தாசில்தார் டூ விஏஓ.. திருவள்ளூர் அரசு நிலத்துக்கே காசு? நில எடுப்பு விவகாரத்தில் நம்ப முடியாத சம்பவம்
சென்னை: தமிழகத்தின் வருவாய்த்துறையிலும், பதிவுத்துறையிலும், லஞ்ச லாவண்யங்கள் அதிகரித்து வரும்நிலையில், அதற்கேற்றார்போல் கைது நடவடிக்கைகளும் பெருகி கொண்டே வருகின்றன. லஞ்ச நடமாட்டத்தை குறைக்க, ஆன்லைனிலேயே பல வசதிகளை அரசு செய்து தந்திருந்தும்கூட, சில அதிகாரிகள் லஞ்சம் வாங்கி பொதுவெளியில் சிக்கி அசிங்கப்பட்டுவிடுகிறார்கள்.. அப்படித்தான் திருவள்ளூரிலும் 3 பேர் கைதாகி உள்ளார்கள்..
தமிழகத்தை பொறுத்தவரை, பொதுமக்களின் வசதிக்காக, எந்நேரத்திலும் எவ்விடத்திலிருந்தும் நிலஅளவை செய்ய https://tamilnilam.tn.gov.in/citizen என்ற இணையத்தில் விண்ணப்பிக்கும் வசதி செய்து தரப்பட்டுள்ளது.

இதன்மூலம், நிலத்தை அளவீடு செய்வதற்காகவும், விண்ணப்பிப்பதற்காகவும், வட்டாட்சியர் அலுவலகங்களுக்கும் பொதுமக்கள் நேரில் செல்ல தேவையில்லை.
நில உரிமையாளர்கள்
அதேபோல, நில அளவை கட்டணம் உள்ளிட்ட கட்டணங்களை செலுத்த வங்கிகளுக்கும் செல்ல வேண்டியதில்லை. நில உரிமையாளர்களின் இதுபோன்ற வசதிகளை கருத்தில் கொண்டு, பூமி ராசி என்ற இணையதளத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. நிலம் கையகப்படுத்தும் பணிக்கு, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு உதவுவதற்காகவே, மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் உருவாக்கியதுதான், "பூமி ராசி' என்ற வெப்சைட் ஆகும்..
நிலம் கையகப்படுத்துதல் குறித்த சட்டப்பூர்வ நடைமுறைகள், நில உரிமையாளர்களுக்கு விரைவாக இழப்பீட்டு தொகை வழங்குவது, நில உரிமையாளர்களே தங்களுக்கு சேர வேண்டிய இழப்பீடு பட்டுவாடா நிலையை தெரிந்து கொள்வது போன்ற பல வசதிகள் இந்த வெப்சைட் மூலம் பெறலாம்.
ஆன்லைனிலேயே இப்படி பல வசதிகள் இருந்தும், ஒருசிலர் தனிநபர்களை நம்பி ஏமாந்துவிடுவதும் ஆங்காங்கே நடக்கின்றன.. நேற்று 2 விதமான நில மோசடிகள் நடந்து, சம்பந்தப்பட்டவர்கள் கைதாகி உள்ளனர்.
62 சென்ட் நிலம்
பாலக்காடு மாவட்டம் ஒத்தப்பாலம் தாலுகா வாணியங்குளம் ஊராட்சியில் பீல்ட் துணை அதிகாரியாக பணிப்புரிபவர் பாசில்.. இவரிடம் கோதக்குறிச்சியை சேர்ந்த நபர் ஒருவர், தன்னுடைய அப்பாவின் பெயரிலுள்ள 62 சென்ட் நிலத்திற்கு நில உரிமை சான்றிதழ் வேண்டி விண்ணப்பித்தாராம். அதற்கு பீல்ட் அதிகாரி பாசில், 1000 ரூபாய் லஞ்சம் வேண்டுமென கேட்டதாக தெரிகிறது.
இதுகுறித்து, விண்ணப்பதாரர் பாலக்காடு விஜிலன்ஸ் டிஎஸ்பி புகார் அளிக்கவும், கையும் களவுமாக பாசில் தற்போது கைதாகி உள்ளார்.. மீது விஜிலன்ஸ் அதிகாரிகள் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.
நில எடுப்பு - வட்டாட்சியர்
அதேபோல திருவள்ளூர் மாவட்டத்திலும் ஒரு சம்பவம் இன்று நடந்துள்ளது.. சாலை விரிவாக்கத்திற்காக அரசு கையகப்படுத்திய இடத்திற்கு இழப்பீடு பணம் ரூ.45 லட்சத்தை விடுவிக்க 75 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய நில எடுப்பு வட்டாட்சியர் உட்பட 2 பேர் கைதாகி உள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் சாலைகளை விரிவாக்கம் செய்யும் பணிகள், கடந்த 1 வருட காலமாகவே நடந்து கொண்டிருக்கின்றன. அதிலும், மகாபலிபுரம் வரை செல்லும் சாலை விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக திருவள்ளூரில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் பகுதிக்கு சாலை விரிவாக்க பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன.
இப்படிப்பட்ட சூழலில், அதற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டு இழப்பீட்டுத் தொகை அரசின் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.
45 லட்சம் இழப்பீட்டு தொகை
திருவள்ளூர் அடுத்த போளிவாக்கம் பகுதியில் இயங்கி வரும் வேல்யூ ஸ்பேஸ் என்ற நிறுவனத்திற்கு சொந்தமான இடத்தை கையகப்படுத்திய அரசு அதற்காக சுமார் 45 லட்சம் ரூபாய் இழப்பீட்டுத் தொகையாக தரவேண்டியிருந்தது..
இந்த தொகையை பலமுறை நில எடுப்பு தனி வட்டாட்சியர் எட்வர்ட் வில்சனிடம் அந்நிறுவனத்தின் மேலாளர் ஆஸ்டின் ஜோசப் என்பவர், ரூ.1 லட்சம் தந்தால்தான் நிலம் கையகப்படுத்தியதற்கான இழப்பீட்டுத் தொகை ரூ.45 லட்சத்தை விடுவிக்க முடியும் என்றாராம்.. இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த ஆஸ்டின் ஜோசப், உடனே லஞ்ச ஒழிப்பு துறைக்கு புகார் தந்துவிட்டார்.
3 பேர் கைது - விசாரணை
இதையடுத்து அதிகாரிகளின் திட்டப்படி, ரசாயனம் தடவிய 75 ஆயிரம் ரூபாயை தனி வட்டாட்சியர் எட்வர்ட் வில்சனுக்கு ஏஜென்ட்களாக செயல்பட்ட கோமதிநாயகம் மற்றும் வெள்ளத்துரை ஆகியோரிடம் வேல்யூ ஸ்பேஸ் கம்பெனி நிறுவன ஊழியர் தந்தபோது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள், தனி வட்டாட்சியரை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர்.
கோமதிநாயகம் மற்றும் துரை உள்ளிட்டோர் ஏஜெண்ட்டுகளாக செயல்பட்டுள்ளதால் அவர்களையும் கைது செய்து விசாரணை நடக்கிறது.. லஞ்சமாக தரப்பட்ட 75 ஆயிரம் ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.. அரசு கையகப்படுத்திய நிலத்திற்கு, இதுவரை இன்னும் எத்தனை பேரிடம், எத்தனை லட்சம் ரூபாய் லஞ்சமாக பெற்றிருக்கிறார்கள்? என்றும் கைதானவர்களிடம் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications