"அண்ணே.. ஒரு கரும்பு ஜூஸ் கொடுங்க.. சர்க்கரை கம்மியா"... இப்படித்தான் போய்ட்டிருக்கு!
சென்னை: "அப்பறம் கோவாலு... தேர்தல் வேலைகள் எல்லாம் எப்படி போயிட்டிருக்கு" என்று எட்டிப் பார்த்தால்.. அடச்சே.. அதே மாதிரிதான் இருக்கா என்று அயர்ச்சிதான் வருகிறது.
ஒரு மாற்றமும் இல்லை.. அதே கட்சிகள்.. மாற்றம் என்று சொல்லி களத்திற்கு வந்த கட்சிகளிடமும் அதேபோன்ற காட்சிகள்.. அதே வாக்குறுதிகள்.. அதே பாணி பிரச்சாரம்.. அதே காசு பணம் துட்டு..மணி மணி.. !
இந்தத் தேர்தலிலும் நமக்கு கண்ணுக்கு எட்டியவரை எந்த மாற்றத்தையும் பார்க்க முடியவில்லை. வித்தியாசமாக ஒருத்தர் கூட இல்லை என்பது ஆச்சரியம்தான்.

திராவிடக் கட்சிகள்
திராவிடக் கட்சிகளுக்கு இந்தத் தேர்தல் மிகப் பெரிய ஆசிட் டெஸ்ட் என்பதில் சந்தேகம் இல்லை. காலம் காலமாக வேரூன்றிப் போய் நிற்கும் ஒரு மிகப் பெரிய சித்தாந்தத்தை அசைத்துப் பார்க்க மிகப் பெரிய அளவில் பலரும் சுற்றி வளைத்து கை கோர்த்து நிற்கின்றனர்.

டீம் டீமாக கட்சிகள்
ஏ டீம் , பி டீம், சி டீம், டி டீம் என ஏதோ வகுப்புகளுக்கு செக்ஷன் பிரிப்பது போல கட்சிகளையும் பிரித்து மக்கள் பேச ஆரம்பித்து விட்டனர். ஆனால் இதற்கெல்லாம் சற்றும் அசைந்து கொடுக்காமல் திராவிடக் கட்சிகள் தேர்தல் களத்தில் நிற்கின்றன. ஆனால் நமக்கு இந்தக் கட்சிகள் மத்தியில் யாராவது வித்தியாசமாக இருக்க மாட்டார்களா என்ற ஆயாசம்தான் வருகிறது.

நிறைவேறாத ஏக்கம்
ஒவ்வொரு தேர்தலிலும் மக்களுக்கும் இதே ஏக்கம்தான் வருகிறது. திமுகவுக்கு மாற்று அதிமுக, அதிமுகவுக்கு மாற்று திமுக.. இதைத் தாண்டி இதுவரை எந்த மாற்றத்தையும் மக்கள் ஏற்கவில்லை. ஈர்க்கவில்லை.. அதையும் தாண்டி மக்களை ஈர்த்த சக்திகள் என்றால் முன்பு தேமுதிக, நேற்று நாம் தமிழர்.. இன்று மக்கள் நீதி மய்யம்.

தேய்ந்து போன கட்சிகள்
ஆனால் இவர்களின் நிலை இப்போது எப்படி இருக்கிறது. தேமுதிகவின் கதை கிட்டத்தட்ட முடிந்தே போய் விட்டது. தேய் பிறையாகி விட்ட கட்சியாக மாறி நிற்கிறது தேமுதிக. மாற்றமாக வந்த கட்சி கடைசியில் யாருக்கு எதிராக முளைத்ததோ அவர்களின் மடியிலேயே தஞ்சமடையும் நிலைக்குப் போய் இப்போது புதிதாக முளைத்த ஒரு குட்டி சக்தியிடம் போய் நிற்கும் மோசமான நிலைக்குப் போய் விட்டது.

புதிய கட்சிகளின் தாக்கம்
நாம் தமிழர் கட்சி தொடங்கப்பட்டு பல வருடமாகியும் கூட சித்தாந்த ரீதியாக வெகு ஜன மக்களிடம் ஓரளவு போயும் கூட இன்னும் தனது கணக்கை தொடங்க முடியாமல் தவித்துக் கொண்டுள்ளது. வாக்குகளை மிகப் பெரிய அளவில் பிரிக்கும் சக்தியாக கூட அது இன்னும் மாற முடியவில்லை என்பதே உண்மை. இளைஞர்கள் மத்தியில் ஒரு அலையைப் பரப்பிய கட்சி என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால் பெரிய மாற்றமாக அது மாற முடியாமல்தான் இருக்கிறது.

மக்கள் மனசு
மக்களின் மனதில் இப்போது லேட்டஸ்டாகஇடம் பிடித்திருக்கும் கட்சி கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம். பலரிடமும் இந்தக் கட்சி தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. லோக்சபா தேர்தலில் பெரும் பரபரப்பைக் கிளப்பிய கட்சியும் கூட. ஆனால் விஜயகாந்த்தின் தேமுதிக ஏற்படுத்திய அலையை இந்தக் கட்சி ஏற்படுத்தத் தவறி விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். ஒரு வேளை சட்டசபைத் தேர்தலில் இது ஏதாவது சாதிக்கலாமோ என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.

நம்பகத்தன்மை வரலை
ஒவ்வொரு கட்சியும் ஒரு மாற்று, ஒரு சக்தி என்று கூறிக் கொண்டாலும் கூட ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது மக்கள் எதிர்பார்த்த மாற்றத்தைத் தரும் மாபெரும் சக்தியாக எதுவுமே கண்ணில் படவில்லை என்பதே எதார்த்தம். "சர்க்கரை கம்மியா கரும்புச் சாறு" கேட்டால் எப்படி கிடைக்கும்.. இப்படி ஒரு மீம்ஸ் இப்போது வைரலாகி வலம் வருகிறது. அதைப் பார்த்தபோது நமக்கும் இந்த அரசியல் கட்சிகளின் நிலைதான் நினைவுக்கு வந்தது. காத்திருப்போம்!












Click it and Unblock the Notifications