சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தாலிபான்கள் கொடி.. பரபரத்த மகாபலிபுரம்.. நடந்தது என்ன?
சென்னை: சென்னையில் 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தாலிபான்களின் கொடியால் சர்ச்சை எழுந்தது.
சென்னை மகாபலிபுரம் அருகே பூஞ்சேரியில் 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இந்தியாவில் முதல் முறையாக இந்த போட்டி நடைபெறுகிறது.
சுமார் 186 நாடுகளிலிருந்து 2000-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் இந்த போட்டியில் பங்கேற்றுள்ளனர். இந்த செஸ் ஒலிம்பியாட்டில் ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த வீரர்களும் பங்கேற்றுள்ளனர்.
அமெரிக்க படை
ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு அமெரிக்க படையினர் வெளியேறிய நிலையில் அங்கிருந்த அஷ்ரப் கானி அரசு கவிழ்க்கப்பட்டு அவர் தாலிபான்களால் வெளியேற்றப்பட்டார். பின்னர் ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் ஆட்சி நடைபெறுகிறது. இதையடுத்து இந்த தாலிபான் அரசு தங்கள் நாட்டிற்கென ஒரு கொடியை அறிமுகம் செய்துள்ளது.
செஸ் ஒலிம்பியாட்
சென்னை செஸ் ஒலிம்பியாட் நடைபெறும் அரங்கின் முன் பகுதியில் அந்த போட்டியில் பங்கேற்றுள்ள அனைத்து நாடுகளின் கொடிகள் அடங்கிய வரவேற்பு பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. அது போல் அந்த போட்டி நடைபெறும் அரங்கத்திற்கு செல்லக் கூடிய சாலையின் இரு புறத்திலும் அனைத்து நாடுகளின் கொடிகளும் நடப்பட்டுள்ளன.
கொடி நீக்கம்
இந்த நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறும் இடத்தின் முகப்பு பகுதியில் ஆப்கானிஸ்தான் நாட்டின் கொடியாக தாலிபான்கள் கொடி இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தியாவில் தற்போது வரை தாலிபான்களின் அரசை அங்கீகரிக்கவே இல்லை. எனவே இந்த முகப்பு பகுதியில் வைக்கப்பட்டிருந்த தாலிபான்களின் கொடி அகற்றப்பட்டது.
தாலிபான்கள் கொடி
தாலிபான்கள் கொடிகளால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டு அந்த கொடி நீக்கப்பட்டதும் சகஜ நிலை ஏற்பட்டது. இந்த கொடியை நிருவியது யார் என்பது தெரியவில்லை. எனினும் இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் என தெரிகிறது. இந்த போட்டியில் கலந்து கொண்டுள்ள ஆப்கான் வீரர்களும் தங்கள் நாட்டின் மூவர்ணக் கொடியின் கீழ் விளையாடி வருகிறார்கள். அது போல் தாலிபான்கள் செஸ் என்பது ஒரு சூதாட்டம் என நம்பிய நிலையில் ஒலிம்பியாட்டிற்கு ஆப்கானிஸ்தான் வீரர்களை அனுப்பியது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது.