சர்க்கரை அட்டைதாரர்களுக்கு அரசு ஸ்வீட் நியூஸ்.. ரேஷன் வாங்குவதில் மாற்றம்! இனி அலைச்சலில்லை.. ஹேப்பி
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் தொடர்ந்து முக்கிய அறிவிப்புகளும், மகிழ்ச்சி தகவல்களும் வெளியாகிய வண்ணம் உள்ளன.. அந்தவகையில், நேற்றைய தினமும் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரேஷனில் அனைத்து பொருட்களுமே, உரிய முறையில், உரிய நேரத்தில், உரிய அளவில் கிடைக்காமல் புகார்கள் கிளம்பி வரும் நேரத்தில், தமிழக அமைச்சர் தந்திருக்கும் இந்த அறிவிப்பானது பொதுமக்களுக்கு நிம்மதியை தந்து வருகிறது.
கடந்த வாரம் தமிழக சட்டசபை நிகழ்வின்போது கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் உரையாற்றியபோது, "ஆந்திர மாநிலம், தெலுங்கானாவை போலவே, வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருள்கள் வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளதை போலவே, தமிழ்நாட்டிலும் ஆராய்ந்து செயல்படுத்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது.. அனைத்து ரேஷன் கடைகளுக்கும் சொந்தக் கட்டிடம் கட்டும் பணி மேற்கொள்ளப்படும் " என்று அதிரடியாக அறிவித்தார்.

பிறகு உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி உரையாற்றியபோது, திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, 19.62 லட்சம் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டிருக்கும் நிலையில், விரைவில், புது ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுவிடும் என்றார். இப்படிப்பட்ட சூழலில், நேற்றைய தினம் மீண்டும் ஒரு சர்ப்ரைஸ் அறிவிப்பை அமைச்சர் சக்கரபாணி வெளியிட்டிருக்கிறார்.
சட்டசபையில் அடுத்தடுத்த அதிரடி
சட்டசபையில் நடந்த கேள்வி நேர விவாதத்தின்போது, திமுகவின் அசோக்குமார் பேசும்போது சில முக்கிய கோரிக்கைகளை விடுத்தார்.. குறிப்பாக, "தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் நெல் சேமிப்பு கிடங்கு எதுவுமே இல்லை. எனவே, ஆத்தாலுார் வீரகாளியம்மன் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் கிடங்கு அமைத்து தர வேண்டும்.
ஒரத்தநாடு அடுத்த பஞ்சநதிகோட்டையில் அமைத்தது போலவே, மெகா நெல் கொள்முதல் நிலையத்தை, பேராவூரணியிலும் அமைக்க வேண்டும். "பாயின்ட் ஆப் சேல்" கருவிகளை, பகுதி நேர ரேஷன் கடைகளுக்கும் வழங்க வேண்டும். அத்துடன், வாடகை கட்டடத்தில் இயங்கும் ரேஷன் கடைகளுக்கு சொந்த கட்டடம் கட்டித்தர வேண்டும். அனைத்து ரேஷன் பொருட்களும் ஒரே நேரத்தில் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்..
ரேஷன் கடைகளுக்கு உத்தரவு
இதற்கு அமைச்சர் சக்கரபாணி பதிலளிக்கும்போது, தமிழகத்தில், 37,328 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன.. இதில், 2,035 பகுதி நேர ரேஷன் கடைகளுக்கு மட்டுமே, பாயின்ட் ஆப் சேல் கருவிகள் வழங்கப்படவில்லை. எனினும் விதிமுறைகளை பின்பற்றி, அனைத்து ரேஷன் கடைகளுக்கு பிரித்து தரப்படும்.
ஒரே நேரத்தில், அரிசி, பாமாயில், கோதுமை, சர்க்கரை, பருப்பு போன்றவற்றை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அதற்காக, ஒவ்வொரு மாதமும், 15ம் தேதி முதல் நுகர்பொருள் வாணிப கழக கிடங்குகளில் இருந்து ரேஷன் கடைகளுக்கு பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன.
ஸ்டாக் இல்லை ஸ்டாக் இல்லை
இதனால், கடைகளில், 60 சதவீத பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டு, 1ம் தேதி முதல் பொது மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. ஒரே நேரத்தில் ரேஷன் பொருட்கள் கிடைக்கவில்லை என்று புகார் வந்தால், சொன்னால், அதற்கு உரிய நடவடிக்கை உடனடியாக எடுக்கப்படும்" என்றார்.
அமைச்சரின் இந்த அறிவிப்பானது, ரேஷன் அட்டைதாரர்களுக்கு மகிழ்ச்சியை தந்து கொண்டிருக்கிறது.. காரணம், ரேஷன் கடைகளில் கிராமமோ, நகரமோ ஒரேயொரு முறை ரேஷன் கடைக்கு வந்து, எல்லா பொருளையுமே பெற்றுச்செல்லும் நிலைமை இல்லை... ரேஷனில் எப்போது சென்றாலும், அரிசி, சர்க்கரை மட்டும் தான் எளிதாக கிடைக்கிறதே தவிர பாமாயில், துவரம்பருப்பு உள்ளிட்ட பொருட்கள் உடனே வழங்கப்படுவதில்லை என்ற அதிருப்தி பொதுமக்களிடம் உள்ளது.
கோடையில் அலைச்சல் குறையும்
இதனால், பாமாயில். துவரம்பருப்பு வாங்க வேண்டுமானால், இதற்கென தனியாக இன்னொரு நாளில் ரேஷன் கடைகளுக்கு செல்ல வேண்டியிருக்கிறதாம். அப்படியே சென்றாலும், ஸ்டாக் இன்னும் வரவில்லை என்ற பதில்தான் கிடைப்பதாக நொந்து போய் கூறிவருகிறார்கள்.
இப்படிப்பட்ட சூழலில், அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ள இந்த அறிவிப்பானது, ரேஷன்தாரர்களுக்கு நிம்மதியை தந்து வருகிறது. தற்போது கோடைக்காலம் என்பதால், அடிக்கடி ரேஷனுக்கும் சென்று வரமுடியாத சூழலில், இனி ஒரே நேரத்தில் ரேஷன் பொருட்களை பெற்றுச்செல்வதும், அலைச்சலை தவிர்க்க உதவும் என்றே தெரிகிறது.












Click it and Unblock the Notifications