‘தகைசால் தமிழர்’ விருது பெற்ற கி.வீரமணி.. ரூ. 10 லட்சத்தை என்ன செய்யப் போகிறார் தெரியுமா? அடடே!
சென்னை: திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிக்கு இன்று நடைபெற்ற சுதந்திர தின விழாவில், முதல்வர் ஸ்டாலின், 'தகைசால் தமிழர்' விருது அளித்து ரூ.10 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார். அந்த 10 லட்சத்தை கி.வீரமணி என்ன செய்யப் போகிறார் தெரியுமா?
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிக்கு இந்த ஆண்டுக்கான 'தகைசால் தமிழர்' விருதை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார். நாட்டின் 77வது சுதந்திர தினத்தையொட்டி, சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்று காலை தேசியக் கொடியேற்றினார்.

இதனைத் தொடர்ந்து, தமிழ்நாட்டுக்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றியவா்களைப் பெருமைப்படுத்தும் வகையில் செயல்படுபவர்களுக்கான 'தகைசால் தமிழா்' விருதை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிக்கு முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். இந்த விருதுடன் ரூ. 10 லட்சத்துக்கான காசோலையும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டது.
தகைசால் தமிழர் விருது, திமுக ஆட்சிக்கு வந்தபிறகு 2021-ஆம் ஆண்டில் இருந்து அளிக்கப்படுகிறது. முதல் ஆண்டுக்கான விருது, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் சங்கரய்யாவுக்கு வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு விருது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் நல்லகண்ணுக்கு அளிக்கப்பட்டது. மூன்றாவது ஆண்டில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி இந்த விருதைப் பெற்றுள்ளார்.
தகைசால் தமிழர் விருதைப் பெற்ற கி.வீரமணி, "இது தந்தை பெரியாருக்கு கொடுக்கப்பட்ட விருது. எனக்கு வழங்கப்பட்டுள்ள ரூ.10 லட்சம் பரிசுத் தொகையை, திருச்சியில் அமையவுள்ள சிறுகனூர் பெரியார் உலகத்திற்கு நன்கொடையாக வழங்கவுள்ளேன்." என அறிவித்துள்ளார்.
திருச்சி சிறுகனூரில் பெரியார் உலகம் என்ற பெயரில் பிரமாண்ட பன்னோக்கு திறன் வளர் மையம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்றது. பெரியார் உலகம் மொத்தம் 27 ஏக்கர் பரப்பளவில், ரூ.60 கோடியில் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. 6 ஆண்டில் பணிகளை முடிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் பெரியாருக்கு 95 அடி உயரத்தில் சிலையும், 60 அடியில் பீடமும் என 155 அடியில் சிலை நிறுவப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications