சுவாதி கொலை.. ஏழரை ஆண்டுகள் கடந்தும் ரயில் நிலையங்களில் பாதுகாப்பில்லை.. ஹைகோர்ட் அதிருப்தி
சென்னை: சுவாதியின் கொடூர கொலைக்கு பிறகும் ரயில் நிலையங்கள் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக சென்னை ஹைகோர்ட் தெரிவித்துள்ளது. ஏழரை ஆண்டுகள் கடந்தும் 10 சதவிகித ரயில் நிலையங்களில் கூட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படவில்லை என்று நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் 2016ஆம் ஆண்டு ஜூன் மாதம் 24ஆம் தேதி மென்பொறியாளர் சுவாதி என்பவர் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து மாநிலத்தின் முக்கியமான இடங்களில் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

இந்த நிலையில் பொது இடங்களில் கண்காணிப்பு குறைபாடுகளை களைந்து, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிபடுத்தும் வகையில் தாமாக முன்வந்து வழக்கை விசாரிக்க வேண்டுமென மூத்த நீதிபதியாக இருந்த என்.கிருபாகரன் சென்னை உயர் நீதிமன்றத்திடம் கோரிக்கை வைத்திருந்தார்.
அதனை ஏற்று அப்போதைய தலைமை நீதிபதி அமர்வு பொது நல வழக்கை விசாரணைக்கு எடுத்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கு, தற்போதைய தலைமை நீதிபதி கங்கபுர்வாலா, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், சமீபத்தில் கூட ரயில் நிலையத்தில் பெண் ஒருவர் தாக்கப்பட்டதாக குறிப்பிட்டதுடன், குற்றச் சம்பவங்கள் நடைபெற சாதகமான இடமாக ரயில் நிலையங்கள் இருப்பதாக தெரிவித்தனர். ரயில் நிலையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் எந்த அளவிற்கு உள்ளது என ரயில்வே துறை பதிலளிக்க உத்தரவிட்டுள்ளனர்.
பொது இடங்களில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளின் நிலை குறித்த அறிக்கையை தாக்கல் செய்வதற்கு தமிழக அரசிற்கு அவகாசம் வழங்கி, விசாரணையை செப்டம்பர் 27ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபூர்வாலா, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் 27ஆம் தேதி புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகத்தில் மொத்தம் உள்ள 442 ரயில் நிலையங்களில் 35 ரயில் நிலையங்களில் மட்டுமே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருப்பதாகவும், மீதமுள்ள 407 ரயில் நிலையங்களில் 2024 -25-ம் நிதி ஆண்டில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என்றும் ரயில்வேதுறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கை, ரயில் நிலையங்களின் பாதுகாப்பில் ரயில்வே நிர்வாகத்தின் அக்கறையின்மையையே காட்டுவதாக நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.
கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதற்கு இவ்வளவு நீண்ட கால அவகாசம் எடுத்துக் கொள்வது ஏன் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியபோது, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதற்கான நிதி, தவணை முறையில் வழங்கப்படுவதால் இந்த கால அவகாசம் தேவைப்படுவதாக, ரயில்வேதுறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
கடந்த 2016ஆம் ஆண்டு முதல் இந்த வழக்கில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது தொடர்பாக பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், ஏழரை ஆண்டுகள் கடந்தும் 10 சதவிகித ரயில் நிலையங்களில்கூட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படவில்லை என்று அதிருப்தி தெரிவித்தனர்.
ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் நடைமுறையை விரைவுபடுத்த வேண்டும் என்று அறிவுறுத்திய நீதிபதிகள், இது போன்ற விஷயங்களுக்கு நிதியைக் காரணம் காட்டக் கூடாது என்றும், எதிர்காலத்தில் அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் விரைவில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் எனவும், அதற்கான கால அட்டவணையை நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்றும் ரயில்வேதுறைக்கு உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை அடுத்த மாதத்துக்குத் தள்ளிவைத்தனர்.












Click it and Unblock the Notifications