‛ஏசியால் வந்த வினை’.. தாம்பரம் - நாகர்கோவில் ரயிலை பாதியில் நிறுத்திய பயணிகள்.. பரபரத்த செங்கல்பட்டு
சென்னை: தாம்பரத்தில் இருந்து நேற்று நாகர்கோவில் புறப்பட்ட ரயிலில் பயணித்த பயணிகள் ஏசியால் கடும் டென்ஷனாகி பாதி வழியில் செங்கல்பட்டில் நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு தினமும் ஏராளமான ரயில்கள் இயங்கி வருகின்றன. அதில் ஒன்று தான் தாம்பரம் - நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில். இந்த ரயில் திங்கள், செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலையில் கன்னியாகுமரி சென்று வருகிறது.

அந்த வகையில் நேற்று 7.20 மணிக்கு தாம்பரத்தில் இருந்து இந்த ரயில் கன்னியாகுமரிக்கு புறப்பட்டது. ஏசி பெட்டிகளில் கூட்டம் அலைமோதியது.
ரயில் புறப்படும்போது பி1 என்ற முன்பதிவு ஏசி பெட்டியில் ஏசி இயங்கவில்லை. இதனால் சிறிது நேரம் ரயில் சென்ற பிறகு ஏசி இயங்கும் என பயணிகள் எதிர்பார்த்தனர். ஆனால் அடுத்த 30 நிமிடத்தில் செங்கல்பட்டு ரயில் நிலையம் வந்தாலும் கூட ஏசி என்பது இயங்கவில்லை. இதனால் பயணிகள் டென்ஷனாகி போகினர்.
அதாவது ஏசி பெட்டி என்பதால் அங்கு காற்று வந்து செல்ல இடைவெளி எதுவும் இல்லை. அதோடு பயணிகளும் அதிகமாக பயணித்தனர். இதனால் பயணிகள் டென்ஷனாகினர். இதுபற்றி அவர்கள் டிடிஆர் மற்றும் காவலர்களிடம் புகார் செய்தனர். ஆனால் அவர்கள் சரியான பதிலளிக்கவில்லை. இதனால் பயணிகள் மேலும் அதிருப்தியடைந்தனர்.
இதனால் கோபமடைந்த பயணிகள் செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் கீழே இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். ரயில் பெட்டியில் ஏசியை சரிசெய்த பிறகே வண்டியை நகர்த்த வேண்டும். இல்லாவிட்டால் ரயில் ஏறி பயணிக்க மாட்டோம். நாங்களும் பணம் கொடுத்து தான் ரயிலில் பயணம் செய்கிறோம். இதனால் ஏசி கட்டாயம் வேண்டும் என்று கூறினர். அவர்களிடம் போலீசார் மற்றும் டிடிஆர் ஆகியோர் சமாதானம் செய்தனர்.
ஆனால் பயணிகள் கேட்கவில்லை. ஏசியை சரிசெய்தே ஆக வேண்டும் என்றனர். இதையடுத்து ரயில்வே அதிகாரிகள் ஏசி பழுது பார்ப்போரை அங்கு அனுப்பி வைத்தனர். அவர்கள் ஏசியை பழுது பார்த்தனர். அதன்பிறகு ரயில் அங்கிருந்து தாமதமாக கன்னியாகுமரி நோக்கி புறப்பட்டு சென்றது. இந்த சம்பவம் நேற்று செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications