இன்று 5ஆவது மெகா தடுப்பூசி முகாம்.. 22.52 லட்சம் பேருக்கு வேக்சின் போட்டு அசத்திய சுகாதார துறை
சென்னை: தமிழ்நாட்டில் இன்று காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை 5ஆவது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் மாநிலம் முழுவதும் சுமார் 22.52 லட்சம் பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.
கொரோனா வைரசின் கோரத் தாண்டவம் இன்னும் முழுமையாக எங்கும் கட்டுக்குள் வரவில்லை. தற்போதைய சூழலில் தடுப்பூசி மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்தும் ஒரே ஆயுதமாகப் பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் இந்த ஆண்டு இறுதிக்குள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு வேக்சின் பணிகள் நடைபெற்று வருகிறது.

5ஆவது மெகா தடுப்பூசி முகாம்
தமிழ்நாட்டிலும் முழு வீச்சில் வேக்சின் பணிகள் நடைபெற்று வருகிறது. மாநிலத்தில் ஞாயிறுதோறும் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. அதன்படி தமிழகம் முழுவதும் இன்று (10.10.2021) ஐந்தாவது மெகா கோவிட் தடுப்பூசி முகாம்கள் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற்றது. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், திண்டுக்கல், கரூர் மற்றும் இராமநாதபுரம் ஆகிய 3 மாவட்டங்களில் நேரில் ஆய்வு செய்தார்.

மக்கள் நல்வாழ்வுத் துறை
இது குறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாட்டில் உள்ள ஆரம்பச் சுகாதார நிலையங்கள். அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள். பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என மொத்தம் 32.017 மையங்களில் மெகா கோவிட் தடுப்பூசி பணிகள் நடைபெற்றது. இம்மையங்களில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைத்து பயனாளிகளுக்கு கோவிட் தடுப்பூசி முதல் மற்றும் இரண்டாம் தவணையும் அளிக்கத் திட்டமிடப்பட்டது.

மெகா தடுப்பூசி முகாம்கள்
இதுவரை நடைபெற்ற நான்கு மெகா கோவிட் தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றுள்ளன. கடந்த செப். 12ஆம் தேதி நடைபெற்ற முதல் மெகா வேக்சின் முகாமில் 28.91 லட்சம் பேருக்கு வேக்சின் போடப்பட்டது. அதேபோல செப். 19ஆம் தேதி நடைபெற்ற முகாமில் 16.43 லட்சம் பேருக்கு கொரோனா வேக்சின் செலுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து செப். 26 மற்றும் அக்டோபர் 3 ஆகிய தேதிகளில் நடைபெற்ற 3ஆவது மற்றும் 4ஆவது மெகா தடுப்பூசி முகாம்களில் முறையே 25.04 லட்சம் மற்றும் 17.04 லட்சம் பேருக்கு வேக்சின் போடப்பட்டது.

22.52 லட்சம் பேருக்கு வேக்சின்
இன்று (10-10-2021) நடைபெற்ற ஐந்தாவது மெகா கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாம்களில் 22,52,641 பயனாளிகளுக்கு கோவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. இதில் முதல் தவணையாக 11,50,351 பயனாளிகளுக்கும் இரண்டாவது தவணையாக 11.02.290 பயனாளிகளுக்கும் கோவிட் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. மேலும், தற்போது அரசு கோவிட் தடுப்பூசி மையங்களில் மட்டுமே 5 கோடிக்கு மேற்பட்ட பயனாளிகளுக்கு கோவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.

அமைச்சர் ஆய்வு
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை திண்டுக்கல், கரூர் மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஆய்வு செய்தார். இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள மண்டபம் இலங்கைத்தமிழர் அகதிகள் முகாம் பகுதியில் அமைக்கப்பட்ட மெகா கோவிட் தடுப்பூசி முகாம்களை நேரில் ஆய்வு செய்தார். மேலும், மாநிலத்தில் இன்று (10.10.2021) நடைபெற்ற ஐந்தாவது மெகா கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாமினை முன்னிட்டு நாளை (11.10.2021) கோவிட் தடுப்பூசி பணிகள் நடைபெறாது எனத் தெரிவித்துள்ளார்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications