கூடை கூடையாக கடம்பா மீன்கள்.. சென்னையில் நல்ல மீனுடன் கலந்த கெட்டுப்போன மீன்கள்? பரபரக்குது காசிமேடு
சென்னை: சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் உணவு பாதுகாப்பு துறையினர், அதிரடியாக சோதனை மேற்கொண்டுள்ளனர். வெளிமாநிலத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட மீன்கள் விற்கப்படுவதாக வந்த புகாரையடுத்து, இந்த சோதனை நடந்து வருகிறது. இதனால் காசிமேட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுவருகிறது.
சென்னை காசிமேட்டை பொறுத்தவரை, 3000-க்கும் மேற்பட்ட பைபர் படகுகளும், 800-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளும் தினசரி மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. இந்த துறைமுகம், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த, மீனவ குடும்பங்களின் வாழ்வாதாரமாகவும் இருந்து வருகிறது.

கோயம்பேடு: எனவே, இந்த மீனவர்கள் வாரஇறுதி விடுமுறையை கணக்கு செய்து, முன்கூட்டியே மீன்பிடிக்க சென்றுவிடுவார்கள்.. சனிக்கிழமை இரவும், ஞாயிற்றுக்கிழமைகளிலும் காசிமேடு மீன்பிடி சந்தையில் திருவிழா போல கூட்டம் அலை மோதும்.
ரக ரகமான மீன்களை பிடித்துக்கொண்டு, மீனவர்கள் அன்றுதான் கரை திரும்பியிருப்பார்கள் என்பதால், இந்த மீன்களை வாங்குவதற்கு மீன்பிரியர்கள் சனிக்கிழமை இரவே சென்றுவிடுவார்கள். பிடித்த சில மணி நேரங்களிலேயே கிடைப்பதால், காசிமேடு மீனின் சுவைக்கு தனி ருசி உண்டு என்பதால் இந்த கிராக்கி இருந்து வருகிறது... அந்த அளவுக்கு காசிமேடு மீன்பிடி துறைமுகம் முக்கியத்துவம் நிறைந்த பகுதியாகும்..
உள்ளூர் மீன்கள்: இங்கு மக்கள் ஆர்வத்துடன் மீன் வாங்க குவிந்து வருவதால், இதை முன்னிறுத்தியே, சிலர் கல்லா கட்ட நினைத்துவிட்டார்களாம்.. உள்ளூர் மீன்களுடன், தரமற்ற, ரசாயனம் பூசப்பட்ட, வெளி மாநில மீன்கள் கலந்து விற்கப்படுவதாக கூறப்படுகிறது.. சில தினங்களுக்கு முன்புகூட, சென்னை காசிமேடு துறைமுகத்திற்கு வெளியில் இருந்து மீன் ஏற்றி வந்த லாரியை, காசிமேடு சிறிய விசைப்படகு உரிமையாளர் சங்கத்தினர் மடக்கி சோதனை செய்திருக்கிறார்கள்.
அந்த லாரியில், தரமற்ற, துர்நாற்றத்துடன் கடம்பா உள்ளிட்ட மீன்கள் இருந்திருக்கின்றன.. அவையெல்லாம் காசிமேடு துறைமுக மீன்களுடன் கலந்து விற்பதற்காக, வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து எடுத்து வரப்பட்ட மீன்கள் என்பது தெரிந்து, மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்தே மோசடியில் ஈடுபடும் கும்பலை தடுக்க வேண்டும் என, காசிமேடு மீனவர்கள், மீன்வளத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தனர்.
ரசாயன மீன்கள்: இது குறித்து, காசிமேடு விசைப்படகு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் விஜேஷ் கூறியதாவது: "காசிமேட்டில் எங்களை போன்ற மொத்த வியாபாரிகளுக்கு மட்டுமே இடம் ஒதுக்கி தரப்பட்டுள்ளது.. ஆனால், சிலர் இங்குள்ள மீன்களை வாங்கி விற்காமல், வெளி மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து தரமற்ற, ரசாயனம் பூசப்பட்ட மீன்களை வாங்கி விற்கின்றனர். மேலும், சிலர் எங்களிடம் வாங்கும் மீன்களுடன், அந்த மீன்களையும் கலப்படம் செய்து விடுகிறார்கள்.
அப்படி வெளியிலிருந்து லாரிகளில் எடுத்து வரப்படும் தரமற்ற மீன்களை, காசிமேடு துறைமுகத்தில் இறக்கி, அந்த மீன்கள், இந்த துறைமுகத்தில் தான் பிடிக்கப்பட்டது என்று சில்லரை வியாபாரிகளை நம்ப வைத்து ஏமாற்றிவிடுகிறார்கள்.
துர்நாற்றம்: ரசாயனம் கலந்த மீன்களை, காசிமேடு துறைமுகத்தில் வைத்தே சுத்தம் செய்து, துர்நாற்றம் மிக்க அதன் கழிவுகளையும் வீசிவிடுகிறார்கள்.. இதனால் கடலில் இறங்கி வேலை செய்யும் மீனவர்களுக்கு சரும பிரச்னைகள் ஏற்படுகின்றன. கெட்டுப்போன மீன்களை பதப்படுத்தி, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கிறார்கள். இதன்காரணமாகவே புகார் அளித்தோம் என்கிறார்.
மீனவர்கள் தந்த இந்த புகாரின் அடிப்படையில் உணவுப்பாதுகாப்பு துறை அதிகாரிகள் இன்று, காசிமேட்டில் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.. வெங்கட் என்பவரது மீன் விற்பனை ஷெட்டில் தீவிர சோதனை நடைபெறுகிறது. இதனால் துறைமுக பகுதியே பரபரப்பாக காணப்படுகிறது.















Click it and Unblock the Notifications