தாம்பரம் செங்கல்பட்டு ரூட் வேற லெவலில் மாறும்.. 4-வது வழித்தட பணி எப்போது தொடங்கும்? வெளியான அப்டேட்
சென்னை: தமிழகத்தில் மிக முக்கிய ரயில்வே ரூட்டாக இருக்கக்கூடிய தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடத்தில் 4-வது பாதை அமைக்க மத்திய அரசு கடந்த அக்டோபரில் ஒப்புதல் அளித்தது. கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், இந்த பணிகள் எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு பயணிகள் மத்தியில் நிலவி வந்த நிலையில், இது தொடர்பான புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
சென்னையில் மிக முக்கிய ரயில்வே வழித்தடமாக சென்னை தாம்பரம் - செங்கல்பட்டு ரூட் உள்ளது. சென்னையில் இருந்து வடமாநிலங்களுக்கு செல்லும் ரயில்கள் சென்ட்ரல், கும்மிடிப்பூண்டி, ஆவடி உள்ளிட்ட ரயில் நிலையங்கள் வழியாக செல்கின்றன.

தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடம்
சென்னையில் இருந்து திருச்சி, மதுரை, திண்டுக்கல், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி என பல்வேறு ஊர்களுக்கு செல்ல வேண்டும் என்றால் தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடத்தில்தான் ரயில்கள் பெரும்பாலும் இயக்கப்படுகின்றன. இதனால் சென்னையில் மிக முக்கிய ரயில்வே ரூட் என்றால் அது தாம்பரம் - செங்கல்பட்டு ரூட்டைத்தான் சொல்ல முடியும்.
தற்போது தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு ரூட்டில் 3 வழித்தடங்கள் உள்ளன. இதில் தென் மாவட்டங்களுக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள், மின்சார ரயில்கள், சரக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. சென்னை பீச் டூ தாம்பரம் வழியாக செங்கல்பட்டுக்கு மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்கள் அதிகாலை முதல் இரவு வரை இயக்கப்படுகின்றன.
4 வழித்தடத்திற்கு ஒப்புதல்
மின்சார ரயில்களும் இந்த ரூட்டில் அதிகமாக உள்ளன. இதனால் மூன்றாவது வழித்தடத்தில் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடத்தில் தினமும் 60-க்கும் மேற்பட்ட எக்ஸ்பிரஸ் ரயில்களும், 200-க்கும் மேற்பட்ட மின்சார ரயில்களும் இயக்கப்படுகின்றன. இந்த ரூட்டில் கூடுதல் ரயில்களை இயக்க ஏதுவாக 4 வழித்தடத்திற்கு ஒப்புதல் கோரப்பட்டது.
எப்போது தொடங்கும் என எதிர்பார்ப்பு
இதன்படி கடந்த அக்டோபர் மாதம் இந்த ரயில்வே ரூட்டிற்கான ஒப்புதலை மத்திய அரசு வழங்கியது. 30 கி.மீ. தொலைவு கொண்ட இந்த ரூட்டில் 4 வழித்தடத்திற்கு ரூ.757.18 கோடி மதிப்பிலான திட்டத்திற்கு ஒப்புதல் கொடுக்கப்பட்டுள்ளது. தாம்பரம் - செங்கல்பட்டு ரூட்டில் தற்போது பயணிகள் பயன்பாடு 87 சதவீதமாக உள்ளது.
4-வது வழித்தடம் பயன்பாட்டுக்கு வந்தால் 136 சதவீதமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல கூடுதலாக மின்சார ரயில்கள், எக்ஸ்பிரஸ் ரயில்களை இயக்க முடியும். இது பயணிகளுக்கு பெரிதும் பலனளிக்கும் என்பதால் இந்த 4வது வழித்தட பணிகள் எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு பயணிகள் இடையே நிலவி வந்தது.
அடுத்த ஆண்டு ஜனவரி முதல்
இந்த சூழலில் அடுத்த ஆண்டு ஜனவரி முதல் கூடுதல் வழித்தடம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கும் என்று ரயில்வே அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளாம்பாக்கம், கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகள் இந்த ரூட்டில் மிக முக்கிய வழித்தடங்களாக உள்ளன.
அதுபோக அதிக அளவில் குடியிருப்புகள் மற்றும் தொழில் வளர்ச்சி நடைபெறும் இடங்களாகவும் மேற்கூறிய பகுதிகள் இருப்பதால், ரயில்வே அமைக்க திட்டமிட்டுள்ள 4வது வழித்தடம் பல்வேறு தரப்பு பயணிகளுக்கும் பலனளிக்கும் என்று தெரிகிறது. ரயில்வே முழு வீச்சில் பணிகளை மேற்கொண்டு, விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்பது பயணிகளின் கருத்தாக அமைந்துள்ளது.












Click it and Unblock the Notifications