ராஜீவ்காந்தியை விட காங்கிரசுக்கு ஸ்டாலின் தான் முக்கியமோ! தமிழ் மாநில காங்கிரஸ் ஆவேசம்!
சென்னை: ராஜீவ்காந்தியை காட்டிலும் காங்கிரஸ் கட்சிக்கு ஸ்டாலின் தான் முக்கியமோ என தமிழ்மாநில காங்கிரஸ் இளைஞரணித் தலைவர் யுவராஜ் வினவியுள்ளார்.
அரசியலுக்காக அன்புத் தலைவர் ராஜீவ்காந்தியை காங்கிரஸ் கட்சியும், நிர்வாகிகளும் மறந்துவிட்டார்கள் என வேதனைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;

2011 நிகழ்வு
2011ல் நான் தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருந்தபோது சட்டமன்றத்தில் மறைந்த பாரதப் பிரதமர் ராஜீவ்காந்தி கொலைவழக்கில் கொலை குற்றவாளிகளை விடுதலை செய்வது தொடர்பாக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அந்த தீர்மானத்தை கண்டித்து மறைந்த பாரதப் பிரதமர் ராஜீவ்காந்தி உடன் உயிர்நீத்த குடும்ப உறுப்பினர்களை அழைத்து சென்னை மெரினா கடற்கரையில் காந்தி சிலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.

முதல்வர் கார் முற்றுகை
சட்டப்பேரவை முடிந்து திரும்பும் முதல்வர் வாகனத்தை காந்தி சிலை முன்பு மறிப்போம் எனக்கூறி ஆர்ப்பாட்டத்தை நடத்தினோம். அப்போது தமிழக காவல்துறை இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் மீது தடியடி நடத்தி எங்களை கைது செய்தது.
அன்று எங்களுக்கு இருந்த உணர்வுகூட இன்று காங்கிரஸ் தலைவர்களுக்கும் தொண்டர்களுக்கும் இல்லை என்பது வேதனை அளிக்கிறது.

தமிழ்மாநில காங்கிரஸ்
இப்போது நடப்பதை பார்க்கும்போது அகில இந்திய காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுக்கு மறைந்த பாரதப் பிரதமர் ராஜீவ்காந்தியை விட ஸ்டாலின் அவர்கள் தான் முக்கியம் போல் தோன்றுகிறது. அகில இந்திய காங்கிரஸ் மற்றும்
தமிழக காங்கிரஸ் செயல்பாடும் இதையே உறுதி செய்கிறது. இவ்வாறு தமிழ்மாநில காங்கிரஸ் இளைஞரணித் தலைவர் யுவராஜ் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

அறப்போராட்டம்
இதனிடையே பேரறிவாளன் விடுதலையை எதிர்த்து தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் இன்று தமிழகம் முழுவதும் அறப்போராட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
ஆனால் அந்தப் போராட்டத்தில் பெரியளவில் எழுச்சி தென்பட்டதாக தெரியவில்லை.












Click it and Unblock the Notifications