சென்னையில் பெய்த மழை... ஊட்டியாக மாறிய சென்னையால் மகிழ்ச்சியில் மக்கள்
சென்னையின் புறநகர் பகுதிகளில் திடீரென மழை பெய்வதால் வெப்பம் தணிந்து குளுமை பரவியுள்ளது.
சென்னை: சென்னையில் தாம்பரம், பெருங்களத்தூர், பூந்தமல்லி, ஆவடி சுற்றுவட்டாரப்பகுதிகளில் மழை பெய்து வருகிறது. திடீர் கனமழையால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். மழை காரணமாக வெப்பம் தணிந்து குளுமை பரவியுள்ளது.
தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக பல ஊர்களில் மழை பெய்து வருகிறது. இன்று முதல் ஐந்து நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நீலகிரி கோவை மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

கடந்த ஒரு வாரமாக ஊட்டியில் மேக மூட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. அவ்வப்போது மழை பெய்து வருவதால் எந்நேரமும் குளிர்ச்சியான கால நிலை நிலவுகிறது. நேற்றும் காலை முதலே வானம் மேக மூட்டமாக காணப்பட்டது. இதனால், ஊட்டியில் தாவரவியல் பூங்கா, படகு இல்லம், சூட்டிங் மட்டம் மற்றும் பைக்காரா போன்ற பகுதிகளில் பகல் நேரங்களிலேயே கடுங்குளிர் நிலவியது.
வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் அனைத்து சுற்றுலா தலங்களையும் கண்டு ரசித்தனர். பிற்பகலுக்கு மேல் மழை கொட்டி தீர்த்தது. கன மழையால் சிறிது நேரம் பாதுகாப்பு கருதி படகு சவாரி நிறுத்தப்பட்டது. மழையால் தாவரவியல் பூங்கா புல் மைதானங்கள் சேறும் சகதியுமாக மாறியது. இதனால், சுற்றுலா பயணிகள் அமருவதற்குகூட இடமின்றி தவித்தனர்.
இன்றும் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அரசு தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சிக்காக 5 லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளன. தினசரியும் பெய்து மழையால், பூங்காவில் உள்ள அனைத்து பகுதிகளிலும் பூத்துள்ள மலர்கள் அனைத்தும் அழுகி உதிரும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனிடையே சென்னையில் பிற்பகல் வரை பல இடங்களில் வெயில் சுட்டெரித்த நிலையில் பிற்பகலுக்கு மேல் பல பகுதிகளில் சாரல் மழை பெய்தது. புறநகர் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.
வானிலை ஆய்வு மையம் கணித்தது போல சென்னையில் தாம்பரம், பெருங்களத்தூர், பூந்தமல்லி, ஆவடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. திடீர் கனமழையால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். பள்ளிகளில் பொதுத்தேர்வு எழுதச்சென்ற மாணவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். கோடை காலத்தில் பெய்த வெப்பச்சலன மழையால் வெப்பம் தணிந்து நகரில் குளுமை பரவியுள்ளது.












Click it and Unblock the Notifications