"பஞ்ச தந்திரம்".. கோட்டைக்கு செல்கிறாரா ஸ்டாலின்.. அசால்ட்டாக வெல்லும் சூட்சுமம் இதுதானோ?!!
திமுகவுக்கு சாதகமான விஷயங்கள் அரசியல் களத்தில் ஏற்பட்டு வருகின்றன
சென்னை: திமுகதான் ஆட்சியை பிடிக்கும் என்று கணிப்புகள் உலா வரும் நிலையில், அதற்கேற்ற கள நிலவரமும், அரசியல் சூழலும் அமைந்து வருகின்றன என்பதை கவனிக்க வேண்டி உள்ளது.. அதாவது திமுகவுக்கான காலம் கனிந்து கொண்டிருக்கிறது.
இந்த முறை திமுக எடுத்து வரும் முயற்சிகள் எல்லாமே வியப்பை தந்து வருகின்றன.. எந்த தேர்தலுக்குமே இப்படி ஒரு வியூகத்தை மேற்கொண்டதில்லை.. கலைஞர் இருக்கும்போது, கூட்டணிகள், சீட், தொகுதிகள் என எல்லாமே உடனுக்குடன் வெளிவந்துவிடும்.
அதுவும் வேட்பாளர் லிஸ்ட் வெளியிடுகிறார்கள் என்றால், அதுகுறித்த விஷயமும் ஓரளவு கசிந்துவிடும்.. இப்போது அப்படி இல்லை.. லிஸ்ட் வெளிவரும்வரை எல்லாமே சீக்ரெட்டாக இருந்தது. வரும் தேர்தலில் திமுகதான் ஆட்சியை பிடிக்கும் என்று ஆங்காங்கே தகவல்கள் கசிந்து கொண்டிருக்க காரணம் என்ன என்பது குறித்தும் நாம் யோசிக்க வேண்டி உள்ளது.
முதல் காரணம்
முதலாவதாக, அதிமுகவின் கூட்டணி பலவீனமாக இருக்கிறது.. கடந்த 2016-ல் இருந்த வலிமையான கூட்டணி இப்போது இல்லை.. இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட கருணாஸ், தமீம் அன்சரி, சரத்குமார் போன்றவர்களையும் காணோம்.. முழுக்க பாமக, பாஜகவை நம்பியே களம் இறங்கி உள்ளது அதிமுக கூட்டணி.. ஆனால், திமுகவோ கூட்டணியில் வலிமையாக உள்ளது.. சிதறாமல் இருக்கிறது.. ஒரு கட்சியையும் நழுவ விட்டுவிடாமல், மேலும் கூடுதலான கட்சிகளை உள்ளே இழுத்து வந்து கூட்டணி அமைத்துள்ளது முதல் பிளஸ் பாயிண்ட் ஆகும். அதிருப்தியே இருந்தாலும் சரி, அனைத்து கூட்டணி தலைவர்களையும் சரிக்கட்டிக் கொண்டு களமிறங்கியுள்ளார் முக ஸ்டாலின்.
இரண்டாவது காரணம்
இரண்டாவதாக, அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக பெரும் மைனஸாக பார்க்கப்படுகிறது.. இந்த முறையும் பாஜகவின் அதிருப்தி ஓட்டுக்களை அதிமுகவும், பாமகவும் சம்பாதிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.. தமிழகத்துக்கு எதிரான திட்டங்கள், அறிவிப்புகள் உட்பட விலைவாசி ஏற்றம் வரை எந்த விதத்திலும் பாஜகவுக்கான சாதகமான ஓட்டுக்கள் குவியும் வாய்ப்புகளும் இல்லை.. இந்த தாக்கம் கூட்டணிகளையும் சேர்த்து தாக்குகிறது. இப்படிப்பட்ட எதிர்ப்பு வாக்குகளும், திமுகவுக்கு இரண்டாவது பிளஸ் ஆக அமைந்துள்ளது.
மூன்றாவது காரணம்
மூன்றாவதாக, அதிமுக மீது அரசு ஊழியர்களின் கோபமும் இன்னும் முழுமையாக நீங்கவில்லை என்றே தெரிகிறது.. 2003-ம் ஆண்டு எஸ்மா சட்டத்தை போட்டு, அதன் பலனை 2004 தேர்தலில் அதிமுக அறுவடை செய்ததை யாரும் மறுக்க முடியாது.. அதனால்தான் திமுக ஆட்சிக்கு வர இது மிகப்பெரிய பலமாக இருந்தது. இப்போதுகூட, கடந்த தேர்தலின்போது, அரசு ஊழியர்கள் குறித்து எடப்பாடியார் முன்வைத்த விமர்சனங்களும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதை மறுக்க முடியாது. எனவே, அரசு ஊழியர்களின் வாக்குகளை திமுக பெருமளவு அள்ள வாய்ப்புள்ளதாக தெரிவது, 3வது பிளஸ் ஆக உள்ளது.
நான்காவது காரணம்
நான்காவதாக, வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு என்பது அந்த சமுதாயத்தினருக்கு பெரும் மகிழ்ச்சியை தந்தாலும், மற்ற சமுதாயத்தினரின் அதிருப்தியை, எதிர்ப்பை அதிமுக சம்பாதித்துள்ளது.. இதனால், வடமாவட்ட வன்னிய சமுதாய அமைச்சர்களில் 2 பேரின் வெற்றியும் சற்று சிரமம் என்ற ஒரு பேச்சும் கிளம்பி உள்ளது.. வன்னிய சமுதாய அமைச்சர்களே வெற்றி பெறாவிட்டால், தென் மாவட்டங்களில் இதன் நிலைமை மேலும் மோசமாகும் என்று கூறப்படுகிறது.. இந்த கோபம் தென் மண்டல மக்களுக்கு இந்த கோபம் ஓபிஎஸ் மீதும் உள்ளது. எனவே, இந்த ஒதுக்கீடு விஷயத்தில், அந்த சமுதாய அதிருப்திகளின் ஓட்டுக்கள் திமுக பக்கம் விழ வாய்ப்புள்ளளது 4வது பிளஸ் ஆக கூறப்படுகிறது.
ஐந்தாவது காரணம்
ஐந்தாவதாக, தினகரன், கமலின் வருகை மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.. தினகரனுக்கு சாதி வாக்குகள் விழும் என்பதில் சந்தேகமில்லை.. அதேசமயம், அதிமுகவின் அதிருப்தி வாக்குகளும் சேர்ந்தே விழும் என்பதை மறுக்க முடியாது.. அமமுக - அதிமுக இணைப்பு என்பது நடக்கவே இல்லை... சசிகலாவும் ஒதுங்கிவிட்டது திமுகவுக்கு ஆக சிறந்த பலமாக உள்ளது..
டிடிவி தினகரன்
இதேதான் கமலுக்கும்... இவர்கள் 2 பேருக்குமே இந்த முறை வாக்குகள் கூடும்.. ஆனால், கமல் நிற்கும் கோவை தெற்கு, தினகரனின் கோவில்பட்டி இரு இடங்களிலும் திமுக, அதிமுகவுக்கு சற்று திணறல் ஏற்படும் என்பதும் உறுதி என்கிறார்கள். அதேசமயம், இந்த 2 இடங்களை தவிர, இந்த 2 கட்சிகளுக்கும் அவ்வளவாக பரந்து விரிந்த செல்வாக்கு இல்லை என்பதால், அதிமுகவுக்கு மாற்று திமுகதான் என்றாகிவிடுகிறது. எனவே, இதுவும் திமுக பலத்துக்கு 5வது பிளஸ் ஆக சொல்லப்படுகிறது.
கூட்டணி
ஆக, இயற்கையாகவே திமுக கூட்டணி பலம் வாய்ந்ததுடன், பலம் வாய்ந்த எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தையும் பெற்றுள்ளதும், அதிமுகவில் தொடர்ந்து வெடித்து வரும் தலைமை விவகாரம், உட்கட்சி பூசல் போன்றவைகளும், திமுகவை பெற்றி பெற செய்து, ஸ்டாலினை கோட்டைக்கு அனுப்பும் வழியை எளிதாக்கி வருகின்றன என்றே சொல்லலாம்.