'தனி ஆவர்த்தனம்'..ரெடியாகும் தமிழ்நாடு பாஜக- உதயமாகிறது தமிழ்நாட்டில் 3-வது அணி- யார் யாரு வருவாங்க?
சென்னை: கூட்டணி கிடையவே கிடையாது என அதிமுக திட்டவட்டமாக அறிவித்துவிட்ட நிலையில் தற்போது தனி கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு பாஜக 'மேலிட' ஒப்புதலுடன் தீவிரப்படுத்தி இருப்பதாக கமலாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியதை டெல்லி மேலிடம் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை போல.. தற்போது 5 மாநில சட்டசபை தேர்தல் வாழ்வா? சாவா? என இருக்கும் நிலையில் அவற்றில் மட்டுமே பாஜக மேலிடம் தீவிரமாக இருக்கிறது. பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் பிரசாரம், வேட்பாளர்கள் தேர்வு, தேர்தல் வாக்குறுதிகள் என படுபிஸியாக இருந்து வருகின்றனர்.

தமிழ்நாடு பாஜக கனத்த மவுனம்: இந்த களேபரத்துக்கு நடுவே வெளியான அதிமுக கூட்டணி முறிவு அறிவிப்பை தற்போதைக்கு ஆறப்போட்டு வைப்பது என்பதுதான் டெல்லி பாஜக முடிவு. இதனையே தமிழ்நாடு பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன், தேசிய தலைமை எங்களை கருத்து சொல்ல வேண்டாம் என சொல்லி இருக்கிறதுஎன வெளிப்படையாகவே தெரிவித்தும் வருகிறார். இதனால் தமிழ்நாடு பாஜக தரப்பில், அதிமுகவின் முடிவு குறித்து பெரும் மவுனம் நிலவுகிறது.
அதிமுக இல்லாமல் களமிறங்குகிறது பாஜக: அதேநேரத்தில் அத்தனை அரசியல் கட்சிகளும் லோக்சபா தேர்தலுக்கு தயாராகி வரும் நிலையில் தமிழ்நாடு பாஜகவும் களத்துக்கு இறங்க வேண்டிய கட்டாயம் உருவாகி உள்ளது. இதனால் 39 லோக்சபா தொகுதிகளுக்கான பொறுப்பாளர்கள் நியமன அறிவிப்பு வெளியிடப்பட இருக்கிறது. இந்த பொறுப்பாளர்கள் நியமனத்தைத் தொடர்ந்து யாரெல்லாம் வேட்பாளர்கள் என்கிற தேடுதல் தொடருமாம். தமிழ்நாடு பாஜகவைப் பொறுத்தவரை ஏற்கனவே சில தொகுதிகளில் இன்னார்தான் வேட்பாளர்கள் என முடிவு செய்யப்பட்டிருக்கின்றன. எஞ்சிய தொகுதிகளிலும் 'வேட்பாளரை' அடையாளம் காணும் பணியும் அடுத்தடுத்து நடைபெறுமாம்.
உதயமாகிறது 3-வது அணி: அத்துடன் அதிகாரப்பூர்வமற்ற நிலையில் கூட்டணியில் சேரக் கூடிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தையையும் தொடங்குவது என்கிற முடிவில் இருக்கிறதாம் தமிழ்நாடு பாஜக. அதிமுக கூட்டணியில் இல்லாத நிலையில் நம்பி வரும் கட்சிகள் எவை? கூடவே கடைசி வரை நிற்கப் போகும் கட்சிகள் எவை? என்பதெல்லாம் இப்போதே பாஜகவில் விவாதங்களாக அரங்கேறத் தொடங்கிவிட்டன. அதிமுகவின் இடத்தில் டிடிவி தினகரன், ஓபிஎஸ் என்பது இப்போதைக்கு தெளிவாகி இருக்கிறதாம். இதர கட்சிகள் கரம் நீட்டுவதைப் பொறுத்து அரவணைப்போம் என்பதுதான் தமிழ்நாடு பாஜகவின் நிலைப்பாடு. திமுக, அதிமுக கூட்டணிகளைத் தொடர்ந்து 3-வது அணியை உருவாக்குகிறது தமிழ்நாடு பாஜக என்பதுதான் லேட்டஸ்ட் நிலவரம்.












Click it and Unblock the Notifications