'தமிழ்நாடு' பஞ்சாயத்துக்கு நடுவே ஆளுநர் ஆர்.என்.ரவி. உரையுடன் தமிழ்நாடு சட்டசபை நாளை தொடங்குகிறது!
சென்னை: தமிழ்நாடு பெயருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி எதிர்ப்பு தெரிவித்திருக்கும் நிலையில் தமிழ்நாட்டு சட்டசபை கூட்டத் தொடர் நாளை தொடங்க உள்ளது. தமிழ்நாடு சட்டசபையில் அதிமுக இபிஎஸ் கோஷ்டியின் கோரிக்கையை ஏற்காத நிலையில் அக்கோஷ்டி எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் போராட்டம் நடத்த வாய்ப்புகளும் உள்ளன.
தமிழ்நாடு என்ற பெயருக்கு பதில் தமிழகம் என்ற பெயர் இருப்பதுதான் சரியாக இருக்கும் என தமிழ்நாட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியிருந்தார். தமிழ்நாட்டு ஆளுநர் ஆர்.என்.ரவியின் இந்த பேச்சு கடும் கொந்தளிப்பை தமிழர்களிடத்தில் ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ்நாட்டின் பெரும்பாலான அரசியல் கட்சித் தலைவர் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கடும் கண்டனமும் தெரிவித்துள்ளனர்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் தமிழ்நாடு சட்டசபையின் நடப்பாண்டு முதல் கூட்டத் தொடர் நாளை தொடங்க உள்ளது. 2023-ம் ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத் தொடர் என்பதால் தமிழ்நாட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்ற உள்ளார். தமிழ்நாட்டு ஆளுநர் உரை என்றாலும் தமிழ்நாடு அரசு தயாரித்து தரக் கூடிய உரைதான். ஆகையால் தமிழ்நாடு என்பதை ஆளுநர் உச்சரிப்பாரா? அல்லது தமிழகம் என மாற்றி சொல்வாரா? என்பது பெரும் எதிர்பார்ப்புக்குரியதாக இருக்கிறது.
சட்டசபைக்கு வரும் ஆளுநர் ஆர்.என்.ரவியை, தமிழ்நாடு அரசு தலைமை செயலக வளாகத்தில் தமிழ்நாட்டு சட்டசபை சபாநாயகர் அப்பாவு, தமிழ்நாடு அரசு தலைமை கொறடா கோவி செழியன், தமிழ்நாடு சட்டசபை செயலாளர் சீனிவாசன் ஆகியோர் வரவேற்கின்றனர். இதனைத் தொடர்ந்து ஆர்.என்.ரவிக்கு, தமிழ்நாடு போலீசார் அணிவகுப்பு மரியாதை அளிக்கின்றனர். இதனை தமிழ்நாட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்றுக் கொள்கிறார். பின்னர் ஆளுநர் ஆர்.என்.ரவி, சிவப்பு கம்பள விரிப்புடன் சட்டசபைக்கு அழைத்துவரப்பட உள்ளார். காலை 10 மணிக்கு ஆளுநர் ரவி தமது உரையை வாசிப்பார். ஆளுநர் ஆர்.என்.ரவி. உரையை வாசித்ததும் அதன் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு வாசிப்பார். இந்த உரைகள் அனைத்தும் இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும்.
இதனைத் தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு அலுவலகத்தில் அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டம் கூட்டப்படும் .இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு சட்டசபை கூட்டத் தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது முடிவு செய்யப்படும். இதன்பின்னர் செவ்வாய்க்கிழமையன்று சட்டசபை கூடும் போது, ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்படும். மேலும் திருமகன் ஈவெரா மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் செவ்வாய்க்கிழமையன்று நாள் முழுவதும் சபை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்படக் கூடும். ஜனவரி 11-ந் தேதி முதல் சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் கொண்டுவரப்பட்டு விவாதம் நடைபெறும். இதற்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி தெரிவித்து பேசுவார்.
தமிழ்நாடு அமைச்சரான பின்னர் உதயநிதி ஸ்டாலின், பங்கேற்கும் முதல் சட்டசபை கூட்டத் தொடர். அவருக்கு அமைச்சர்கள் வரிசையில் 10-வது இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அதிமுகவின் ஓ.பன்னீர்செல்வத்துக்கு, எடப்பாடி பழனிசாமி இருக்கைக்கு அருகே இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதிமுக உட்கட்சி மோதலால் ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை தரக்கூடாது என மீண்டும் இபிஎஸ் கோஷ்டி வலியுறுத்தக் கூடும். இதனை முன்வைத்து அதிமுக போராட்டம் நடத்தவும் வாய்ப்புள்ளது.
ரெடியா? 2023ல் சட்டசபை தேர்தலை சந்திக்கும் 9 மாநிலங்கள்.. பாஜகவுக்கு ‛டப்’ கொடுக்கும் ‛கை’..எப்படி?