அரசியல்ல வெற்றி – தோல்வியெல்லாம் சகஜமப்பா.. ஃபீனிக்ஸ் போல எழுவோம் பாருங்க.. டிடிவி நம்பிக்கை
சென்னை: மக்களவை தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தல்களில் தமிழக மக்கள் அளித்த தீர்ப்புக்குத் தலை வணங்குவதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்
மக்களவை தொகுதி தேர்தல்களில் பதிவான வாக்குகளும் தமிழக பேரவை இடைத்தேர்தல்களில் பதிவான வாக்குகளும் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன. திமுக, அதிமுக தவிர அமமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் உள்ளிட்ட எந்த கட்சியும் இந்த தேர்தல்களில் வெற்றியோ முன்னிலையோ பெறவில்லை.

அதிமுகவிற்கு பெரும் சவாலாக இருக்கும் என கருதப்பட்ட டிடிவி தினகரனின் அமமுக பெரும் தோல்வி என்னும் பாதாளத்தில் தான் விழுந்துள்ளது. இந்நிலையில் இந்த தோல்வி குறித்து டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ளார்.
அதில் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தல்களில் தமிழக மக்கள் அளித்த தீர்ப்புக்குத் தலை வணங்குகிறோம். தேர்தல் அரசியலில் வெற்றி - தோல்வி என்பது இயல்பானது என கூறியுள்ளார்.
எத்தனையோ இன்னல்களுக்கும், இடையூறுகளுக்கும் இடையே கழகம் காக்க, மக்கள் பணியாற்ற சுயேச்சைகளாக களமிறங்கியவர்களுக்கும், இரவு- பகல் பார்க்காமல் உழைத்த கழக உடன்பிறப்புகளுக்கும், கழகத்திற்கு வாக்களித்து ஆதரவளித்த நல்ல உள்ளங்களுக்கும் நன்றிகளைக் காணிக்கையாக்குவதாகவும் கூறியுள்ளார்
இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கற்றுத்தந்த துணிவோடு, ஃபீனிக்ஸ் பறவையைப் போல மீண்டும் எழுந்து நிற்போம் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தூய்மையான அன்போடு தமிழ்நாட்டு மக்களின் மனங்களை முழுமையாக வென்றெடுக்க தொடர்ந்து பாடுபடுவோம். தமிழகத்தின் உரிமைகளுக்காக அமமுகவின் குரல் எப்போதும் போல ஓங்கி ஒலித்திடும் என பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications