'பிளான் ஹெட்-15'.. தாம்பரத்தில் களமிறக்கப்படும் நான்காவது கை.. சென்னை மக்களுக்கு அடித்த ஜாக்பாட்
சென்னை: தாம்பரம்-செங்கல்பட்டு இடையே நான்காவது ரயில் பாதை அமைக்க தெற்கு ரயில்வேக்கு, ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டத்திற்கான உத்தேச செலவு ₹757.18 கோடி ஆகும். இது மாநிலத்தின் ரயில்வே இணைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
தற்போது, சென்னை கடற்கரை - விழுப்புரம் - திருச்சிராப்பள்ளி - கன்னியாகுமரி வழித்தடத்தில் தாம்பரம் - செங்கல்பட்டு பகுதி மூன்று ரயில் பாதைகளைக் கொண்டுள்ளது. இந்த வழித்தடம் புறநகர், நீண்ட தூர மற்றும் சரக்கு ரயில்களுக்கான சேவைகளை வழங்குகிறது.

சரக்கு ரயில்களுக்கான சேவை
புறநகர், விரைவு மற்றும் சரக்கு ரயில் போக்குவரத்தின் அதிகப் பயன்பாடு காரணமாக, இந்த வழித்தடத்தில் அடிக்கடி நெரிசல் ஏற்படுகிறது. இது நேரமின்மையையும், கொள்ளளவு விரிவாக்கத்தையும் பாதிக்கிறது என்று தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நான்காவது பாதை அமைப்பது, தெற்கு மாவட்டங்களுக்குச் செல்லும் பயணிகளுக்குப் பெரிதும் உதவும். இதன் மூலம் நெரிசல் குறைந்து, புறநகர் ரயில் சேவைகள் சீராக இயங்கும், இதனால் போக்குவரத்து மேம்படும்.
தற்போதுள்ள மூன்று வழித்தடத்தின் பயன்பாட்டு அளவு 87% ஆக உள்ளது. இது 136% ஆக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, நான்காவது பாதை நெரிசலைக் குறைத்து, சாலைப் போக்குவரத்தில் இருந்து ரயில் போக்குவரத்திற்கு மாற்றத்தை ஊக்குவிக்கும். இது பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்திற்குப் பயனளிக்கும் என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது. நீண்ட காலமாக மக்கள் வைத்த கோரிக்கைகளை ஏற்கும் விதமாக நான்காவது லைன் இங்கே அமைக்கப்பட உள்ளது.
பிளான் ஹெட்-15
ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், ₹757.18 கோடி மதிப்பிலான இந்த முக்கிய திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளார். தெற்கு ரயில்வே இந்த முக்கிய கொள்ளளவு மேம்பாட்டுப் பணியை விரைவில் மேற்கொள்ள உள்ளது. இத்திட்டம், 'பிளான் ஹெட்-15'ன் கீழ், 'எரிசக்தி, கனிம மற்றும் சிமெண்ட் வழித்தடத்தின்' ஒரு பகுதியாக தெற்கு ரயில்வேயால் செயல்படுத்தப்படும்.
தாம்பரம், கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு, ஸ்ரீபெரும்புதூர் ஆகிய இடங்களிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் அதிகரித்து வரும் புறநகர் போக்குவரத்து மற்றும் பெரிய அளவிலான குடியிருப்பு மற்றும் தொழில்துறை வளர்ச்சி காரணமாக, தாம்பரம்-செங்கல்பட்டு நான்காவது பாதை தினசரி பயணிகள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், அலுவலகம் செல்பவர்கள், ஐடி வல்லுநர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும்" என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
நான்காவது பாதை அமைக்கப்பட்ட பிறகு, ஆண்டுக்கு 1.344 மில்லியன் டன் கூடுதல் சரக்குப் போக்குவரத்தை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் ₹157 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும். இந்த வழித்தடம் ஒரகடம், படப்பை மற்றும் காஞ்சிபுரத்தில் உள்ள சிப்காட் தொழில் பூங்காக்களில் அமைந்துள்ள பல தொழில்துறை அலகுகளை உள்ளடக்கியது.
காஞ்சிபுரம் அருகே பரந்தூரில் முன்மொழியப்பட்ட விமான நிலையம், இந்த வழித்தடத்தில் பயணிகளின் தேவையை மேலும் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் தாம்பரம் இன்னும் ஒரு பெரிய முனையமாக மேம்படுத்தப்படும்போது, இந்த நான்காவது புதிய பாதை எதிர்கால போக்குவரத்துத் தேவைகளைப் பூர்த்தி செய்யும். புறநகர் மற்றும் விரைவு ரயில் சேவைகளைப் பிரித்து, செயல்பாட்டுத் திறனை மேம்படுத்தி, பயணிகளின் பயண நேரத்தைக் குறைக்கும்" என்று அந்த அறிக்கை மேலும் குறிப்பிட்டது.












Click it and Unblock the Notifications