என்டிஏவில் எல்லா நாளும் கார்த்திகை.. ஒரே குடும்பமா இருக்கோம்! சென்னை வந்ததும் கோயல் சொன்ன வார்த்தை!
சென்னை: பரப்பான அரசியல் சூழலுக்கிடையே இன்று பாஜக தமிழக தேர்தல் பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான பியூஸ் கோயல் தமிழகம் வந்துள்ளார். இன்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமகவின் அன்புமணி ராமதாஸ், அமமுகவின் டிடிவி தினகரன் ஆகியோரை சந்தித்துப் பேசவுள்ளார். அந்த கூட்டணியில் சிக்கல் இருப்பதாக பேசப்பட்ட நிலையில் நாங்கள் அனைவரும் ஒன்றாக ஒரே குடும்பமாக உள்ளோம், தொகுதிப்பங்கீடுக்கு காலக்கெடு நிர்ணயிக்கவில்லை என பியூஷ் கோயல் கூறியுள்ளார்.
2026ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்து முக்கிய கட்சிகளும் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன. ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ளும் நோக்கில் முக ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

அதே நேரத்தில், ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் அதிமுக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணியும் தேர்தல் பணிகளில் வேகமெடுத்துள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இன்று தமிழகம் வந்துள்ளார்.
இன்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமகவின் அன்புமணி ராமதாஸ், அமமுகவின் டிடிவி தினகரன் ஆகியோரை சந்தித்துப் பேசவுள்ளார். குறிப்பாக கூட்டணிக்குள் தொகுதிப் பங்கீடு தொடர்பாக சில சிக்கல்கள் உள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்ட நிலையில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்த சந்திப்பை முன்னிட்டு செய்தியாளர்களிடம் பேசிய பியூஷ் கோயல், கூட்டணியில் எந்த விதமான பிளவும் இல்லை என்றும், அனைவரும் ஒரே குடும்பம் போல இணைந்து செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்." தொகுதிப்பங்கீடு தொடர்பாக எந்தவொரு காலக்கெடும் நிர்ணயிக்கப்படவில்லை. தரமான முடிவை எடுப்பதே முக்கியம். தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) தலைமையில் வலுவான மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. எதிர்காலத்தில் விவசாயிகள், மீனவர்கள், சிறு தொழில் நிறுவனங்கள் மற்றும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் அரசு அமைக்கப்படும்.
தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி மற்றும் நிர்வாகம் தொடர்பாக தற்போதைய அரசு மீது விமர்சனங்கள் உள்ளது. விமர்சித்ததுடன், மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். வரவிருக்கும் தேர்தலில் என்டிஏ கூட்டணி வெற்றி பெற்று நல்ல ஆட்சியை வழங்கும். பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருவது குறித்து கூட்டணி கட்சிகளுடன் ஆலோசித்து விரைவில் முடிவு செய்யப்படும். தேர்தல் பிரச்சாரம் தொடங்கிய பிறகு பிரதமரின் பயண திட்டம் அறிவிக்கப்படும்." என்றார்.
2026 தமிழக சட்டசபை தேர்தலையொட்டி, தமிழகத்தில் அதிமுக, பாஜக, அமமுக, பாமக, தமாகா மற்றும் ஐஜேகே உள்ளிட்ட கட்சிகள் இணைந்து தேசிய ஜனநாயக கூட்டணியாக செயல்பட்டு வருகின்றன. இந்த கூட்டணியில் தொகுதிப்பங்கீடு குறித்த இறுதி முடிவு எப்போது வெளியாகும் என்பது குறித்து அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இன்று கோயல் - எடப்பாடி இடையே நடைபெறவுள்ள முக்கிய சந்திப்புகளுக்குப் பிறகு தொகுதிப் பங்கீடு தொடர்பான அறிவிப்பு வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. குறிப்பாக, கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கும் எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பது குறித்து அரசியல் வட்டாரங்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன.












Click it and Unblock the Notifications