வங்கியில் அடகு வைத்த தங்க நகைகளை மறு அடகு வைக்க திடீர் கட்டுப்பாடு.. பொதுமக்கள் எதிர்ப்பு
சென்னை: தங்க நகைக்கடன் தொகையை முழுமையாக கட்டி அந்த கடனை முடித்த பிறகு, மறுநாள் தான் புதிதாக நகைக்கடன் தொடங்கி நகையை அடகு வைக்க முடியும் என்று ரிசர்வ் வங்கி புதிய அறிவுரை வழங்கி உள்ளது வங்கியில் அடகு வைத்த நகைகளை மறுஅடகு வைக்க ரிசர்வ் வங்கி விதித்துள்ள இந்த புதிய கட்டுப்பாடுகளுக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.கந்துவட்டிக்காரர்களை நாடிச்செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என மக்கள் தெரிவித்துள்ளனர்.
தங்கத்தின் விலை எந்த அளவிற்கு வேகமாக ஏறியதோ, அதை வைத்து கடன் பெறலாம் என்று நினைத்த மக்களுக்கு சிக்கலுக்கு மேல் சிக்கல் வந்துள்ளது. தங்க நகைகளை அடகு வைத்ததால் பொதுவாக, தங்கள் கடன் தொகையை முழுமையாக கட்டி நகையை திருப்ப முடியவில்லை என்றால் வட்டித் தொகையை மட்டும் கட்டி,மறு அடகு வைப்பார்கள். இதனால், நகைக்கடன் வாடிக்கையாளர்கள் ஒரே நேரத்தில் அதிக பணத்தை புரட்ட வேண்டிய கட்டாயம் ஏற்படாது. ஆனால் ரிசர்வ் வங்கியானது கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வங்கிகளுக்கு வழங்கி உள்ள அறிவுரை மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

இதன்படி நகைக்கடனை பொறுத்தவரையில் ஓர் ஆண்டு முடிவில் மொத்த பணத்தையும் கட்டி நகையை திருப்பிக் கொள்ள வேண்டும். மேலும், திருப்பிய நகையை அதே தினத்தில் மறு கடன் வைக்க முடியாது. ஒரு நாள் முடிந்து, அடுத்த நாள் தான் மீண்டும் புதிய நகைக்கடனை தொடங்க முடியும் என்று ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளது. இந்த உத்தரவால் வங்கிகளுக்கும் சரி,வாடிக்கையாளர்களுக்கும் சரி நல்லதாக இல்லை..
ஏன் இந்த முடிவு: நகை கடன் வழங்கும் வங்கிகளில் பல்வேறு குளறுபடிகள் நடப்பதாக ரிசர்வ் வங்கிக்கு புகார்கள் பறந்தன. கடன்களை முடிவுக்கு கொண்டு வராமல் தொடர்ந்து நகைக்கடன் ஐந்து வருடம், 10 வருடம் என தொடர்கிறது. அதேபோல் தங்க நகைகளை மதிப்பீடு செய்பவர்கள் மோசடி செய்து நகைகளை திரும்ப திரும்ப அடகு வைப்பதும் ஆங்காங்கே நடக்கிறது. இதேபோல் வாடிக்கையாளர்கள் இல்லாமலேயே கடன்களின் மதிப்பீட்டை மதிப்பீட்டாளர்கள் மதிப்பிடுவதும் நடக்கிறது. இதனால் தான் ரிசர்வ் வங்கி இந்த உத்தரவு போட்டிருப்பதாக கூறப்படுகிறது. அதேநேரம் ரிசர்வ் வங்கியின் இந்த உத்தரவால், நகைக்கடன் அடகு வைத்தவர்கள் பெருமளவு பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.
ரிசர்வ் வங்கியின் இந்த அறிவுரை காரணமாக தங்க நகையை அடகு வைத்து கடன் பெற்ற ஏழை மக்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். எப்படி என்றால் ஒருவர், 3 லட்சம் நகை கடன் வாங்கி உள்ளார் என்றால், ஆண்டு இறுதியில் வெறும் 30 ஆயிரத்திற்குள் தான் வட்டி இருக்கும். அதை கட்டினால் போதும். ஆனால் இப்போது 3 லட்சம் பணத்தை மொத்தமாக கட்ட வேண்டியது அவசியம் ஆகிவிடும். அதேபோல் 3 லட்சம் பணத்தை மொத்தமாக கட்ட வேண்டும் என்றால், தனியாரிடம் போய் கந்துவட்டிக்கு பணம் வாங்க வேண்டிய நிலை ஏற்படும். இதேபோல் 50000 தொடங்கி 50 லட்சம் வரை நகைக்கடன் வாங்கிய பலரும் ரிசர்வ் வங்கியின் இந்த அறிவுரையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சிலர் நகைக்கடன் பெற்று முதலீடாக கொண்டு குறைந்த வட்டிக்கு கடனை பெற்று அதனை வெளிச்சந்தையில் கூடுதல் வட்டிக்கு கடன் விடுவது அதிகமாக நடக்கிறது. இதனால் அவர்களுக்கு நகைக்கு பாதுகாப்பும் கிடைப்பதுடன், வங்கிக்கு கட்ட வேண்டிய வட்டியை விட கூடுதலாக வருமானமும் கிடைக்கிறது இதுபோன்ற சூழல் இருக்கிறது. இந்த சூழலில் தான் இப்படியான அறிவுரைகள் வந்திருப்பதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications