மோடி பேச்சு ஒண்ணும் சரியில்ல.. தமாகா மாநில நிர்வாகி கட்சியில் இருந்து விலகல்.. ஜிகே வாசனுக்கு ஷாக்!
சென்னை: பிரதமர் மோடியின் பேச்சுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமாகா மாநில நிர்வாகி கௌதமன், அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 6 கட்ட தேர்தல்கள் முடிவடைந்துள்ளன. முதற்கட்டத்திலேயே கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழ்நாட்டில் தேர்தல் முடிவடைந்தது. லோக்சபா தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இந்நிலையில், பாஜகவுடன் கூட்டணி, மோடியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமாகா மாநில தேர்தல் முறையீட்டு குழு உறுப்பினர் கௌதமன் தமாகா கட்சியில் இருந்து விலகியுள்ளார். கூட்டணி கட்சியான பாஜகவின் செயல்பாடுகள், அதன் தேர்தல் அறிக்கை, அணுகுமுறை எல்லாம் ஜனநாயகத்துக்கு எதிராக உள்ளது என கெளதமன் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழர்களுக்கு எதிராக பிரதமர் மோடி பேசி வருவதாகவும், பாஜவின் செயல்பாடுகள் மற்றும் அக்கட்சியின் தேர்தல் அறிக்கை ஜனநாயகத்திற்கு எதிராக உள்ளதாகவும், அக்கட்சியுடன் கூட்டணி வைத்தது தனக்குப் பிடிக்கவில்லை என்றும் கூறி த.மா.காவிலிருந்து மாநில தேர்தல் முறையீட்டு குழு உறுப்பினர் கௌதமன் விலகியுள்ளார்.
பாஜகவுடன் இணைந்து லோக்சபா தேர்தலைச் சந்தித்தது ஜி.கே.வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி. கடந்த மார்ச் மாதம், தேர்தல் தேதி அறிவிப்புக்கு சில நாட்கள் முன்பாக, இரு கட்சிகளும் கூட்டணி அமைப்பதாக ஜிகே வாசனும் அண்ணாமலையும் இணைந்து அறிவித்தனர். ஜிகே வாசன், பாஜகவுடன் கூட்டணி அறிவித்ததுமே தமாகா நிர்வாகிகள் சிலர் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
பாஜகவுடன் தமாகா கூட்டணி வைத்ததை கண்டித்து தமாகா தலைமை நிலைய செயலாளராக இருந்த அசோகன் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய அசோகன், காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
இந்நிலையில், தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் ஒருசில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், பாஜக உடனான கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து தமாகா நிர்வாகி கட்சியில் இருந்து விலகி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications