவகங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளது. கூர்நோக்கு அடிப்படையில் சார்பதிவாளர் அலுவலகங்கள் 3 பிரிவுகளாக வகைப்படுத்த 3 ஆண்டுகளுக்கான ஆவணப்பதிவு விபரம், வருவாய் விபரம், அவற்றின் சராசரி, அவற்றின் அடிப்படையிலான தரவரிசைப் பட்டியல் ஆகியவை பரிசீலிக்கப்பட்டன. அதிகபட்ச வருவாய் மற்றும் அதிகபட்ச ஆவணப்பதிவு எண்ணிக்கை மற்றும் அதிகபட்ச சராசரியை கருத்தில் கொண்டு அத்தரவரிசையின் அடிப்படையில் 1 முதல் 100 அலுவலகங்களில் சராசரி வருவாய் ரூ.26.25 கோடி (50%) ஆவணப் பதிவுகள் 10.29% உள்ளது. 101 முதல் 300 வரையிலான அலுவலகங்களில் சராசரி வருவாய் ரூ.25.42 கோடி மற்றும் ஆவணப்பதிவு 68.80% ஆக உள்ளது.

சாதாரண வருவாய்
தரவரிசை 1 முதல் 100 வரையிலான அலுவலகங்களை "அ" வகை அலுவலகம்-அதிக கூர்நோக்குடையவை என வகைப்படுத்தலாம். தரவரிசை 101 முதல் 300 வரையிலான அலுவலகங்களை 'ஆ' வகை அலுவலகம்- கூர்நோக்குடையவை என வகைப்படுத்தலாம். தரவரிசை 301 முதல் 575 வரையிலான அலுவலகங்களை 'இ' வகை அலுவலகம்- சாதாரணமானவை என வகைப்படுத்தலாம். எனவே, 2020-21ம் நிதி ஆண்டில் கொரோனா பரவலை தடுக்க விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளாலும், நோயின் தாக்கத்தினாலும் ஏற்பட்ட பாதிப்புகளினால் ஆவணப்பதிவு குறைந்த நிலையில் 3 ஆண்டு சராசரி (நிதியாண்டு 2018-19, 2019-20. 2020-21) அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டுள்ளது.

அரசின் பரிசீலனை
அதன் அடிப்படையில் இவ்வருடம் அலுவலகங்களை வகைப்படுத்தி நியமனம் செய்யலாம் என தெரிவித்து கொள்கிறேன். வரும் ஏப்ரல் 2022 முதல் ஆண்டுதோறும் மார்ச் 31 தேதியன்று உள்ள ஆண்டு வருவாய் அளவில் 75 சதவிகிதத்தினையும் ஆவணப் பதிவு எண்ணிக்கை அடிப்படையில் 25 சதவிகிதத்தினையும் அடிப்படையாக கொண்டு விகிதாசார அடிப்படையில் தரவரிசைப்பட்டியல் ஒன்றினை உருவாக்கி அதனை வகைப்படுத்தி ஆணையிடலாம் என அரசின் பரிசீலனைக்கு சமர்ப்பிக்கப்படுகிறது" இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications