பிராமணர் இனப்படுகொலை என்கிறார் சு.சாமி..ஆவேசத்திற்கு அணை போட்டதே பெரியார்தான் தெரியுமா? பிளாஷ்பேக்!
சென்னை: தமிழ்நாட்டில் பிராமணர் இனப்படுகொலை நடைபெறுகிறது; தமிழகத்தில் ஆளும் திமுகவை தடை செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் பாரதிய ஜனதா கட்சியின் சுப்பிரமணியன் சுவாமி புகார் தெரிவித்து பரபரப்பை கிளப்பி இருக்கிறார்.
தமிழகத்தில் நடைபெறுவது திராவிட மாடல் ஆட்சி; சமூக நீதியை பெற்றுத் தரக் கூடிய திராவிட மாடல் ஆட்சி என்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
ஆனால் தமிழகத்தில் திராவிட ஆன்மீக மாடல் ஆட்சி நடைபெறுகிறது; உ.பி. போல பசுமடம் கட்டுகிறது; பீப் இறைச்சிக்கு தடை விதிக்கிறது என்பது சில கட்சிகளின் விமர்சனம்.
திராவிட மாடல் ஆட்சி என்பது பொய்; தேசிய மாடல் ஆட்சிதான் சரியானது; தமிழகத்தில் தேசிய மாடல் ஆட்சியை நிறுவுவோம் என்கிறது பாஜக.
இத்தனை களேபரங்களுக்கு மத்தியில்தான் பாஜக எம்.பி.யான சுப்பிரமணியன் சுவாமி திடீரென பிராமணர் இனப்படுகொலை நடைபெறுவதாக தமிழகத்தில் ஆளும் திமுக அரசு மீது பெரும் குற்றச்சாட்டை கட்டவிழ்த்துவிட்டிருக்கிறார். இதே புகாருடன் தேர்தல் ஆணையத்துக்கு கடுதாசி அனுப்பியுள்ளார்.

சு.சுவாமி பதற்றம்
1990-ம் ஆண்டு டெல்லி "செல்வாக்கை" வைத்துக் கொண்டு தமிழகத்தில் நடைபெற்ற திமுக ஆட்சியைக் கலைத்துவிட்ட இறுமாப்பில் இருந்து சுப்பிரமணியன் சுவாமி இன்னமும் மீளவில்லை போல என்பதையே இப்போதைய இந்த நடவடிக்கை காட்டுகிறது! சுப்பிரமணியன் சுவாமி, தந்தை பெரியார் மற்றும் பிராமணர் இனப்படுகொலை குறித்து பேசியது அப்படியே கற்பனையின் உச்சம் என்றெல்லாம் நாம் புறந்தள்ளிவிட முடியாது.. எலி எப்போதும் சும்மா ஓடுவது இல்லைதானே! சுப்பிரமணியன் சுவாமி உள்ளிட்டோரின் இந்த பதற்றம் என்பது சுமார் 100 ஆண்டுகளாக தொடரக் கூடியதுதான்!

குலக் கல்வி திட்டம்
1953-ம் ஆண்டு தந்தை பெரியாரின் திராவிடர் கழகம் தமிழகத்தில் உச்சத்தில் செல்வாக்கு செலுத்தி இருந்த காலம். பட்டி தொட்டி எங்கும் பெரியார் பற்ற வைத்த பெருநெருப்பு கனன்று எரிந்து கொண்டிருந்த காலம். அப்போதுதான், முதல்வராக இருந்த ராஜாஜி குலக் கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்தார். அதாவது மனுதர்மப் படி மாணவர்கள் குடும்பத் தொழில் செய்ய வேண்டும் என்று நாம் இன்று கற்று கொண்டிருக்கும் கல்விக்கு கொள்ளி கொண்டு வந்தார் ராஜாஜி. கொந்தளித்து எழுந்தார் பெரியார் தம் தொண்டர்களுடன்.

அக்கிரகாரத்தை கொளுத்த தயாராக இருங்கள்
அப்போதுதான், திராவிடர் கழகத் தோழர்கள் மண்ணென்ணையும், தீப்பெட்டியும் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். குலக்கல்வித் திட்டத்தைத் திரும்பப் பெறுவதற்கு ராஜாஜிக்கு கெடு விதிப்போம். அந்த கெடுவிற்குள் அவர் திரும்பப் பெறாவிட்டால் நான் அறிவித்தவுடன் அக்கிரகாரத்தைக் கொளுத்த வேண்டும் என பிரகடனம் செய்தார் தந்தை பெரியார். மண்ணெண்ணெய், தீப்பெட்டியுடன் தயாராக இருங்கள்.. பிராமணர்களின் அக்கிரகாரத்தை கொளுத்த தயாராக இருங்கள் என்று சொன்ன பெரியார் தன் வாழ்நாள் இறுதி வரை அதை நிறைவேற்ற சொல்லாமல் மறைந்து போனார்.. பிராமணர்களின் பேராதிக்கத்தை மூர்க்கமாக எதிர்த்த பெரியார், ஒவ்வொரு மனிதனும் சக மனிதனைப் போல சமமாக வாழ வேண்டும் என்பதைத்தான் அதாவது மனிதத்தன்மையைத்தான் வலியுறுத்தினார். அதனால்தான் அக்கிரகாரங்களைக் கொளுத்த சொல்லவும் இல்லை.. இன்றைய சுப்பிரமணியன் சுவாமிக்கள் சொல்வதைப் போல ஆதிக்கம் செலுத்திய பிராமணர்களை இனப்படுகொலை செய்ய சொல்லவும் இல்லை!

பெரியார் நிலைப்பாடு என்ன?
ஏனெனில் பெரியார் ஒரு தர்க்க வழி- அமைதிவழிப் புரட்சியாளர்; ஆயுதம் ஏந்தாத அழிவு வேலைக்காரர்; ஆம் அப்படித்தான் சொன்னார் பெரியார். அதாவது தலைகீழாகக் கவிழ்ப்பதுதான் புரட்சி. அதை யாராவது எதிர்த்தால் அந்த வேலையைக் குஷாலாகச் செய்ய வேண்டியதுதான் என்று முழங்கியவர் பெரியார். 1957-ம் ஆண்டு இந்திய நிலப்பரப்பில் முதன் முதலாக அரசியல் சாசனத்தை தீ வைத்து எரிக்கும் பிரமாண்டப் போராட்டத்தை நடத்தினார் பெரியார். அந்த காலகட்டத்தில், எனது நாற்பதாண்டு பொது வாழ்க்கையில் ஒருவனைக் கூட உதைத்ததில்லை, குத்தியதில்லை. ஒருவனுக்குக் கூட ஒரு சிறு காயம் பட்டதில்லை, கலவரமில்லாமல் நாசமில்லாமல் எவ்வளவு தூரம் நடக்கலாமோ அவ்வளவுக்கவ்வளவு நல்லது என்று விரும்பி அதன்படி நடப்பவன். வெட்டாமல் குத்தாமல் காரியம் சாதிக்கமுடியாது என்ற நிலைமை வருமானால் சும்மா இருந்தால் நான் மடையன்தானே? ஒரு ஆயிரம் பார்ப்பானையாவது கொன்று, ஒரு இரண்டாயிரம் வீடுகளையாவது கொளுத்தி, ஒரு நூறு பார்ப்பனர்களையாவது அதில் தூக்கிப் போட்டாலொழிய சாதி போகாது என்ற நிலைமை வந்தால் என்ன செய்வீர்கள்? என்றும் பேசியவர் பெரியார்.

கருஞ்சட்டைப் படை
இப்படிப்பட்ட பெரியார் எதற்கும் அஞ்சாதவர் என்பதற்கு ஒற்றை உதாரணம் அவர் உருவாக்கி, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கருஞ்சட்டைப்படைதான். நீதிக்கட்சியானது திராவிடர் கழகம் எனும் பெயர் மாற்றம் செய்யப்பட்ட போதே சர்வபரி தியாகத்துக்குமான கருஞ்சட்டைப் படை (ராணுவப் பிரிவு) உருவாக்கியவர் பெரியார். அன்றைய சென்னை மாகாண அரசு, இன்றைய சுப்பிரமணியன் சுவாமிகள் சொல்வது போல பிராமணர் இனப்படுகொலை சம்பவம் நடந்துவிடும் என்று அஞ்சி 1948-லேயே கருஞ்சட்டைப்படையை தடை செய்த வரலாறு ஒன்றும் ஈ.வெ.ரா. அல்லது பெரியார் அல்லது இன்றைய திமுகவின் முன்னோடி இயக்கத்துக்கு உண்டு! 100 ஆண்டுகளுக்கு முன்னர் பெரியார் எனும் பூகம்பத்தால் உருவான பிராமணர் இனப்படுகொலை அச்சம் சுப்பிரமணியன் சுவாமிக்கு இன்னமும் தொடருகிறது என்றால் ஈ.வெ.ரா.எனும் கிழவன் ஏற்படுத்திய தாக்கம் அத்தகைய குலைநடுக்கம் என்பது மிகை அல்ல!












Click it and Unblock the Notifications