திமுகவுக்கு குட்பை சொன்ன சுப்புலட்சுமி ஜெகதீசன் தி.க.வில் இணைகிறாரா? இனி ஆ.ராசா பாணி பிரசாரம்?
சென்னை: திமுகவின் துணை பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்த கையோடு தீவிர அரசியலில் இருந்து விடை பெறுவதாக அறிவித்த அக்கட்சியின் மூத்த தலைவர் சுப்புலட்சுமி ஜெகதீசன், விரைவில் திராவிடர் கழகத்தில் இணையக் கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
பள்ளி ஆசிரியராக பணியாற்றி, எம்ஜிஆரால் அரசியலுக்கு கொண்டுவரப்பட்டவர் சுப்புலட்சுமி ஜெகதீசன். எம்ஜிஆர் அமைச்சரவையில் இடம்பெற்ற அவர் 40 ஆண்டுகளுக்கு முன்னர் அதிமுகவில் இருந்து வெளியேறி திமுகவில் இணைந்தார்.
ஒரே கேம்.. 1032 பேரை தோற்கடித்த சுப்புலட்சுமி ஜெகதீசன்.. நாடே திரும்பிப் பார்த்த விஷயம் தெரியுமா?
தடா சிறைவாசம்
திமுகவின் ஈரோடு மாவட்ட முகமாக இருந்தார். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தொடங்கி அத்தனை தளபதிகளாலும் சுப்பு அக்கா என அன்புடன் அழைக்கப்படும் பாசத்துக்குரியவராக இருந்தார். இதனாலேயே தடா சட்டத்தின் கீழ் சிறைவாசம் அனுபவித்தார். தமிழக அமைச்சர், மத்திய இணை அமைச்சர் பதவி வகித்த சுப்புலட்சுமி ஜெகதீசன், திமுக துணை பொதுச்செயலாளராகவும் பதவி வகித்தார். கடந்த 2021-ம் ஆண்டு தேர்தலில் தோல்வி அடைந்தார். அத்தேர்தலில் சுப்புலட்சுமி ஜெகதீசன் வெற்றி பெற்றிருந்தால் தமிழகத்தின் முதல் பெண் சபாநாயகர் என்ற பெருமையைப் பெற்றிருந்திருப்பார்.
திமுகவுக்கு குட்பை
இந்நிலையில் உட்கட்சி விவகாரங்களில் அதிருப்தி அடைந்த நிலையில் தீவிர அரசியலுக்கே குட்பை சொல்லிவிட்டார் சுப்புலட்சுமி ஜெகதீசன். 2021-ம் ஆண்டு தேர்தலில் தம்மை தோற்கடித்தவர்கள் மீது கட்சி தலைமை நடவடிக்கை எடுக்கவில்லையே என்கிற ஆதங்கத்தில் சுப்பு அக்கா இருந்தார் என்கின்றன அக்கட்சி வட்டாரங்கள். அதேநேரத்தில் சுப்பு அக்காவின் கணவர் ஜெகதீசனின் தொடர்ச்சியான திமுக மீதான விமர்சனங்களும் ஒரு காரணம் எனவும் சுட்டிக்காட்டப்படுகிறது.
40 ஆண்டுகால அரசியல்
இதனைத் தொடர்ந்து பெரியாரின் சுயமரியாதை கருத்துகளைப் பரப்பும் வகையில் திராவிடர் இயக்கம் ஒன்றில் அவர் இணைய உள்ளதாக அவரது கணவர் ஜெகதீசன், ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கணவர் ஜெகதீசன் பதிவு: அரசியலின் சுத்த சுயம்பிரகாச சன்மார்க்க செம்மல்கள் ஏன் கதறுகிறார்கள் ? அவர் யாரையும் குறை சொல்லாத நிலையில்? பணம் படைத்தோர் மத்தியில் அவர் பணக்காரர்களை மதிக்கவில்லை என்பது உண்மை . சட்ட விரோத செயல் செய்வோர் அவர் வீட்டுப்படி ஏற முடியாதது உண்மை ! எந்த நிலையில் உள்ள அதிகாரிகளிடமும் பிரச்னைகளை தெளிவாக எடுத்துக்கூறி நியாயம் பெற்றுத்தருவார் என்பது உண்மை ! பெரியாரின் கொள்கைகள் , மூட நம்பிக்கைகள் , சனாதனம் கூறும் அதர்ம நெறிகள் இவற்றை 40 ஆண்டுகளாக வென்று புறம் தள்ளினார் என்பது உண்மை .
பகுத்தறிவு பணி
வயிறு நிறையச் சோறிடும் விவசாயி , மானம் காக்க உடை நெய்திடும் நெசவாளி ,வாழ்வில் ஒளி பரவ காலம் எல்லாம் பாடுபட்டார் என்பது உண்மை!
கலைஞரும் , கற்றோரும் , எழுத்தாளர்களும் , இவரை மதிக்கும் வகையில் செயல்பட்டது உண்மை ! இவற்றை ஜீரணிக்க முடியாமல் சில குற்றேவல் ஜென்மங்கள் குடிலர்களாக மாறியதும் உண்மை ! அந்தக்குடிலன்களும் எட்டப்பன்களும் காசு எனும் கருவி கொண்டு இவரைக் காவு வாங்க நினைத்ததும் உண்மை ! களத்தில் காவு கொடுக்கப்படும் முன்னரே கட்சியை விட்டு வெளியேறியதும் உண்மை . அச்சமில்லை , அச்சமில்லை ; அச்சமில்லை என்று கூறி பகுத்தறிவுப்பாதையில் இந்தச்சுடர் இனி ஒளி வீசப்போவதும் உண்மை . இவ்வாறு ஜெகதீசன் கூறியுள்ளார்.