Tamilnadu Full lockdown: தமிழகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்!
சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த இன்று ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமலாகியுள்ளது. இன்று அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஓமிக்ரான் வைரஸும் எண்ணிக்கையில் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த நிலையில் கொரோனா பரவலைத் தடுப்பதற்கு கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என மாநில அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.
கட்டுப்பாடுகளை விதிக்காவிட்டால் கொரோனா பரவல் மேலும் அதிகரிக்கக் கூடும என மருத்துவ வல்லுனர்களும் அறிவுறுத்தியுள்ளனர்.

இரவு நேர ஊரடங்கு
அண்டை மாநிலங்களாக கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கும் வார இறுதி நாட்கள் ஊரடங்கும் அமலாகியுள்ளன. இந்த நிலையில் தமிழகத்தில் தலைநகர் சென்னையில் கொரோனா கேஸ்கள் நாளுக்கு நாள் அதிகமாகின. சென்னை மட்டுமல்லாமல் கோவை, மதுரை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் கேஸ்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது.

தமிழகத்தில் முழு ஊரடங்கு
இதையடுத்து கடந்த 4 ஆம் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் கடந்த 4 ஆம் தேதி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி தமிழகத்தில் கடந்த 6ஆம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு அமலாகியுள்ளது. அதன்படி இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் உள்ளது.

எது இயங்காது
அது போல் ஞாயிற்றுக்கிழமைகளில் இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன் படி இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமலாகியுள்ளது. தமிழகத்தில் இன்று காய்கறி, மளிகை, இறைச்சி கடைகள், ஜவுளி, நகைக் கடைகள், வணிக வளாகங்கள், திரையரங்குகள் திறக்கப்படாது.

டாஸ்மாக் விடுமுறை
டாஸ்மாக் மதுபான கடைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுப் போக்குவரத்து மற்றும் மெட்ரோ ரயில் சேவை இயங்காது. ஆனால் மின்சார ரயில் மட்டும் குறைந்த எண்ணிக்கையில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ஓட்டல்களில் பார்சல் சேவைக்கு உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் மூலம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பயணச் சீட்டு
ரயில், விமான பயணிகள் சொந்த மற்றும் வாடகை வாகனங்களில் செல்ல அனுமதி உண்டு. வாகன சோதனையின் போது பயணச் சீட்டை காண்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை கண்காணிக்கும் பணியில் தமிழகம் முழுவதும் 60 ஆயிரம் போலீஸார் ஈடுபடவுள்ளனர். சென்னையில் மட்டும் 10 ஆயிரம் போலீஸார் ஈடுபடுகிறார்கள்.

வாகன சோதனை
நகரில் 400-க்கும் மேற்பட்ட இடங்களில் தடுப்புகள் அமைத்து போலீஸார் வாகன சோதனையை மேற்கொள்ள உள்ளனர். மேம்பாலங்கள் அடைக்கப்பட்டு, சிக்னல்கள் நிறுத்தப்படும் என தெரிகிறது. முழு ஊரடங்கான இன்று அவசிய தேவை இல்லாமல் வாகனங்களில் ஊர் சுற்றினால் வழக்குப் பதிவு செய்யப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications