உதயநிதி ஸ்டாலினுக்கு நிம்மதி.. எதிராக தொடரப்பட்ட 2 தேர்தல் வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் டிஸ்மிஸ்!
சென்னை: தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான இரு தேர்தல் வழக்குகளை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே அமைச்சர் உதயநிதிக்கு எதிரான தேர்தல் வழக்குகளை தள்ளுபடி செய்திருந்தது.
தற்போது அமைச்சராக உள்ள உதயநிதி ஸ்டாலின் 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் சென்னை சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டார். அத்தேர்தலில் 69,355 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார் உதயநிதி ஸ்டாலின். தற்போது தமிழக அமைச்சரவையிலும் இடம்பெற்றிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.

உதயநிதி ஸ்டாலின் தமது வேட்பு மனுவில் எந்தவித குற்ற வழக்குகளும் தம் மீது நிலுவையில் இல்லை என தெரிவித்திருந்தார். ஆனால் உதயநிதி ஸ்டாலின் மீது 22 வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன என்பதைச் சுட்டிக்காட்டி தேசிய மக்கள் கட்சி வேட்பாளரான எம்.எல்.ரவி சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் தொடர்ந்தார். இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்தது.
இவ்வழக்கு விசாரணையின் முடிவில், உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. மீதான குற்றச்சாட்டுக்களுக்கு அடிப்படை ஆதாரங்கள் இல்லை என அதிரடியாக தீர்ப்பளித்தது சென்னை உயர்நீதிமன்றம். இது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் அளித்த விளக்கங்களையும் சென்னை உயர்நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.

சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு எதிராக தேசிய மக்கள் கட்சி வேட்பாளரான எம்.எல்.ரவி, உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தார். எம்.எல்.ரவி தமது மனுவில், தேர்தலின் போது உதயநிதி தாக்கல் செய்த வேட்பு மனுவில் தவறான, பொய்யான தகவல்கள் இடம்பெற்றுள்ளன. தனது வேட்பு மனுவோடு இணைத்து வழங்கும் படிவம்-26ல் தன் மீது எந்த கிரிமினல் வழக்கும் இல்லை என உதயநிதி தெரிவித்திருக்கிறார். ஆனால் அந்த தகவல் என்பது பொய்யானது. ஏனெனில் உதயநிதி மீது 22 வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆகையால் வேட்பு மனுவில் பொய்யான தகவல்களை தெரிவித்த
உதயநிதியின் வெற்றி செல்லாது என அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது.
அத்துடன் தேர்தலின் போது இதனை தேர்தல் அதிகாரிகளிடம் தெரிவித்தோம். உதயநிதியின் வேட்புமனுவை ஏற்றது என்பது மக்கள் பிரதிநித்துவ சட்டத்தின் கீழ் தவறானது. விதிகளை மீறிப் பெற்ற இந்த வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான 2 தேர்தல் வழக்குகளையும் இன்று டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டது. மேலும் சென்னை உயர்நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவில் தலையிடுவதற்கு முகாந்திரமும் இல்லை என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications