பிடிஆர் பேச்சும்.. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கோபமும்.. ஒரே நேரத்தில் நடந்த 2 நிகழ்வுகள்
சென்னை: திமுக மட்டும்தான் புத்திசாலித்தனமான கட்சி என்று கருத வேண்டாம் என்றும், நீங்கள் பேசுவது பற்றி நாங்கள் சொல்லாததால் எங்களுக்கு ஏதும் தெரியாது என நினைக்க வேண்டாம் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா கூறியுள்ளார். இன்னொரு பக்கம், நீதித்துறை இலவச திட்டங்களில் தலையிடுவதற்கு எதிராக பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சில தினங்களுக்கு முன்பு பேட்டியளித்திருந்தார். இரு நிகழ்வுகளும் ஒரே நேரத்தில் நடந்துள்ளன.
கடந்த சில நாட்களுக்கு முன்பாக உத்தரப் பிரதேசம் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, தேர்தலில் வெற்றிபெறுவதற்காக அரசியல் கட்சிகள் இலவச திட்டங்களை அறிவிக்கும் கலாசாரம் ஆபத்தானது என்றும், அதனை நாட்டிலிருந்து அகற்ற வேண்டும் என்றும் தெரிவித்தார்.
"இலவச கலாச்சாரம் நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் ஆபத்தானது. இந்த கலாச்சாரத்தை கடைபிடிப்பவர்கள், புதிய விரைவு சாலைகளை, புதிய விமான நிலையங்களை, பாதுகாப்பு பகுதிகளை கட்டமைக்க மாட்டார்கள். இந்த எண்ணங்களை நாம் தோற்கடிக்க வேண்டும்." என்றார்.

உச்சநீதிமன்றத்தில் வழக்கு
இந்த நிலையில், இலவசங்களை ஒழுங்குபடுத்த வேண்டும் என்றும் இதனை மீறும் அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய் வழக்கு தொடர்ந்தார். இதற்கு எதிராக ஆம் ஆத்மி கட்சி உள்ளிட்ட பலரும் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கில் திமுகவும் எதிர்மனுதாரராக சேர்க்கப்பட்டது.

தலைமை நீதிபதி
இந்த வழக்கை கடந்த 17 ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, "இலவசங்கள் தொடர்பான வாக்குறுதிகளை தர கூடாது என அரசியல் கட்சிகளுக்கு தடை விதிக்க முடியாது. மக்களுக்கான நலத் திட்டங்களை செயல்படுத்துவது அரசின் கடமை. இந்த விவகாரங்களில் நீதிமன்றம் தலையிடுவது தொடர்பான கேள்வியும் உள்ளது." என்றார்.

இன்று விசாரணை
இந்த நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இன்று திமுக சார்பில் வழக்கறிஞர் வில்சன் எம்பி வாதிடிக்கொண்டிருந்தபோது குறுக்கிட்ட தலைமை நீதிபதி ரமணா, "நீங்கள் மட்டும்தான் அறிவார்ந்த கட்சி என்று நினைக்கவேண்டாம். நாங்கள் பேசாமல் இருப்பதால் நீங்கள் சொல்வதை எல்லாம் அறியாமல் இருக்கிறோம் என்று மட்டும் நினைக்காதீர்கள்." என்று காட்டமாக கருத்து தெரிவித்தார்.

பிடிஆர் பேட்டி
அதேநேரம், தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் பேட்டியொன்று சமீபத்தில் இதே இலவச திட்டம் தொடர்பாக நீதிமன்றங்களை விமர்சிப்பதாக வந்திருந்தது. 3 நாட்கள் முன்பாக சவுத் ஃபர்ஸ்ட் என்ற தனியார் ஆங்கில ஊடகத்துக்கு பேட்டியளித்த பழனிவேல் தியாகராஜன், "பணமதிப்பிழப்பு, தேர்தல் பத்திரங்கள், அரசியலமைப்பு சட்டம் 370 நீக்கம் தொடர்பான வழக்குகளை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் உள்ளது.

விவாதங்களே தேவையில்லை
இலவச திட்டங்களுக்கு எதிரான விவாதம் என்பதே அர்த்தமற்ற ஒன்றாக உள்ளது. அர்த்தமற்ற வார்த்தைகள் உச்சநீதிமன்றத்திலிருந்து வந்தாலும் அது அர்த்தமற்றதுதான். இலவசங்கள் தொடர்பான விவாதங்கள் கேலிக்கூத்தானவை. மக்களின் பணத்துக்கு உச்சநீதிமன்றத்தை பாதுகாவலராக அரசியலமைப்பு சட்டம் சுட்டிக்காட்டவே இல்லை. தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மக்கள் பணத்தை எப்படி செலவு செய்வது என்று சட்டமன்ற, நாடாளுமன்றத்தில் முடிவு செய்வார்கள்." என்று பேசினார். அதாவது நீதிமன்றம் அரசின் கொள்கை முடிவுகளில் தலையிட தேவையில்லை என்பது பிடிஆர் கருத்தாக இருந்தது.












Click it and Unblock the Notifications