சிக்கலில் அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பா.. சம்மன் அனுப்பி விசாரணை நடத்த திட்டம்!
சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் சூரப்பா உள்ளிட்டோருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த உள்ளதாக, சட்டப்பேரவை பொது கணக்கு குழு தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பா, முறைகேடுகளில் ஈடுபட்டதாக கூறி, அவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் குழுவை நியமித்து முந்தைய அதிமுக அரசு உத்தரவிட்டது.

சூரப்பாவின் பணிக்காலத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் நிதி மேலாண்மையில் முறைகேடு, காசோலை மோசடி, உரிய அனுமதியின்றி விதிகளை மீறி உபகரணங்கள் கொள்முதல் செய்தது உள்ளிட்டவை தொடர்பாக ரூ.2.92 கோடிக்கு குளறுபடிகள் நடைபெற்றுள்ளதாக தமிழக அரசு நியமித்த விசாரணைக்குழு தெரிவித்தது.
இந்நிலையில், சட்டப்பேரவை பொதுக் கணக்கு குழு தலைவர் செல்வபெருந்தகை தலைமையில் சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் இன்று நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், இந்திய கணக்கு தணிக்கைத்துறை அளித்த அறிக்கையின் அடிப்படையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த காலங்களில் நடந்த பல்வேறு விதிமீறல்கள், புகார்கள், ஊழல்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த சட்டப்பேரவை பொது கணக்குக் குழு தலைவர் செல்வப்பெருந்தகை, 2016 ஆம் ஆண்டு அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஊழல் புகார் குறித்து 3 மாதத்திற்குள் முழு அறிக்கை அரசிடம் வழங்கப்படும் என்றும், புகார் குறித்து விசாரிக்க அனைத்து கட்சி உறுப்பினர்கள் அடங்கிய துணைக்குழு அமைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த காலங்களில் அண்ணா பல்கலைக்கழகத்தில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்துள்ளதாக இந்திய கணக்கு தணிக்கைத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர், முன்னாள் பதிவாளர், தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்தின் முன்னாள் இயக்குனர் உள்ளிட்டோருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த உள்ளோம். இது தொடர்பாக மூன்று மாதங்களுக்குள் விரிவான விசாரணை நடத்தி, தமிழக அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications