தமிழகத்தின் அமைதியைக் குலைக்கும் எச். ராஜாவைக் கைது செய்ய சுப. வீரபாண்டியன் வலியுறுத்தல்
சென்னை: தமிழகத்தின் அமைதியை குலைக்கும் பாஜக தேசிய செயலாளர் எச். ராஜாவை கைது செய்ய வேண்டும் என்று திராவிடர் இயக்க தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்ப்பாக சுப வீரபாண்டியன் வெளியிட்ட அறிக்கை:
தில்லியில் நடைபெற்றது கலவரமோ, இரு குழுக்களுக்கு இடையிலான மோதலோ இல்லை. ஆர்.எஸ்.எஸ், பாஜக வினரின் திட்டமிட்ட சதி, அவர்களுடைய கூலிப்படையின் தாக்குதல், அரச பயங்கரவாதம்! 60 நாள்களுக்கு மேலாக, ஒரு சிறு வன்முறை கூட இல்லாமல், இந்திய தேசியக் கொடி ஏந்தி, அமைதியாக நடைபெற்றுவந்த அறப்போராட்டத்தை உட்புகுந்து கலைத்தவர்கள் யார்? சிஏஏ ஆதரவுப் பேரணி என்ற பெயரில் வன்முறையாளர்கள் அந்த இடத்திற்கு வர எவ்வாறு காவல்துறை அனுமதித்தது? நேற்றுவரையில் 25 மனித உயிர்கள் பலியாகியுள்ளன. இன்னும் எத்தனை பேர் என்று தெரியவில்லை. இவற்றுக்கெல்லாம் யார் பொறுப்பு?

காவல்துறையின் மெத்தனமே காரணம் என்று உச்ச நீதிமன்றமே கூறியுள்ளது. காவல்துறை என்பது அரசின் ஏவல் துறையாக இருக்கலாமா? அன்று யாரோ ஒருவன், கையில் இருந்த துப்பாக்கியால், சிஏஏ எதிர்ப்புப் பேரணியின் மீது சுட்டானே, அவன் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருந்த மாணவர்களை, முகமூடியுடன் சென்று தடிகளால் தாக்கியவர்கள் யார்? அவர்கள் மீது இன்றுவரையில் ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை? எல்லாவற்றுக்குமான ஒரே விடை, அரசே பின்னணியில் இருக்கும்போது, காவல்துறை என்ன செய்யும் என்பதுதான்!
பாஜகவின் பொறுப்பாளர்களில் ஒருவரான கபில் மிஸ்ராதானே வன்முறையாளர்களை அழைத்துச் சென்றிருக்கிறார். அரசுதான் பின்புலம் என்பதற்கு இதனை விட வேறு என்ன சான்று வேண்டும்? எனவே வன்முறை வெடித்தமைக்குப் பொறுப்பேற்று, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உடனடியாகப் பதவி விலக வேண்டும். இப்போது அதே மாதிரியான வன்முறையைத் தமிழ்நாட்டிலும் சிலர் தூண்டிவிடுகின்றனர். பாஜகவின் தேசியச் செயலாளர்களில் ஒருவரான ஹெச். ராஜா, தன் டுவிட்டர் பக்கத்தில்,
Recommended Video
"கடந்த இரண்டு நாட்களாக டில்லியில் நடப்பது வண்ணாரப்பேட்டையில் தமிழகத்தில் ஏற்படலாம் " என்று பதிவிட்டுள்ளார். இந்த வெளிப்படையான மிரட்டலுக்கு என்ன பொருள்? சென்னையிலும் வன்முறையைத் தொடங்கப் போகிறோம் என்பதுதானே! வன்முறைகளும், உயிர்ப்பலிகளும் தமிழகத்திலும் தொடரக்கூடாது என்றால், ஹெச். ராஜா போன்றவர்கள் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும். அதனைச் செய்ய அடிமை எடப்பாடி அரசுக்குத் துணிவிருக்காது என்பது உலகறிந்த உண்மை. எனவே நீதிமன்றமே நேரடியாகத் தலையிட்டு ஆணையிட வேண்டும்.
இந்து-முஸ்லீம் கலவரத்தைத் திட்டமிட்டுத் தூண்டிவிடப் பார்க்கின்றவர்களுக்கு ஒன்று சொல்வோம்! இது வெறுமனே இஸ்லாமியர்களின் போராட்டமில்லை. இது மக்கள் போராட்டம். ஜனநாயகத்திற்கான போராட்டம். மதச்சார்பின்மை காக்க நடக்கும் போராட்டம்! இஸ்லாமியர்கள் வேறு, மற்றவர்கள் வேறு என்று பிரித்துவிட முடியாது. அதுவும் தமிழ்நாட்டில் அது முடியவே முடியாது! இஸ்லாமியர்கள் எங்கள் உறவு, எங்கள் ரத்தம், எங்கள் சகோதரர்கள்! எங்கிருந்தோ வந்து இங்கு குடியேறியுள்ள ஆரியப் பார்ப்பனர்கள் மட்டுமே இந்த மண்ணிற்கு அந்நியர்கள்!
இவ்வாறு சுப. வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications